Sunday, December 23, 2007

சுவர்களில் இருப்போர்

அப்பாவுடன் வேலை செய்த ஏனைய தொழிலாளிகளுக்கும் அப்பாவுக்குமிடையே கௌரவமான நட்புறவு நிலவியது. யாரையும் கடமைப்படுத்தாத வகையில் தனது நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வார். நான் சிறியவனாக இருந்த காலத்திலேயே யாரிடமிருந்தும் சிறிய தின்பண்டங்கள் விளையாட்டுப் பொருட்கள் உடுப்பு போன்றவை கூட அன்பளிப்பு என வாங்காமல் இருப்பதைக் கவனித்துக் கொள்வார். அப்பா பத்திரிகை வானொலி வாயிலாக தகவல்களை சேகரிக்கும் போது திரைப்படங்கள் சினிமாக் கலைஞர்கள் பற்றிய தகவல்களும் சேர்ந்துவிடும். ஆனால் அவர் சினிமா பார்க்க போனதில்லை. சக தொழிலாளிகள் அனுமதியுடன் சிறிய வகுப்புகளில் நான் படித்த போது என்னையும் அழைத்துச் செல்லும் போது மாத்திரம் அவர்கள் வாங்கித் தரும் குளிர்பானங்களைக் குடிப்பேன். டொபி கடலை போன்றவற்றை சாப்பிடுவேன். படம் பார்க்க கிளம்புவதற்கு முன்பாக டிக்கட் காசை மிகத் தந்திரமாக கூட்டிக் கொண்டு போகும் தொழிலாளியின் கையில் திணித்து விடுவார். திரைப்பட மாளிகைகளில் பாட்டுப் புத்தகங்களும் சினிமா நடிகர்களின் படங்களும் விற்கப்படும். பாட்டுப் புத்தகங்களை விட சினிமா நடிகர்களின் படங்கள் தான் என்னைக் கவர்ந்தன. என்னைக் கவர்ந்த படங்களையும் படம் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற மாமாவையும் மாறி மாறிப் பார்த்தேன். பார்வையின் அர்த்தம் புரிந்த மாமா என்னை ஏமாற்ற விரும்பவில்லை.

“மாப்பிள்ளை (கடையில் வேலை செய்வோர் மட்டுமல்ல வேறு வேலைகளுக்கு வருவோரையும் மாமா என்றழைக்க அப்பா பழக்கியிருந்தார். அவர்கள் என்னை மாப்பிள்ளை – மருமகன் என கூப்;பிடுவார்கள்) உங்களுக்கு இந்த மாதிரி படங்கள் வாங்கிக் கொடுத்தா நம்ம வேலை இல்லாமப் போயிடும்” என்றவர் முன்பு நடந்த சம்பவங்களை விளக்கிச் சொன்னார்.

‘கடையில் சுவர்களில் தெய்வப் படங்களும் வள்ளுவர் பாரதியார் போன்ற அறிஞர்களின் படம் மாத்திரமே இடம் பெறுவற்கு அப்பா தான் காரணமாம் - சினிமா நடிகர்கள் அரசியல்வாதிகளின் படங்களோடு வரும் கலண்டர்களைக் கூட கடையில் மாட்டுவதற்கு முதலாளி சம்மதிக்காததற்குக் காரணம் - அப்பாவின் கண்டிப்பான வேண்டுகோளே’ யாழ் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலய சஞ்சிகையொன்றிலும் கடைக்கு சிறப்பு தரும் படங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்ததை வாசித்த நினைவும் இருக்கிறது.

“யாரோடு எந்தளவுக்குச் சேரலாம்? யாரோடு சேரக்கூடாது? எங்கே எப்படி நழுவ வேண்டும்? என்பதெல்லாம் மட்டுமல்ல – நான் வேலைக்குச் சேரும் வரை என்னோடு சேர்ந்து பழகுபவர்கள் எனது நடவடிக்கைகள் ஆகியவற்றை தந்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: