Monday, December 24, 2007

சம்பளம் என்பது யாதெனில்...

மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே உடுப்பிட்டிக் கிராமததிலிருந்து தனியாக பஸ்சிலோ அல்லது அந்தக் காலத்தில் ஓடிய தட்டிவான்களிலோ ஏறி பதினைந்து மைல் தூரத்திலுள்ள யாழ்ப்பாண நகர் சென்று அப்பா தரும் சம்பளக் காசை கொண்டு வந்து அம்மா கையில் ஒப்படைக்கக் கூடிய சூழல். பயமற்ற பாதுகாப்பான காலம் அக்காலம்.

அப்பாவின் மாதச்சம்பளம் 100 ரூபா. ஒவ்வொரு மாதச் சம்பளமும் அடுத்த மாதம் முதலாம் திகதி கிடைக்கும். காங்கேசன்துறை வீதியில் “லக்ஷ்மி விலாஸ்” கடை என்பதை விட “தில்லைப்பிள்ளை கிளப்” என்றால் பலருக்குத் தெரியும். தில்லைவனம் பிள்ளை என்ற முதலாளிக்குச் சொந்தமான கடையில் சிங்காரம்பிள்ளை ஒரு தொழிலாளி. சிங்காரம் பிள்ளையின் தந்தையான சிவகாமிநாதபிள்ளையின் தந்தை பெயரும் தில்லை வனம் பிள்ளை. இருவரும் வேறு வேறு தில்லைவனம் பிள்ளை.

பத்து வயதில் இந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக அப்பா சொல்லுவார். நல்ல முதலாளி என்பது அப்பாவின் முடிவு. தில்லைவனம் பிள்ளைக்கு பின் அவரது மகன் முறையானவர் முதலாளியான போதும் அப்பாவின் முடிவு மாறவில்லை. புதிய முதலாளி அப்பாவை “ஐயா” என கௌரவமாகவே அழைப்பார். அப்பாவின் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். வேறு சில கடைகளில் அதிகரித்த சம்பளமும் வேறு சலுகைகளும் தருவதாகச் சொன்ன போதும் அப்பா மறுத்து விட்டார். பணத்தின் அருமை தெரியும் அறிவு எனக்கு வந்ததும் அப்பாவுக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம்.

“அதிக சம்பளம் தருவதாக சொல்லிய முதலாளிகளின் கடையில் வேலை செய்தால் என்ன?” - இது என் கருத்து. அப்பாவின் அபிப்பிராயம் வேறுவிதமாக இருந்தது- “காசு தேவைதான். ஆனால் எல்லா விஷயத்தையும் காசைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. கடை முதலாளி என்னை அறிஞ்சு எனனை மதிப்பாக நடத்துறார். நானும் இந்தக் கடையிலை முப்பது வருஷத்துக்கு மேலை வேலை செய்திட்டன். பேயோடை கூட பழகிட்டா விட்டிட்டு போயிட மனம் வராது. பணத்துக்காக நல்ல மனிசரை விட்டிட்டு போறதுக்கு எனக்கு இஷ்டமில்லை”

சந்தர்ப்பம் கிடைக்கும் சில நேரங்களில் வீட்டுக்கு வந்தால் விடுதலை நாட்கள் வாரங்கள் மாதங்களைக் கடந்த சம்பவாங்களும் உண்டு. அவர் வேலைக்குப் போகாது விட்டாலும் சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கும். அவரது இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட மாட்டார். இவற்றையெல்லாம் பார்க்கிற போது அப்பா சொன்னதெல்லாம் சரியென எண்ணத் தோன்றும்.

க.பொ.த உயர்தர வகுப்பில் படிப்பதற்கு தோழர். கார்த்திகேசு மாஸ்டரின் சிபார்சில் யாழ் இந்துக் கல்லூரியிலும் விடுதியிலும் இடம் கிடைத்தது. இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. விடுதிக் கட்டணம் இதர செலவுகளை எண்ணி முதலாளியிடம் முதன் முதலாக “தம்பி ! மகன் மேல் வகுப்புக்கு போறதாலை செலவு...”

“இந்த மாதத்திலையிருந்து 200 ரூபா சம்பளம்” முதலாளியால் அதிகரிப்பட்ட 100 வீத சம்பள உயர்வு பின்னர் குறைக்கப்படவில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: