Wednesday, December 12, 2007

நல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.

(ஸ்கந்தவரோதய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை 15 வது ஆண்டு விழாவையும்- கல்லூரியின் 113 வது விழாவையும் கொண்டாடிய போது ஆற்றிய உரை)
தனித்துவமான சிறப்புகள் பொருந்திய கல்லூரி என ‘ஸ்கந்தவரோதயாக் கல்லுரியைக் குறிப்பிடுவது பொருத்தமென எண்ணுகின்றேன். 113 ஆண்டுகளுக்கு முன் சுன்னாகம் பகுதியிலுள்ளவர்கள் கல்வி கற்பதற்காக கந்தையா உபாத்தியார் முருகப் பெருமானின் திருநாமம் நாளும் பொழுதும் உச்சரிக்கத்தக்கதாக ஸ்கந்தவரோதய கல்லூரியை நிறுவினார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்ற ஓரேற்றர் சுப்பிரமணியத்தின் காலத்தில் ஆசிரியர் எண்ணிக்கை- மாணவர் எண்ணிக்கை வகுப்பறைகளின் எண்ணிக்கை எல்லாம் பல மடங்காகி கல்லூரி புகழ் பெற்றது. அதிபர் சுப்பிரமணியத்தின் வழிகாட்டலில் வளர்ந்த மாணவர் பரம்பரையைச் சேர்ந்த சிலர் கொழும்பில் வாழ்ந்த போதும் கல்லூரி நலன்களுக்காக 15 ஆண்டுகளுக்கு முன் பழைய மாணவர் சங்கக்கிளையை கொழும்பில் நிறுவினர்.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்;கு மேலாக இன்னல்கள் இருப்பினும் கல்லூரி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதோடு ஆலய வளாகத்தில் கோவில் அமைத்து ஸ்தாபகருக்கு சிலைநிறுவி – புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்ததுடன் அவ்வப்போது அவசியமான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

பாடசாலைத்தொடர்பு படலை மட்டும் என்ற நிலை மாறி பழைய மாணவர் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்பதும் கல்லூரிக்கு உதவிகள் புரிவதும் காணக்கூடியதாக உள்ளது.

பழைய மாணவர்களின் செயற்பாடுகள் மகிழ்வைத் தரும் வேளை- இன்றைய மாணவர்களைப் பற்றிய செய்தி நெஞ்சை வருடுகிறது. அண்மைய புள்ளி விபரங்களின் படி 10 வயது முதல் 15 வயது வரையான மாணவர்களில் பதினைந்து வீதத்துக்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கபப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி தான் அது. நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருவதாகவும்- குறிப்பாக 2000 ஆம் ஆண்டில் 6.5 வீதமாக இருந்த நீரிழிவு நோய் இப்போது 10.2 வீதத்தை தாண்டி விட்டதாகவும் இன்னும் 20 ஆண்டுகளில் 80 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கக்கூடிய அபாயமுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய் மட்டுமல்ல- வேறும் பல நோய்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. முன்பெல்லாம் நகரத்து மாணவர்களை மட்டும் பாதித்த நோய்கள் இன்று கிராமத்து மாணவர்களையும் பாதிக்கின்றன என்பது பயங்கரமான செய்தியாகும்.

காரணத்தை அறிய முயன்ற போது இன்றைய மாணவர்கள் பலர் நல்ல உணவு- நல்ல உடற்பயிற்சி- நல்ல வாலிப பருவத்தை தொலைத்து வருவதை காணமுடிகிறது. சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் அரிசிச்சோறு- கீரை- கிழங்கு வகைகள்-மீன் பிரதான உணவாக இருந்தது. வருமானம் குறைந்த குடும்பங்களில் கூழ்- கஞ்சி- பனாட்டு ஒடியல் போன்றவையும் உணவாக அமைந்தது. சிலர் பாணையும் சாப்பிட்டனர். ஆனால

- 2-

இன்று விரைவான உணவு( Fast Food) என்றழைக்கப்படும் நட்டு நொறுக்குத்தீனி விற்கும் கடைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. கல்லூரியை அடுத்துள்ள பகுதிகளில் இக்கடைகள் ஏராளம்.

இரசாயனங்கள் தரும் சுவை நாவுக்கு இதமாக இருந்தாலும்- நிறங்கள் அழகாகத் தோன்றினாலும் பணம் கொடுத்து செமியாக் குணத்தையும்- வயிற்றுக் கோளாற்றையும் தான் வாங்கிக்கொள்கின்றார்கள். முந்திய கால்த்தில் கடைகளில் சுவைத்த வடையும் தேனீரும் நினைவுக்கு வருகிறது. பொயிலர்(Boiler) என அழைக்கப்பட்ட பாத்திரத்தில்
எடுக்கப்படும் கொதிநீரிலிருந்து தயாரிக்கும் பருகத்தகுந்த அளவுக்கு சூட்டைக் குறைப்பதற்காக கைகளை உயர்த்தியும் பதித்தும் தேனீரை ஆற்றுவதும் ஓரழகு. அந்த தேனீரும் ஒரு வகைச் சுவை இன்று அத்தகைய பாத்திரங்களையும் கடைகளையும் தொலைத்து விட்டோம்.

அன்றைய மாணவர்கள் பெற்றோர்களின் முயற்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் பல செய்தனர்.காலையில் பாடசாலை செலவதற்கு முன்னும்- மாலையில் பாடசாலையிpலிருந்து வந்தபின்னும்- வார இறுதி -விடுதலை நாட்களிலும் வயல் - தோட்டங்களில் பெரியவர்களுடன் சிறியவர்களும் சேர்ந்து வேலை செய்து அனுபவம் பெற்றனர். ஆரோக்கியமான உடல்வலுவையும் பெற்றனர். வீட்டுத்தோட்டம் ஆடு மாடு கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டனர். வருமானம் அதிகமுள்ள சில குடும்பத்துப்பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் ஏதோ ஒரு தொழிலோடு தொடர்புள்ளவர்களாக இருந்தனர்.

பிள்ளைப்பருவத்தில் கிட்டியடித்து கெந்தி விளையாடி கிளித்தட்டு வாரோட்டம் என படிப்படியாக விரிவடைந்து வலைப்பந்தாட்டம் கால் பந்தாட்டம் நீண்டதூர ஓட்டம் என வளர்ந்தது. கணிசமான அளவு தூரத்தையும் கால்நடையாகவே அடைந்தனர். இன்று எல்லாவற்றையும் இழந்து வீடியோ விளையாட்டில் (Video Games) முழுப்பொழுதும் மூழ்கியுள்ள இளைஞர் சில அடி தூரத்தைக்கூட கால் நடையாகச் செல்ல முடியாது முச்சக்கர வண்டியில் ஏறி இறங்கக் காணலாம்.

அந்த நாட்களில் தொலைவிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வந்தமை- அக்கம் பக்கத்து ஊர்களுக்கு விழாக்களென்றும் விளையாட்டுகளென்றும் பெற்றுக்கொண்ட அனுபவம்- ஊரவர் உறவினர் நன்மை தீமைகளில் கலந்து கொண்டு அடைந்த சுக துக்கம் பாசம் நட்பு எல்லாம் இன்றைய தலைமுறைகளில் பலவற்றுக்கு தெரியாத சங்கதிகளாகவே இருக்கின்றன.

கல்லூரிக்கல்வி முடிவடையும் வேளை தட்டெழுத்து சுருக்கெழுத்து சிங்களம் படிக்க தனியார் கல்விநிலையம் நாடிய காலம் அந்தக்காலம். இன்று சிறிய மாணவர்களும் தமிழ்- சமயம் படிப்பதற்குக்கூட தனியார் கல்வி நிலையம் நாடும் காலம். இதனால் மாணவர்களுக்கு ஓய்வில்லை. பெற்றோருடன் ஆற அமர்ந்து உணவுண்ணும் வாய்ப்பில்லை. உடற்பயிற்சியில்லை.

கொறியாவில் தனியார் கல்வி நிலையங்களில்லை. இரவு எட்டு ஒன்பது மணிவரை கல்லூரியில் படிப்பார்கள். மதிய போசனம் இராப்போசனம் இரண்டையும் கல்லூரி வழங்கும். ஆசிரியர்கள் மாணவர்கள் உடற்பயிற்சியில் கட்டாயம் ஈடுபடுவதோடு கல்லூரியையும் சுற்றாடலையும் கூட்டுதல் துப்பரவாக்கல் வேலைகளிலும் தினமும் ஈடுபடுதல் வேண்டும்.

இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் திறமையும் நாட்டமும் இருப்பதைக்காணலாம். ஆசிரியர்களும் பெற்றோரும் ஒவ்வொருவரது ஆற்றலையும் திறமையையும் இனம் கண்டு ஊக்குவித்து ஆளுமையை உருவாக்க வேண்டும்.

- 3 -
எப்போதாவது ஒரு நாள் சினிமா திரைப்படம் பார்த்த காலம் மாறி இலத்திரனியல் சாதனங்கள் இலகுவாக வீட்டில் குடி வந்துள்ளதால் தினமும் சினிமா நாடகம் பார்க்கும் சூழல்- நாளைய நலனுக்காக சில விடயங்களுக்கு முற்றுப்புள்ளி இடத்தான் வேண்டும்

தவறுகாணுமிடத்து திருத்த வேண்டும். அவசியமானால் தண்டனையும் வழங்கி தக்க வழி காட்ட வேண்டும். கடும் வார்த்தைகளால் ஏசுதல்- பிரம்படி தண்டனைகளாக இருந்த காலத்தில் கல்லூரி அதிபர் ஒருவர் வித்தியாசமான தண்டனையால் மாணவர்களை நல் வழிப்படுத்தினார். அந்த அதிபர் மாணவர்களை ஏச மாட்டார். தடியால் அடிக்க மாட்டார்.

தவறிழைக்கும் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது அதிபரின் அலுவலகஅறைக்கு முன்பாக உள்ள வாங்கில் அமர்ந்திருக்க வேண்டும். தவற்றின் தன்மையைப்பொறுத்து வாங்கில் அமர்ந்திருக்க வேண்டிய நேரம் கூடிக்குறையும். அக்காலத்தில் ஏச்சு வாங்குவதைவிட அடி வாங்குவதை விட எல்லோரும் பார்க்கத்தக்கதாக வாங்கில் அமர்ந்திருப்பதே மிகப் பெரிய தண்டனையாகக் கருதப்பட்டதால் அநேகமாக எல்லோரும் குற்றமிழைக்காமல் ஒழுங்காக கற்பதில் கவனம் செலுத்தினர்.

மாணவர்கள் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் உணவுப்பழக்கம்- உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தை இழந்தவர்களாக மாறாத வருத்தம்-வைத்தியசாலைகள் -காலையும் மாலையும் மருந்தும் என அலையும் அவலத்துக்கு ஆளாகலாம்.

வீரகேசரி
11.11.2007

No comments: