Friday, December 28, 2007

ஒரு சமையல்காரனும் அவரது மகனும்

ஆறாம் வகுப்பில் ஒரு நாள் மாலை நடைபெற்ற ஆங்கில பாடம் என்னை மிகவும் பாதித்தது. ஆசிரியர் வெகு சாதாரணமாக “what is your father?” எனக் கேட்க மாணவர்கள் சிலர் டொக்டர், என்ஜினியர் என பெருமைப்பட பலர் கிளார்க், ரீச்சர் என்றனர். கிராமப்புற பாடசாலையாதலால் சிலர் farmar என்றனர். எனது முறை வந்த போது நானும் farmar என்றேன். எனது பின்னணியை நன்கறிந்த ஆசிரியர் “கொப்பர் எங்கை கமம் செய்யிறவர்? எத்தினை ஏக்கர் காணி வைச்சிருக்கிறார்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தடுமாற்றமும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன.

ஆசிரியர் அத்துடன் நிறுத்தி விடவில்லை. “கொப்பர் சமையல் வேலை செய்யிறார். "My father is a cook" எண்ட தலைப்பிலை ஒரு பக்க கட்டுரை எழுதிக் கொண்டு வரவேணும்” என்றார்.

ஒவ்வொரு மாணவனும் அடுத்த நாள் அவர்களுடைய தகப்பனின் தொழிலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பக்க கட்டுரை எழுதி வர வேண்டுமென்பது ஆசிரியரின் கட்டளை. எல்லா மாணவர்களினதும் கேலிப் பொருளான நான் அன்றுதான் முதன் முதலாக cook என்ற ஆங்கிலச் சொல்லைக் கேள்விப் பட்டேன். வெட்கம் ஒரு புறமிருக்க ஒரு வசனம் கூட எழுத முடியாத நிலையில் ஒரு பக்க கட்டுரை.

எப்படி எழுதப்போகின்றேன் என்ற பயம். எனது வேதனைக்கான காரணமறிய அம்மா கையாண்ட தந்திரங்கள் தோல்வியைத் தழுவ எனது நல்ல காலம் தீடிரென அப்பா வீட்டுக்கு வந்தார். அடக்கி வைத்திருந்த வெட்கம், வேதனை எல்லாம் அலறியழும் கண்ணீராக மாறியது. எனது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை அப்பாவின் கைகள் துடைத்தன.

“கட்டி சாப்பிட்ட பிறகு நான் சொல்றன். ஒரு பக்கமல்ல இரண்டு பக்கத்துக்கு சொல்றன் எழுதினாச் சரி”

எனது சந்தேகம் - “அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியுமா? – cook என்ற சொல்லையே முதன் முதலாகக் கேள்விப்படும் என்னால் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடியுமா?”

அப்பாவின் பக்கத்தில் கொப்பி பென்சிலுடன் அமர்ந்து புதிய பக்கமொன்றில் My father is a cook என ஆங்கிலத்தில் எழுதினேன். அப்பா கொப்பியைப் பார்த்து விட்டு cook என்ற சொல்லுக்கு பதிலாக sweet maker என்று எழுதச் சொன்னார்.

ஆச்சரியத்துடன் பார்த்த எனக்கு அப்பா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

“கட்டி நான் செய்யிறது சாதாரண சமையலில்லை – அல்வா , கேசரி, போளி , பூந்தி , ஓமப்பொடி, காராசேவு , மைசூர்பாகு. அதில பல item ரொம்ப sweet ஆக இருக்கும். அதனால நான் சுவீட் மேக்கர்” அப்பா தான் தயாரிக்கும் பதார்த்தங்கள் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள், உத்தேச விலை, பதார்த்தங்களின் உணவுப் பெறுமானம் பயன்பாட்டுக் காலம் எல்லாவற்றையும் மிக தெளிவாக சிம்பிள் இங்கிலிசில் சொல்லியதால் சுமார் மூன்று பக்கம் எழுத முடிந்தது. அடுத்த நாள் சில நண்பர்கள் தகப்பன்மாரின் பெரிய உத்தியோகங்களை உச்சரித்த பின் வார்த்தைகளின்றித் தடுமாற எனது கட்டுரை ஆங்கில ஆசிரியரை தடுமாற வைத்தது. பல சொற்கள் அவருக்குப் புதிது என்பதை அவரே ஒத்துக் கொண்டார்.

அப்பா கடைகளில் உள்ள விளம்பர பலகைகள், லொறி , வான் போன்ற வாகனங்களில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத்துக்களை அறிந்து கொண்டதாகவும பொருட்கள் பொதி செய்து வரும் பெட்டி, தகரம் ஆகியவற்றிலுள்ள லேபிள்கள் சிட்டைகள் ஆகியவற்றிலிருந்து அநேக தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறுவார். “வெட்கப்படாமல் பயப்படாமல் ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் பேச வேண்டும், எழுத வேண்டும்” என்று சொல்லுவார். இதனால் எனனைப் பற்றி , எனது தொழிலைப் பற்றி, எனது ஊரைப் பற்றி , எனது நாட்டைப்பற்றி, சமகால நிகழ்வுகளைப் பற்றி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சரளமாகக் கதைக்கவும் இதே விடயங்களை இன்னொருவரிடமிருந்த அறிந்து கொள்ள எத்தகைய கேள்விகளைக் கேட்க வேண்டுமென்பதும் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். ஆனால் நான் கடமையாற்றும் இடத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியுமென பிறர் நினைப்பதற்கு sweet marker ரின் வழிகாட்டல் தான் காரணம்


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

2 comments:

சீமாச்சு.. said...

உடுவையாரே, ரொம்ப நெகிழ்வான பதிவு. இது போன்ற நிகழ்வுகள் நம் சிறுவர்களுக்குப் புதிதல்ல.. உங்கள் தந்தையார் அதை ஏற்றுக்கொண்ட விதமும் மிக உயர்வானது..

அன்புடன் சீமாச்சு...

உடுவை எஸ். தில்லைநடராசா said...

சீமாச்சு,
உங்கள் குறிப்பை பார்த்தேன், படித்தேன்.நன்றி. தொடர்ந்தும் தொடர்பு கொள்வேன்.