Wednesday, December 19, 2007

மழை கால அவதானங்கள்

ஒரு நாள் அம்மாவுடன் செருப்பு வாங்குவதற்காக செம்மா தெருவுக்கு சென்ற போது தீடீரெனப் ஆரம்பித்த மழை பெரு மழையாக மாறி காங்கேசன்துறை வீதியில் கானையும் மேவி வெள்ளம் பாயுமளவுக்குப் பொழிந்த பின் தான் வேகம் குறைந்தது.

அம்மா தடுத்ததையும் கேளாமல் நான் புதுச்செருப்பையும் போட்டுக் கொண்டு வெள்ளத்தில் ‘தொக்கு தொக்கு’ என்று சந்தோசத்துடன் நடந்து வந்தேன். அம்மா காலிலிருந்த பழைய செருப்புகளை கையில் சுமந்தபடி தண்ணீ மேவிப்பாயும் தெருவில் மெதுவாக நடந்து வந்தார். முட்டாசுக் கடைச் சந்தியைத் தாண்டி சிறிது தூரம் நடந்திருப்பார். ‘ஸ்... அம்மா அவலமாகக் கத்திக்கொண்டே குனிந்து காலைப் பிடித்துக் கொண்டார் காரணம் புரியாமல் கலங்கி நானும் அம்மா என்றேன்.

எங்கள் வருகையை எதிர்பார்த்து கடை வாசலில் காத்து நின்ற அப்பா ஒடி வந்து அம்மாவைக் கைத்தாங்கலாக கடைக்கு அழைத்துச் சென்றார்.

அம்மாவின் உள்ளங்காலில் ஒரு சிறிய கூரிய ஆணி குத்தி விட்டது. அம்மாவின் காலிலிருந்து ஆணியை அப்பவா அழுத்துப் பிடுங்கிய போது அம்மாவின் பயங்கரச் கத்தலைக் கேட்க பரிதாபமாக இருந்தது.


எனது தோளுக்கு மேலாக தவழ்ந்த அப்பாவின் கை கழுத்தை சுற்றி வளைக்க உச்சியில் ஒரு முத்தம் ‘’ கட்டி கெட்டிக்காரன் - வெள்ளத்திலை நடக்கிற போது கட்டாயம் செருப்பு போட வேணும். தண்ணியிலை நனைஞ்ச கால் மெதுவாக வந்து வாழைப்பழம் மாதிரி இருக்கும். முள்ளு ஊசி டக் கெண்டு ஏறினால் முழுவதும் காலுக்குள் போயிடும். எடுக்க முடியாது.’’

முன்பும் ஒரு முறை அப்பா சொன்னதைக் கேட்காததால் முள்ளு குத்தி வேதனைப்பட்டதை அம்மா நினைவு படுத்தினார்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: