"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்"
(27-07-2014 யாழ்பாணம் இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் வேதநாயகம் தபேந்திரன்
எழுதிய “யாழ்பாணத்து நினைவுகள் –பாகம்-01” நூல் வெளியீட்டு விழாவில்
உடுவை.எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )
கிளிநொச்சி செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை
உத்தியோகத்தரான திருமிகு வேதநாயகம் தபேந்திரன் கடந்த பல மாதங்களாக இலங்கையின்
பிரபல பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் அன்றைய யாழ்பாணம் எப்படியிருந்தது ?
அங்கு வாழ்ந்த மக்கள் எப்படியிருந்தார்கள் ? கல்வி பொருளாதாரம் விவசாயம்
ஆகியவற்றின் போக்கு எப்படிச் சென்றது ? எனத் தொடர்ந்து எழுதிவருகிறார் –அவற்றில் முப்பது எழுத்தாக்கங்கள் நூல் வடிவம் பெற்று வெளியிடப்படும்
இந்நிகழ்வுக்கு கல்விச் சமூகத்தின் உயர்மட்டத்தினர் –தமிழறிஞர்கள் உட்பட இவரது மேலதிகாரிகள்
மற்றும் சக உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருப்பது மகிழ்வுக்குரியதாகவும்
எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டார்களுக்கும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது
கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக யாழ்ப்பாண
மக்களின் வாழ்வியலைச் சிறந்த முறையில் பத்திரிகைகளில் பதிவு செய்த வேதநாயகம்
தபேந்திரனின் பணி பாராட்டுக்குரியது . நான் அரச சேவையில் இணைந்த காலப்பகுதியில்
பிறந்த தபேந்திரன் 1985 இல் ஈழநாடு பத்திரிகையில் இந்திராகாந்தி பற்றி எழுதிய
கவிதை இவரது கன்னி முயற்சிகளில் ஒன்றாக விளங்கியதோடு பலரது பாராட்டையும் பெற்றது
ஏனைய எழுத்தாளர்களிடம் இல்லாத சிறப்பு தபேந்திரனிடம் காணப்படுகிறது இவர் ஆரம்ப
காலத்தில் மாணவர்களுக்காக பொது அறிவு நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார்.
கடந்த ஆண்டு “பூத்திடும் பனந்தோப்பு” என்ற அருமையான நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார் அந்த
நூலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் இரண்டாவது பதிப்பும் வெளி
வந்தது
“யாழ்ப்பாண நினைவுகள் “என்ற நூல்
போர்காலச்சுழலில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் சோகங்களை நாளைய சந்ததிக்கும்
எடுத்துச் சொல்லும் ஆவணப் பதிவாக அமைகின்றது. யாழ்.மக்களின் வாழ்வியலில் கடந்த
காலங்களில் இடம் பெற்ற மங்கல ,அமங்கல நிகழ்வுகள் ,சந்தைகள் ,தட்டிவான்
போக்குவரத்து ,கொம்படி ஊரியான் பாதை ,கிளாலிப்பயணம் மற்றும் பணச் சடங்கு போன்ற பல்வேறு
அம்சங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகின்றது.
யாழ்பாண மாவட்டத்துக்கென –யாழ்ப்பாண மக்களுக்கென விசேடமான பண்பாடு பரம்பரை
பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்கவழக்கங்கள் வீடு வளவுகளிலும் அண்டை அயலிலும்
கிடைக்கும் மூலிகைகள் வேர் ஆகியவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி
காட்டும் மருத்துவம் எல்லாமே
தனித்துவமானதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
யாழ்ப்பாண மாம்பழம் –தோலகட்டி நெல்லிரசம் –பருத்தித்துறை
வடை என ஒவ்வொரு ஊரையும் ஒவ்வொரு
பொருட்களுடன் சேர்த்து தென்னிலங்கையில் பொருட்கள் சந்தைப் படுத்தப்பட்டதை
நாமறிவோம். நல்ல ருசியான பழங்களுக்கு யாழ்ப்பாண மண்மட்டுமல்ல...கமக்காரர் கையாண்ட முறைகளும்
காரணமே. சிறிதளவு நிலமானாலும் ஒரு மாங்கன்றை வைக்க முன் மாமரத்தின் வகையைப் பற்றி
---அதன் பரம்பரை பற்றி பார்ப்பார்கள்.
தின்ன வேலி மரக்கன்று என்றால் அதுவும்...மாங்கன்று ஒட்டு மாங்கன்று என்று தெரிந்து
வாங்கி நாட்டிய பின் சொந்தப் பிள்ளைகளைப்
போல் பாராமரிப்பார்கள்.
வாழைக்குலை மரத்தில் இருக்கும்போது இடைப்பழம் பழுத்தபின்
தான் குலையை வெட்டிய நாட்களும் நினைவுக்கு வருகிறது . மண்வெட்டியில் கூட யாழ்ப்பாண
மண்வெட்டி வித்தியாசமானது; வயல் தோட்ட வேலைகளுக்கு வசதியானது
பனை மரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வளமாக
வாழ்ந்த இனம் . வீடு வேயவும் வேலி அடைக்கவும் பயன்படுத்திய பனையோலை அடுத்த வருடம்
இயற்கைப் பசளையாக தோட்டத்துக்குச் செல்லும். அப்போது கூடச் சொல்வார்கள் – “பனையோலையை
பசளையாகப் பயன் படுத்தும்போது வேறும் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று -நிலத்தின்
கீழ் இருந்து முளைத்து வரும் களைகளின் வளர்ச்சியை தடுக்கும்; மற்றது -பயிர்களுக்கு
ஊற்றும் தண்ணீர் உடனேயே நிலத்தின் அடிப்பகுதிக்குச் செல்ல விடாமல் நிலத்தின் மேல் பகுதியில் தாங்கி
வைத்திருப்பதால் பயிர்கள் நீரை உறிஞ்சக் கூடியதாகவும் இருக்கும்”
நேர்மையாக உழைப்பதற்கு வெட்கப்படாதவர்கள் –
கிராமத்து வீதிகளால் நடந்து செல்லும்போது மாட்டுச்சாணம் கண்டால் கைகளால் எடுத்துச்
சென்று வீட்டில் சேகரித்து –தோட்டத்துக்கு பசளையாக்கி விடுவார்கள். அரிசியில்
இருக்கும் குறுணியைக் குப்பையில் கொட்டாமல் அதற்காகவே கோழி வளர்ப்பார்கள். சாப்பிட்டபின்
கைகழுவும் இடத்தில் வாழைமரம் வைத்து வாழ்வை வளப்படுத்துவார்கள்
இன்று செல்லிடத் தொலைபேசியில் MIS CALL
இருந்தால் –அழைத்தவர் யார் –என்ன விடயம் என்று செய்தி பரிமாற்றம் தேடுவது போல –அந்த
நாட்களில் யாழ்பாணத்தில் தேடிப்போவோர் வீட்டில் இல்லாவிட்டால் வீட்டுப் படலையில் பசுமையான இலைகளுடன் கூடிய கம்பை செருகி
விடுவார்கள். வீடு திரும்பியதும் அதைப் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில்
உள்ளவர்களிடம் தகவலைத் தெரிந்து கொள்வார்கள்;செய்திப் பரிமாற்றம் செய்யத்
தெரிந்தவர்கள்.
DOOR
CLOSER இணைக்கப்பட்ட கதவுகள் தானாகவே சாத்தப்படுவதுபோல, தானாகவே, வேலிகளில்
தானாகவே சாத்திக் கொள்ளும் சங்கடப்படலையை
யாழ்பாணத்து வேலிகளில் காணலாம். தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி வேலியால் அடுத்த
வீட்டுக்கு சென்று சேதம் விளைவிக்கூடாது என்பதற்காக A ஏ என்ற ஆங்கில எழுத்து
வடிவில் பனைமட்டையை தடையாகக் கட்டி ஆட்டிகுட்டியின் கழுத்தில் மாட்டி விடுவார்கள்.
விறகடுப்பில் மண்சட்டியில் கீரை வகை மர வள்ளிக்கறி எனச் சுவைத்த எங்கள்
உணவு , ஊரில் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழா- படித்த பள்ளிக்கூடம், பாவித்த பழைய சைக்கிள் வண்டிகளை வாங்க
விற்க என ஒரு சைக்கிள் சந்தி ..இப்படியாக எல்லாம் இன்பம் தந்தன.
...தயாரிப்பாளர்களின் உத்தரவுக்காலதைக் (GUARANTEE
PERI0D) கடந்தும் யாழ்ப்பாணத்தவருடன் சீவியம் நடாத்திய A 40 ரகக் கார் –றலி சைக்கிள்
– இப்படியாக எல்லாவற்றிலும் ஒருவகைச் சுகம் .. மகிழ்வு நிறைவு திருப்பதி என
வாழ்ந்த சமூகம்
உரையை நிறைவு செய்யுமுன் இரண்டு செய்திகள்:-
இன்று வெளியிடப்படும் நூலின் முதல் பிரதியை
பெறுவதற்காகவே நூலாசிரியரின் அண்ணா திருமிகு கோ.வேல்நாதன், அண்ணி திருமதி .வேல்நாதன் ஆகியோர்
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாக அறிய முடிந்தது. புலம்
சிதறியவர்கள் உறவையும் நட்பையும் வைத்து நூலாக்க முயற்சிகளுக்கு உதவ முன் வருவது
கண்டு வணக்கத்துடன் பணிவான நன்றிகளைத் தெரிவித்து, பாராட்டி மகிழ்வதுடன்
இவர்களைப்போல் வெளிநாடுகளில் வாழ்வோர் வசதிகள் வாய்ப்புகளைப் பொறுத்து எமது
படைப்பாளிகளுக்கு ஆதரவும் உதவியும் நல்க
வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
சுவிஸ் என்றதும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்
பூலோகத்தின் சொர்க்கம் என்று சொல்லப்படும் சுவிஸ் நாட்டில் இருந்த சில நாட்கள்
நினைவுக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் அழகு! அழகு! கொள்ளை அழகு!!.
எங்கள் வீதிகள் சிலவற்றில் காலணியுடன் நடக்கவே
தயக்கம். சுவிஸ் வீதிகளில் விரிப்புகள் இன்றி தூங்கக் கூடிய அளவுக்கு சுத்தமாக
தூய்மையாக இருந்தன என்று சொல்வதை விட மனம் கூசாமல் சாப்பாட்டை வைத்து சாப்பிடக்
கூடிய அளவுக்கு சொக்கலட் வாசம் வீசும் சுவிஸ் வீதிகள் இருந்தன என்றாலும் பொருந்தும்.
அந்த சொர்காபுரியிலிருந்து புறப்படுவதற்கு முதல்
நாள் மாலையில் ஒரு கூட்டத்தில் பேசினேன் –“ கடந்த சில நாட்களாக சுவிஸில் என்னை
உபசரித்த நண்பர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள். நாளை மாலை சூரிச் சிலிருந்து கிளம்பும்
விமானம் என்னையும் சுமந்து செல்லும். மறு
நாள் எனது சொந்த மண்ணில் ....அந்த மணல் ஒழுங்கைகளில் வெறும் காலுடன் நடப்பேன்
நான் சிறு வயதில் பட்டம் பறக்க விட்ட வல்லைவெளி-
பந்தடித்து விளையாடிய பாலசிங்கம் வீடு-
போர்த்தேங்காய் அடித்த உடுப்பிட்டி வீரபத்திரகோவில்-
கிளித்தட்டு மறித்த கிணற்றடி ...”
தொடர்ந்து பேச முடியவில்லை. மண்டபத்திலிருந்த நண்பர்கள் மேடைக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து
கண்கலங்கினார்கள்- “ அண்ணா ..நீங்க சொந்த மண்ணுக்குப் போறீங்க ...எங்களால் போக
முடியாமல் இருக்கே ..” நானும் அழுதேன். இது தான் யாழ்பாணத்து நினைவுகள் !
அடுத்து ஒரு செய்தி என்பதை விட அன்பான வேண்டுகோள்
என்று சொல்வோமா-
பாடசாலைகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி
பெறும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கும் ஆக்கபூர்வமான பண்பாட்டை வளர்க்க
வேண்டும் புத்தகங்களை வாங்கும் பணம் வீண் செலவல்ல அது கல்விக்கான முதலீடாகும்.
பாடசாலைகள் அதிகமுள்ள மாவட்டம் யாழ்பாணம்
இங்குள்ள பாடசாலைகளில் இடம்பெறும் பரிசளிப்பு விழாக்களில் பெறுமதிமிக்க நூல்களைப்
பரிசாக வழங்க அதிபர்கள் முன் வர வேண்டும் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனது
பாடசாலையில் நடைபெற்ற போட்டியொன்றில் வெற்றியீட்டிய போது “பார்த்தீபன் கனவு “என்ற
நாவலைப் பரிசாகத் தந்தார்கள் .அந்த நூலை நான் மட்டுமன்றி எனது வீட்டில் உள்ள
உறவினர்கள் ,அயலவர்கள் ,நண்பர்கள் என அனைவரும் விருப்பத்துடன்
படித்துப்பயனடைந்தோம் .
புத்தகங்களை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கும்
பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அறிவுள்ள சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.இதன்
மூலம் புதிய எழுத்தாளர் தோன்றுவார்கள் அண்மைக் காலத்தில் இளைய தலைமுறையினரிடையே
வாசிக்கும் வழக்கம் அருகி வருகின்றது இதன் மூலம் இந்தக் கருத்தும் மாறும் நிலை
ஏற்படும்.
நாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக்
காண்பதற்காக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக
வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.