Sunday, December 30, 2007

கண் கெட்ட பின்பு...

தொழில் காரணமாக கொழும்புக்கும் பிற மாவட்டங்களுக்கும் சென்ற போது உணவுத் தேவைகளுக்காக சாப்பாட்டுக் கடைகளை நாடினேன். பிளாஸ்டிக் வகைகளைச் சேர்ந்த கோப்பைகள், கிளாஸ் பொலீத்தின் வகையைச் சேர்ந்த கண்ணாடிப் பேப்பர்கள் ஒரு வகைக் கவர்ச்சியை ஏற்படுத்தின.

எழுபதுகளில் அவற்றை தில்லைப்பிள்ளை கிளப்பிலும் அறிமுகம் செய்ய வேண்டுமென்று அப்பாவிடம் எடுத்துச் சொன்ன போது அவர் தடுத்துவிட்டார். “வாழையிலையும் வாழைத்தடலும் இல்லாத காலத்தில் பொலீத்தினைப் பற்றி போசிப்போம். அலுமினியப் பாத்திரங்கள் பழசானாலும் அவற்றை உருக்கி இன்னொரு பொருளாக்குவார்கள். பிளாஸ்டிக்கை எரித்தால் வரும் புகை மனிதனுக்கு கூடாது. மண்ணில் தாழ்த்தாலும் அது மண்ணில் உக்காது. கடலில் எறிந்தாலும் அது தாழாமல் மிதக்கும்” இப்படி பலவற்றைச் சொல்லி தடுத்துவிட்டார்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பொலீத்தின் பாவனைக்குத் தடை’ ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள்’ என்ற தலைப்பில் வரும் செய்திகளை படிக்கும் போது தில்லைப்பிள்ளை கிளப் பசியைப் போக்க மட்டுமில்லாமல் சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது போல என்னால் உணர முடிகின்றது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: