Monday, December 24, 2007

அது ஒரு கனவான்கள் காலம்

காங்கேசன் துறை வீதியும் ஸ்ரான்லி றோடும் சந்திக்கும் இடம், முட்டாஸ் கடைச்சந்தி. அக்காலத்தில் முட்டாசுக்கடை உரிமையாளர் திரு. செல்லையாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எழுதாத உடன்படிக்கையொன்றிருந்தது.

வெற்றிலை போடுவது என்று சொன்னால் அப்பாவின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். தொடர்ச்சியாக அடுக்களையில் நெருப்பருகே நிற்பதால் வெற்றிலை குளிர்ச்சியைத் தரும் என நம்பினார். ஒரு வெற்றிலையை இரண்டாக்கி பாதி வெற்றிலை தான் போடுவார். ஆனால் சில நிமிடங்களுக்குள் வெற்றிலையின் சாற்றை உள்ளிழுத்து சக்கையை துப்புவதற்குள் அடுத்த வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமாகி விடுவார். வெற்றிலை என்றால் நிறமும் சுவையும் ஊட்டிய பாக்கு, மிக மெல்லியதாகச் சீவிய தேங்காய்ப்பூ, மங்கள விலாஸ் வாசனைப் புகையிலை இவையெல்லாம் சேர வேண்டும். இந்தப் பொருட்கள் எல்லாம் முட்டாசுக் கடைச் சந்தியிலுள்ள செல்லையா கடையில் தான் வாங்குவார். ‘வாங்குவார்’ எனச் சொல்வது தவறு.

பின்னேர வேளைகளில் செல்லையா கடைக்குச் சென்று தனக்கு விருப்பான அளவு வெற்றிலை பாக்கு புகையிலை இத்தியாதி எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார். சில நேரம் அப்பாவுடன் நானும் செல்வேன். கடையிலிருந்து வெளியே வரும் போது ‘வாறன்’ என்று சொல்லுவார். என்ன பொருள் எவ்வளவு எடுத்தது எவரும் கணக்கு வைப்பதில்லை. அப்பா தனக்குத் தேவையானவற்றை தானாகவே எடுக்கலாம். மாதம் தோறும் தனக்கு க்டைக்கும் 100 ரூபா சம்பளத்தில் 15 ரூபாவை செல்லையா கடையில் கொடுத்து விடுவார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் தொடர்ச்சியாக மூன்று மாதம் வேலைக்குச் செல்லாத வேளைகளிலும் அப்பாவின் சம்பளத்தை வாங்க உடுப்பிட்டியிலிருந்து நான் யாழ்ப்பாணம் செல்வேன். சம்பளம் வாங்கியதும் செல்லையா கடையில் 15 ரூபா கொடுத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பான கட்டளை. அப்பா வேலைக்குப் போகா விட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுதலைதான். வெற்றிலை வாங்காவிட்டாலும் முழுமையான கொடுப்பனவு செய்யப்படும்.

இந்தக் ‘கனவான் ஒப்பந்தம்’ ஒரு புறமிருக்க. 1965 ஆம் ஆண்டு உடுப்பிட்டியிலிருந்து யாழ் இந்துக்கல்லூரி சென்றதும் 100 ரூபாவாக இருந்த அப்பாவின் சம்பளம் 200 ரூபாவாகியதும் அப்பா செல்லையா முதலாளியிடம் 30 ரூபா கொடுத்தார். பணத்தை எண்ணிய முதலாளிக்கு சம்பள அதிகரிப்புக்கான காரணத்தைச் சொன்னேன். மகிழ்ச்சியால் செல்லையாவின் முகம் மலர அப்பா கொடுத்த 30 ரூபா எனது சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது” மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு. நீங்க வாற மாதிரி வந்து போங்க. முந்தி கொடுக்கிற காசை கொடுங்க. போதும்”

பணத்தின் பெறுமதி மிக வேறுபாடடைந்து விட்ட இந்நாட்களிலும் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு சதத்தையும் தக்க வைப்பதில் மிகக் கவனமாக இருப்பதைக் காணக் கூடியதாயிருக்கிறது. கொள்வோர் ஒரு சதத்தையேனும் மேலதிகமாகக் கொடுக்க விரும்புவதில்லை. கொடுப்போர் ஒரு சதத்தையேனும் இழக்க விரும்புவதில்லை.

சம்பளம் அதிகரித்த போது, தினமும் தான் சென்று வரும் கடைக்காரருக்கு பங்கு கொடுக்க எண்ணிய அப்பாவும் , ‘உங்க மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு’ என தொடர்ச்சியாக பணத்தைப் பெறாமல் விடட செல்லையா முதலாளியும் தினமும் என் நினைவில் வருகின்றனர்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: