Wednesday, December 19, 2007

பார்வையும் பழக்கமும்

50களின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வந்த கமலா சர்க்கஸ் குழு யாழ். முற்றவெளியில் முகாமிட்டு மக்களை மகிழ்வித்த காலம். எல்லாத் தொழிலாளிகளும் சர்க்கஸ் பார்க்கச் சென்ற போது அப்பா என்னையும் கூட்டிச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு முற்றவெளியிலிருந்து திரும்பிய போது இளம் தொழிலாளியொருவன் வீதியில் கரணமடித்தும் கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நடந்தும் வித்தை காட்டிக் கொண்டு வந்தான். சில சகபாடிகள் பாராட்டிய போதும் அப்பா அவனை ஏசினார். “சர்க்கஸ் இருக்கட்டும். முதலிலை செய்யிற வேலையை ஒழுங்காகப் பழகி அதைச் சரியாகச் செய்யப் பார். சர்க்கஸ் வேலை விருப்பமெண்டால் சர்க்கஸ் கம்பனியில் சேர வேண்டும்” அப்பாவின் கருத்தை சில இளம் தொழிலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இராமசாமி கரணமடித்ததை ஊக்குவித்தார்கள். கடைக்கு வந்த இராமசாமி வழமை போல கிணற்றடியில் கழிவு நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய் அருகே பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்த போது சர்க்கஸ் நினைவுகள் வந்திருக்க வேண்டும்.

கறண்டிகளை எறிவதும் ஏந்துவதுமாக வித்தை காண்பித்தான். சர்க்கஸ்காரன் ஒருவன் ஆறு கறண்டிகளை தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக எறிந்து பின்னர் அவற்றை ஏந்துவதைப் பார்த்து ‘என்ன மாதிரி நிலத்தில் ஒரு கரண்டியும் விழாமல் கழண்டு வந்து கொண்டிருந்தது’ என்று ஆச்சரியப்பட்ட இராமசாமியும் அப்படிச் செய்ய ஆரம்பித்த போது இரண்டு கறண்டிகள் கழிவு நீர் வழிந்தோடும் கால்வாயில் விழுந்து விட்டது.

இராமசாமி அந்த இரண்டு கறண்டிகளையும் எடுக்க முயன்ற போது அப்பா தடுத்தார். “இது சாப்பாட்டுக் கடை. கானுக்குள்ளை விழுந்த கறண்டியை எடுத்து சாப்பாட்டிலை வைக்க நான் விடமாட்டன். முதலாளியட்ட சொல்லி இராமசாமியின்ர கணக்கிலை எழுதிப் போட்டு இரண்டு கறண்டி வாங்க வேண்டும்” என்றார். இராமசாமி கோபத்துடன் ‘சரி சரி பாக்கிறன்’ என்று கடைக்கு வெளியே செல்ல வேறும் சிலர் அவனைப் பின் தொடர்ந்தனர்.

வழமையான வேலைகளை முடித்துக் கொண்டு அப்பா தினசரிப் பத்திரிகைகளைப் புரட்ட நான் நித்திரையாகி விட்டேன். இரவு சுமார் பதினொரு மணியிருக்கும். கடையில் வேலை செய்யும் இரண்டு பேர் ஓடி வந்து அப்பாவுக்கு ஏதோ சொன்னதும் - அப்பா கடைக்கு வெளியே ஓடினதும் கனவு போலிருந்தது. சில நிமிடங்களின் பின்தான் அது கனவல்ல என்று உணர்ந்ததும் நானும் கடைக்கு வெளியே வேகமாக சென்றேன். இராமசாமி கையிலும் காலிலும் சிராய்ப்புக் காயங்களுடன் றோட்டில் கிடந்தான். கடைத்தொழிலாளிகள் அவனைச் சுற்றி நின்றனர். அருகில் ஒரு சைக்கிள் வண்டியும் நிலத்தில் கிடந்தது.

“ஐயா பக்கத்துக்கடை முத்தையாவின் சைக்கிளை வாங்கி சேர்க்கஸிலை சைக்கிள் ஓடின மாதிரி சைக்கிள் ஹாண்டிலை மேலை தூக்கிக் கொண்டு ஒரு சில்லிலை ஓடிக்காட்டின போது விழுந்திட்டான்” “சரியாக நோகுதாம்” “இவனுக்கேன் இந்த வேலை” ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை.

அந்த நாட்கள் வாடகைக்காரான ‘ரக்ஸி’ முச்சக்கர வண்டியான ‘ஓட்டோ’ என்பன இல்லாத காலம். அப்பா எங்கோ சென்று ஒரு ‘றிக்ஷோ’ வண்டியைக் கொண்டு வந்து இராமசாமியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்.

“சின்னக்காயம் தான். இரண்டொரு நாளிலை சுகமாயிடும்” என்றார் அப்பா.

“பாவிப் பயல் - செத்திருப்பான் தப்பிட்டான்” என்று கணக்கப்பிள்ளை அப்பாவை பார்த்தார்.

இரவு நேரத்தில் றோட்டிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற லொறிச் சில்லுக்குக் கீழே நெஞ்சில் ஒரு தகரத்தை வைத்துக் கொண்டு படுத்திருந்து சர்க்கஸில் லொறியை நெஞ்சுக்கு மேலே ஏற்றி சாகசம் செய்த சர்க்கஸ்காரன் போலவும் ஒரு காட்சி காண்பிக்க எண்ணியிருந்தானாம். சைக்கிளிலிருந்து விழுந்தால் அந்த சாகசத்தைக் கைவிட்டு விட்டனாம்.

“அடே முட்டாப் பயலே...” அப்பா அப்படிச் சத்தம் போட்டதை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. “ஒரு தொழிலைத் தெய்வமாக மதிச்சு முழுசாகப் பழகி அதைச் சரியாகச் செய்ய வேணும். மற்றவன் செய்யிறதைக் கண்ட உடனை மடையன் மாதிரி செய்யக் கூடாது.

இராமசாமியின் சோகமான முகத்திலும் ஒரு சிரிப்பு இழையோடியது. “இனிமே சேர்க்கஸ் பற்றி நினைக்க மாட்டன்”
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: