Monday, August 18, 2014

"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் -"உடுவை.எஸ்.தில்லைநடராஜா

"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்"

(27-07-2014 யாழ்பாணம் இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் வேதநாயகம் தபேந்திரன் எழுதிய “யாழ்பாணத்து நினைவுகள் –பாகம்-01” நூல் வெளியீட்டு விழாவில் உடுவை.எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )




கிளிநொச்சி செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தரான திருமிகு வேதநாயகம் தபேந்திரன் கடந்த பல மாதங்களாக இலங்கையின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் அன்றைய யாழ்பாணம் எப்படியிருந்தது ? அங்கு வாழ்ந்த மக்கள் எப்படியிருந்தார்கள் ? கல்வி பொருளாதாரம் விவசாயம் ஆகியவற்றின் போக்கு எப்படிச் சென்றது ? எனத்  தொடர்ந்து எழுதிவருகிறார்  –அவற்றில் முப்பது எழுத்தாக்கங்கள்  நூல் வடிவம் பெற்று வெளியிடப்படும் இந்நிகழ்வுக்கு கல்விச் சமூகத்தின் உயர்மட்டத்தினர் –தமிழறிஞர்கள் உட்பட இவரது மேலதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருப்பது மகிழ்வுக்குரியதாகவும் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டார்களுக்கும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது  

கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைச் சிறந்த முறையில் பத்திரிகைகளில் பதிவு செய்த வேதநாயகம் தபேந்திரனின் பணி பாராட்டுக்குரியது . நான் அரச சேவையில் இணைந்த காலப்பகுதியில் பிறந்த தபேந்திரன் 1985 இல் ஈழநாடு பத்திரிகையில் இந்திராகாந்தி பற்றி எழுதிய கவிதை இவரது கன்னி முயற்சிகளில் ஒன்றாக விளங்கியதோடு பலரது பாராட்டையும் பெற்றது ஏனைய எழுத்தாளர்களிடம் இல்லாத சிறப்பு தபேந்திரனிடம் காணப்படுகிறது இவர் ஆரம்ப காலத்தில் மாணவர்களுக்காக பொது அறிவு நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார்.

கடந்த ஆண்டு “பூத்திடும் பனந்தோப்பு” என்ற  அருமையான நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார் அந்த நூலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் இரண்டாவது பதிப்பும் வெளி வந்தது
“யாழ்ப்பாண நினைவுகள் “என்ற நூல் போர்காலச்சுழலில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் சோகங்களை நாளைய சந்ததிக்கும் எடுத்துச் சொல்லும் ஆவணப் பதிவாக அமைகின்றது. யாழ்.மக்களின் வாழ்வியலில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மங்கல ,அமங்கல நிகழ்வுகள் ,சந்தைகள் ,தட்டிவான் போக்குவரத்து ,கொம்படி ஊரியான் பாதை ,கிளாலிப்பயணம் மற்றும் பணச் சடங்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகின்றது.

யாழ்பாண மாவட்டத்துக்கென –யாழ்ப்பாண  மக்களுக்கென விசேடமான பண்பாடு பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்கவழக்கங்கள் வீடு வளவுகளிலும் அண்டை அயலிலும் கிடைக்கும் மூலிகைகள் வேர் ஆகியவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி காட்டும்  மருத்துவம் எல்லாமே தனித்துவமானதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

யாழ்ப்பாண மாம்பழம் –தோலகட்டி நெல்லிரசம் –பருத்தித்துறை வடை என   ஒவ்வொரு ஊரையும் ஒவ்வொரு பொருட்களுடன் சேர்த்து தென்னிலங்கையில் பொருட்கள் சந்தைப் படுத்தப்பட்டதை நாமறிவோம். நல்ல ருசியான பழங்களுக்கு யாழ்ப்பாண  மண்மட்டுமல்ல...கமக்காரர் கையாண்ட முறைகளும் காரணமே. சிறிதளவு நிலமானாலும் ஒரு மாங்கன்றை வைக்க முன் மாமரத்தின் வகையைப் பற்றி ---அதன்  பரம்பரை பற்றி பார்ப்பார்கள். தின்ன வேலி மரக்கன்று என்றால் அதுவும்...மாங்கன்று ஒட்டு மாங்கன்று என்று தெரிந்து வாங்கி  நாட்டிய பின் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாராமரிப்பார்கள்.

வாழைக்குலை மரத்தில் இருக்கும்போது இடைப்பழம் பழுத்தபின் தான் குலையை வெட்டிய நாட்களும் நினைவுக்கு வருகிறது . மண்வெட்டியில் கூட யாழ்ப்பாண மண்வெட்டி வித்தியாசமானது; வயல் தோட்ட வேலைகளுக்கு வசதியானது

பனை மரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வளமாக வாழ்ந்த இனம் . வீடு வேயவும் வேலி அடைக்கவும் பயன்படுத்திய பனையோலை அடுத்த வருடம் இயற்கைப் பசளையாக தோட்டத்துக்குச் செல்லும். அப்போது கூடச் சொல்வார்கள் – “பனையோலையை பசளையாகப் பயன் படுத்தும்போது வேறும் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று -நிலத்தின் கீழ் இருந்து முளைத்து வரும் களைகளின் வளர்ச்சியை தடுக்கும்; மற்றது -பயிர்களுக்கு ஊற்றும் தண்ணீர் உடனேயே நிலத்தின் அடிப்பகுதிக்குச் செல்ல விடாமல்  நிலத்தின் மேல் பகுதியில் தாங்கி வைத்திருப்பதால் பயிர்கள் நீரை உறிஞ்சக் கூடியதாகவும் இருக்கும்”
நேர்மையாக உழைப்பதற்கு வெட்கப்படாதவர்கள் – கிராமத்து வீதிகளால் நடந்து செல்லும்போது மாட்டுச்சாணம் கண்டால் கைகளால் எடுத்துச் சென்று வீட்டில் சேகரித்து –தோட்டத்துக்கு பசளையாக்கி விடுவார்கள். அரிசியில் இருக்கும் குறுணியைக் குப்பையில் கொட்டாமல் அதற்காகவே கோழி வளர்ப்பார்கள். சாப்பிட்டபின் கைகழுவும் இடத்தில் வாழைமரம் வைத்து வாழ்வை வளப்படுத்துவார்கள்

இன்று செல்லிடத் தொலைபேசியில் MIS CALL இருந்தால் –அழைத்தவர் யார் –என்ன விடயம் என்று செய்தி பரிமாற்றம் தேடுவது போல –அந்த நாட்களில் யாழ்பாணத்தில் தேடிப்போவோர் வீட்டில் இல்லாவிட்டால் வீட்டுப்  படலையில் பசுமையான இலைகளுடன் கூடிய கம்பை செருகி விடுவார்கள். வீடு திரும்பியதும் அதைப் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவலைத் தெரிந்து கொள்வார்கள்;செய்திப் பரிமாற்றம் செய்யத் தெரிந்தவர்கள்.

 DOOR CLOSER இணைக்கப்பட்ட கதவுகள் தானாகவே சாத்தப்படுவதுபோல, தானாகவே, வேலிகளில் தானாகவே  சாத்திக் கொள்ளும் சங்கடப்படலையை யாழ்பாணத்து வேலிகளில் காணலாம். தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி வேலியால் அடுத்த வீட்டுக்கு சென்று சேதம் விளைவிக்கூடாது என்பதற்காக A ஏ என்ற ஆங்கில எழுத்து வடிவில் பனைமட்டையை தடையாகக் கட்டி ஆட்டிகுட்டியின் கழுத்தில் மாட்டி  விடுவார்கள்.

விறகடுப்பில்  மண்சட்டியில்  கீரை வகை மர வள்ளிக்கறி எனச் சுவைத்த எங்கள் உணவு , ஊரில் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழா- படித்த  பள்ளிக்கூடம், பாவித்த பழைய சைக்கிள் வண்டிகளை வாங்க விற்க  என ஒரு சைக்கிள் சந்தி ..இப்படியாக  எல்லாம் இன்பம் தந்தன.
...தயாரிப்பாளர்களின் உத்தரவுக்காலதைக் (GUARANTEE PERI0D) கடந்தும் யாழ்ப்பாணத்தவருடன் சீவியம் நடாத்திய A 40 ரகக் கார் –றலி சைக்கிள் – இப்படியாக எல்லாவற்றிலும் ஒருவகைச் சுகம் .. மகிழ்வு நிறைவு திருப்பதி என வாழ்ந்த சமூகம்

உரையை நிறைவு செய்யுமுன் இரண்டு செய்திகள்:-

இன்று வெளியிடப்படும் நூலின் முதல் பிரதியை பெறுவதற்காகவே நூலாசிரியரின் அண்ணா திருமிகு கோ.வேல்நாதன்,  அண்ணி திருமதி .வேல்நாதன் ஆகியோர் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாக அறிய முடிந்தது. புலம் சிதறியவர்கள் உறவையும் நட்பையும் வைத்து நூலாக்க முயற்சிகளுக்கு உதவ முன் வருவது கண்டு வணக்கத்துடன் பணிவான நன்றிகளைத் தெரிவித்து, பாராட்டி மகிழ்வதுடன் இவர்களைப்போல் வெளிநாடுகளில் வாழ்வோர் வசதிகள் வாய்ப்புகளைப் பொறுத்து எமது படைப்பாளிகளுக்கு ஆதரவும் உதவியும்  நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுவிஸ் என்றதும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பூலோகத்தின் சொர்க்கம் என்று சொல்லப்படும் சுவிஸ் நாட்டில் இருந்த சில நாட்கள் நினைவுக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் அழகு! அழகு! கொள்ளை அழகு!!.

எங்கள் வீதிகள் சிலவற்றில் காலணியுடன் நடக்கவே தயக்கம். சுவிஸ் வீதிகளில் விரிப்புகள் இன்றி தூங்கக் கூடிய அளவுக்கு சுத்தமாக தூய்மையாக இருந்தன என்று சொல்வதை விட மனம் கூசாமல் சாப்பாட்டை வைத்து சாப்பிடக் கூடிய அளவுக்கு சொக்கலட் வாசம் வீசும் சுவிஸ் வீதிகள்  இருந்தன என்றாலும் பொருந்தும்.

அந்த சொர்காபுரியிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் ஒரு கூட்டத்தில் பேசினேன் –“ கடந்த சில நாட்களாக சுவிஸில் என்னை உபசரித்த நண்பர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள். நாளை மாலை சூரிச் சிலிருந்து கிளம்பும்  விமானம் என்னையும் சுமந்து செல்லும். மறு நாள் எனது சொந்த மண்ணில் ....அந்த மணல் ஒழுங்கைகளில் வெறும் காலுடன் நடப்பேன்

நான் சிறு வயதில் பட்டம் பறக்க விட்ட வல்லைவெளி- பந்தடித்து விளையாடிய  பாலசிங்கம் வீடு- போர்த்தேங்காய் அடித்த உடுப்பிட்டி  வீரபத்திரகோவில்- கிளித்தட்டு மறித்த  கிணற்றடி ...” தொடர்ந்து பேச முடியவில்லை. மண்டபத்திலிருந்த நண்பர்கள் மேடைக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து கண்கலங்கினார்கள்- “ அண்ணா ..நீங்க சொந்த மண்ணுக்குப் போறீங்க ...எங்களால் போக முடியாமல் இருக்கே ..” நானும் அழுதேன். இது தான் யாழ்பாணத்து நினைவுகள் !

அடுத்து ஒரு செய்தி என்பதை விட அன்பான வேண்டுகோள் என்று சொல்வோமா-
பாடசாலைகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கும் ஆக்கபூர்வமான பண்பாட்டை வளர்க்க வேண்டும் புத்தகங்களை வாங்கும் பணம் வீண் செலவல்ல அது கல்விக்கான முதலீடாகும்.

பாடசாலைகள் அதிகமுள்ள மாவட்டம் யாழ்பாணம் இங்குள்ள பாடசாலைகளில் இடம்பெறும் பரிசளிப்பு விழாக்களில் பெறுமதிமிக்க நூல்களைப் பரிசாக வழங்க அதிபர்கள் முன் வர வேண்டும் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனது பாடசாலையில் நடைபெற்ற போட்டியொன்றில் வெற்றியீட்டிய போது “பார்த்தீபன் கனவு “என்ற நாவலைப் பரிசாகத் தந்தார்கள் .அந்த நூலை நான் மட்டுமன்றி எனது வீட்டில் உள்ள உறவினர்கள் ,அயலவர்கள் ,நண்பர்கள் என அனைவரும் விருப்பத்துடன் படித்துப்பயனடைந்தோம் .

புத்தகங்களை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கும் பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அறிவுள்ள சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.இதன் மூலம் புதிய எழுத்தாளர் தோன்றுவார்கள் அண்மைக் காலத்தில் இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும் வழக்கம் அருகி வருகின்றது இதன் மூலம் இந்தக் கருத்தும் மாறும் நிலை ஏற்படும்.

நாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக் காண்பதற்காக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.



Sunday, August 17, 2014

"தமிழறிஞர் அகளங்கன் நினைவாக வவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது"...... உடுவை எஸ்.தில்லைநடராஜா

தமிழறிஞர் அகளங்கன் நினைவாக
 வவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது   

(20-07-2014 வவுனியாவில் அகளங்கன் அவர்களின்  மணி விழா நிகழ்வில் உடுவை எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )




சுமார்  நாற்பது நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் வவுனியா வசதிகள் குறைந்த பின் தங்கிய மாவட்டம் என்று கருதப்பட்ட காலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்ட காலத்தில்- அதாவது இன்றைய  மணிவிழா நாயகனான அகளங்கன், மாணவனாக இருந்த  காலம் முதல்  கவிதை கட்டுரை சிறுகதை நாவல் ஆராய்சிக்கட்டுரை என்று படிப்படியாக  பல துறைகளில்  அகலமாகவும் சில துறைகளில் ஆழமாகவும் கால் பதித்தவர் .,


அகளங்கன் . தான் மட்டும் எழுத வேண்டும்- தான் மட்டும் நூல் வெளியிட வேண்டும்- தான் மட்டும் மேடையேற வேண்டும்- என்று கலை இலக்கிய நடவடிக்கைகளை தன்னோடு மட்டும் என்று மட்டுப்படுத்தாமல் பல எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர்., சிற்பக்கலை வல்ல அருட்கலைவாரிதி. சண்முகவடிவேல் ஸ்தபதி, ஆன்மீகத் துறையில் ஈடுபாடு மிக்க சிவநெறிப்புரவலர்.சி.ஏ.இராமசாமி  மற்றும் கலா பூசணம் தேவராஜா, மனிதநேய மாமணி.நா.சேனாதிராஜா, நடனக் கலை வளர்க்கும் திருமதி.சூரியயாழினி வீரசிங்கம், மிருதங்கக் கலைஞர் கலாபூசணம் கனகேஸ்வரன், வயலின் வாத்தியக் கலைஞர். கலாபூசணம் திருமதி விமலேஸ்வரி கனகேஸ்வரன், சோதிட நூல் எழுதிய கவிஞர் கண்ணையா, சாஸ்திரிய சங்கீதக் கலை வளர்க்கும் கிருஷ்ணகுமாரி இளங்கலைஞர் இசைவேந்தன்.கந்தப்பு ஜெயந்தன் எல்லோருடனும் நட்பு பாராட்டி வவுனியாவை முன்னணிக்குக் கொண்டு வர தனது பங்களிப்பை நல்கியவர் அகளங்கன். 

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் எழுதியும் பேசியும் வருபவர் . இன்று அவரது மணிவிழாவுக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக கல்விமான்கள் மற்றும் அறிஞர்கள் கலைஞர்கள் கூடியுள்ளார்கள். எல்லோரும் அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் கடந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பரிசில்கள் பட்டங்கள் விருதுகள் ஆகியவற்றை காணும் போது  பெரிய அளவிலான பாராட்டு விழாவுக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவர் என்னும் கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள் வார்கள்.

பழந் தமிழ் இலக்கியங்களின்  சுவையான பகுதிகளை  அகளங்கன் படைப்புகளில் காணலாம் .,  அந்தப்படைபுகளில்  எல்லாம் கலைநயமும் கவிநயமும் இணைந்திருக்கக் காணலாம்.,  ஆக்கத்திறன் மிக அகளங்கன் பல்வேறு துறைகளில் ஆற்றலும் ஆளுமையும் உடையவர்.,அவரது திறமைகளுக்கும் புலமைக்கும் அவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும் அங்கீகாரமாகவே உள்ளன .நாள்தோறும் பரிமாறும்  கருத்துகள் பாராட்டுக்கள் காற்றில் கரைந்துவிடும் என்பதால் அகளங்கனைப்பற்றிய  அருமையான பதிவுகளை  அடக்கிய நூலான மணிவிழா மலர்  வெளியிடப்படுகிறது

என்னைப்பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பொன்னாடை போர்த்தும் கலாசாரம் நம் நாட்டில் பரவலாகப் பெருகி பொன்னாடையின் பெறுமதியை அதாவது  போர்த்தப்படுபவரின் பெறுமதியை போர்த்துபவரின் பெறுமதியை குறைத்து வருகிறது .அதை மாற்ற வேண்டும். 1991 ம் ஆண்டில் தமிழ்மொழியில்  வெளியான சிறுகதை தொகுதிகளில்  உலகளாவிய ரீதியில் பரிசில் பெற்ற சிறுகதைகளை எழுதியவர்களுக்காக   இந்தியாவில் பாராட்டு விழா நடைபெற்ற போது  பொன்னாடை என்று சொல்லி குளிக்கும்போது பயன்படுத்தக்கூடிய சாதாரண துவாயை போர்த்தினார்கள் . உண்மையில் அந்த சாதாரண துவாய் பொன்னாடையை விட நன்கு பயன்பட்டது

1993 ல் வவுனியா மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்த வவுனியா இலக்கிய விழாவில் முல்லைமணி அருணா செல்லத்துரை அகளங்கன் போன்ற படைப்பாளிகளுக்கு பொன்னாடைக்கு பதிலாக பட்டு  வேட்டிசால்வையும் நடன ஆசிரியை திருமதி துவராகா கேதீஸ்வரனுக்கு பட்டுச்சேலையும் போர்த்திக் கௌரவித்தார்கள். அதே போன்று இன்று அகளங்கனுக்கு பட்டு வேட்டிசால்வை போர்த்தி  . கௌரவித்து மகிழ்வதோடு இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதால் பயன் மிக பொருளால் கௌரவம் செய்வது போலவும் உணரலாம் .
.
அடுத்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து  புத்தக பண்பாட்டை  வளர்க வேண்டும் . பாடசாலை மட்டங்களில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு  பரிசளிப்பு நிகழும் சந்தர்பங்களில் மாணவர்களுக்கு முடிந்தளவுக்கு நூல்களை பரிசில்களாக வழங்கினால் அவர்கள் அறிவும் வளரும் .நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெருகும் . ஒரு மாணவருக்கு நூலாக வழங்கும்போது பலர் அந்நூலை வாசிக்க சந்தர்பம் கிடைக்கிறது என்பதையும் மறந்து விட முடியாது .

கிராமப்புற பாடசாலையில் படித்த அந்த நாட்களில் வருடாந்த பரிசளிப்பு தினத்தில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு பெறுமதியான நூல்களை பரிசில்களாக வழங்குவார்கர்கள். நூலின் முதலாம் பக்கத்தில் மாணவனின் பெயர் வகுப்பு அதிக புள்ளிகள் பெற்ற பாடத்தின் பெயர் எழுதப்பட்டு கல்லூரி அதிபரால் கையொப்பம் வைக்கப்பட்டிருக்கும்  சிறு வயதான மாணவப்பருவத்தில்  பரிசில்களாக கிடைத்த நூல்களை நண்பர்கள் அயலவர்கள்  பலர் படித்துள்ளார்கள் .சில நூல்கள் எனது வீட்டில் இன்னும் இருக்கின்றன . உலோகங்களாலும் மரங்களாலும் செய்யப்பட்ட கேடயங்கள் கிண்ணங்கள் கரள் பிடித்து அப்புறப்படுத்த பட்ட போதும் நூல்கள் இன்னும் பலரால் வாசிக்கப்படுகின்றன

இன்றும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் –கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கு செய்யும்  நிகழ்வுகளில் கலந்து கொள்வோருக்கு பெறுமதியான நூல்களை வழங்கி கௌரவம் செய்வதும் மனம் கொள்ளத்தக்கது. வாழ்கையின் பல்வேறு சந்தர்பங்களில் பிறருக்கு பணமாகவோ பொருளாகவோ பல அன்பளிப்புகளை வழங்கி  வருகின்றோம். முடியுமான சந்தர்பங்களில் நூல்களை பரிசாக வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம்
மற்ற மாவடங்களுக்கு முன்னோடியாக ஊர்ப் பெரியார்களுக்கு  சிலை வைப்பதில் முன்னணியில் திகழும் இடம் வவுனியா . அண்மையில் கூட கூட்டுறவு பெரியார் முத்தையா அவர்களுக்கு  சிலை நிறுவப்பட்டது
என்னைப் பொறுத்த அளவில் அகளங்கன் போல தமிழறிஞர்கள் பலர்  நம் நாட்டுக்கும் நமக்கும்  வேண்டும். இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துக்கொண்ட அகளங்கன் படிப்பதற்காக யாழ்  பல்கலைக் கழகம் சென்ற போது யாழ் நூல் நிலையத்தில் நுழைந்ததால் அவருக்கு அர்த்தம் உள்ள மணிவிழாவை கொண்டாடுகின்றோம்   அகளங்கன்  யாழ் நூலகத்தில் இலக்கியம் சோதிடம் என்று ஒரு விடயத்தையும் விடாமல் எல்லாவற்றையும் படித்தார்

வாசிப்பால் வாழ்கையில் உயர்ந்தவர் பலர்.அவர்களில் அகளங்கனும் ஒருவர்
எனவே அகளங்கன் பெயரால் ஒரு நல்ல நூலகம்- உருவாக வேண்டும் வவுனியா மாவட்டத்தில் அவர் பிறந்த பம்பைமடுக் கிராமத்திலோ அல்லது வாழும் திரு நாவற் குளத்திலோ அல்லது வவுனியாவில் வேறு ஓரிடத்திலோ ஒரு நூலகம் அமைப்பது பயனுள்ள பணியாகும்
எங்கள் மத்தியில் அகளங்கன் போல இன்னும் பல தமிழறிஞர்கள்  உருவாகவேண்டும் என்றால் ஊர் தோறும் நூலகங்கள் பல உருவாக வேண்டும்

எதையும் செய்யலாம் நிறைவேற்றலாம் என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும்போது அவை வெகு எளிதாக  நிறைவேறுவதையும் காணலாம்

யாழ்பாணத்தில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த நூலகத்துக்கு இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருந்த போது நூலக அபிவிருத்திக்கு கொடுத்த சிறுதொகை நூலகத்தைப் பெருப்பித்த வரலாறு எல்லோருக்கும் தெரியும் கொழும்பு தமிழ் சங்க செயலாளராக இருந்த தமிழவேள் கந்தசாமி இந்திய திரைப்பட நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு விண்ணப்பித்தபோது கிடைத்த உதவியால் தமிழ்ச் சங்க நூலகம் விரிவடைந்தது

போராட்ட காலத்தில் கிளிநொச்சியில் மரநிழலின் கீழ் இரவல் மேசையில் கச்சேரி நிர்வாகம் நடந்தது.

எனவே நல்ல எண்ணத்துடன் ஒரு சிறிய அறையில் கூட அகளங்கன் நூலகத்தை ஆரம்பிக்கலாம் .இந்த முயற்சிக்காக என்னால் முடிந்த சிறு பணத்தொகையையும் எனது நூல்களின் சேகரிப்பில் ஒரு பகுதியையும் அகளங்கன் மணிவிழாக் குழுத்தலைவர் கலாநிதி ஓ.கே.குணநாதனிடம் வழங்குகின்றேன் .

சிறுதுளி பேரு வெள்ளம் என்பதை நாங்கள் மறுப்பதற்கில்லை .எதிர் காலத்தில் அறிவுள்ள சமூகத்தை காணும் எண்ணத்துடன் ஒவ்வொருவரும் சிறிய தொகையை கொடுத்து இரண்டொரு நூல்களை கொடுத்து பல அறிஞர்களை இந்த மாவட்டத்தில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது

இன்று அன்பளிப்பு செய்யும் நூல்களுக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உலகத்தில் இந்து கலைகளஞ்சியத்தை வெளியிட்ட நாடு இலங்கை. முதலாவது தொகுதியின் பதிப்பாசிரியர் கலாநிதி பொன்.பூலோகசிங்கம் வவுனியா மண்ணைச் சேர்ந்தவர். 70 களில் வவுனியா மேடை நாடகங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்ட நீ.பி.அருளானந்தம் எழுதிய  எங்கள் பாரம்பரிய கலையான  நாட்டுகூத்தை தொனிப்பொருளாக வைத்து எழுதிய நாவலையும் அவரது நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்குகின்றேன் வவுனியா தொடர்பான பதிவுகளும் இந்நூல்களில் பரவலாக உண்டு.  

மாற்றங்கள் மறுப்பதற்கில்லை எனவே   அகளங்கன் நூல்கள் பிற மொழிகளுக்கும்  மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையும் உண்டு 

Tuesday, June 17, 2014

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல் -உடுவை எஸ்.தில்லைநடராசா

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல்

வவுனியா கள்ளிகுளம் பொன்.முத்தையா அவர்களின் சிலை திறப்புவிழாவில் பொது சேவை ஆணைகுழு உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராசா ஆற்றிய உரையிலிருந்து ......


(தொகுப்பு: கரவை க.தே.தாசன்)


அமரர் பொன்.முத்தையா வவுனியாவில் பிரதானமாகக் கிடைக்கும் உள்ளூர் விளைபொருட்களையும் ஏனைய வளங்களையும் கூட்டுறவு அமைப்புகளினூடாக பயன் படுத்தி விவசாயிகளினதும் விலங்குவேளாண்மை செய்வோரினதும் பொருளாதாரத்தையும் வாழ்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டுமென பல ஆலோசனைகளை காலத்துக்குக்காலம் முன் வைத்தார். அவர் வழங்கிய பெறுமதியான ஆலோசனைகளால் தனிப்பட்டவர்கள் மாத்திரமன்றி பொது நிறுவனங்களும் பெருமளவில் பயனடைந்தன. சாதரணமாக வாழ்பவர்கள் மரணித்த பின் அவரது குடும்பத்தினரால் கூட நினைவு கூரப்படுவது குறைந்து வரும் இந்நாட்களில் திரு.முத்தையா காலமான பின் அவரது பெயரால் “முத்தையா மண்டபம் “அமைக்கப் பெற்று நல்ல நிகழ்வுகள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. அவர் இறந்து இருபத்தெட்டு வருடங்களின் பின் அவர் பிரதானமாக வழிகாட்டிய கூட்டுறவுச் சங்க வளவில் அவருக்கு சிலை நிறுவி, அந்த நிகழ்வுக்கு அவரது மனைவி மக்கள் உறவினர் ஊரவரை அழைத்தது மாத்திரமன்றி, வவுனியா மாவட்டத்தில் அவரது காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய மூன்று அரசாங்க அதிபர்களும் சிலை திறப்புவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து, அவரின் முக்கியத்துவத்தையும், அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் உணரக்கூடியதாக உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வசதிகள் மிகக்குறைந்த”கள்ளிகுளம்” என்றழைக் கப்படும்பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவரான திரு. முத்தையா பிரித்தா னிய இராணுவத்தில் யுத்தகாலத்தில் சேவைபுரிந்தவர் என்று அறியமுடிகிறது. அதனால் அவர் பல் வேறு தரத்தினரோடு நெருங்கிப் பழகியதால் பெற்றுக் கொண்ட  அறிவு அனுபவம் ஆகியவற்றோடு வவுனியா மாவட்டத்தைப் பற்றி பூரண விபரங்களையும் அறிந்திருந்த ஒருவராகவும் இருந்திருக்கின்றார். தெய்வ நம்பிக்கை மிக்க ஆன்மீக வாதியாகவும் வாழ்ந்திருக்கின்றார்.
1970 களுக்கு முன் வவுனியா பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தை வழி நடத் தியவர் ..முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்று பெருமைக் குரியவர் அமரர் கள்ளிகுளம் முத்தையா.
1973-74-75  காலகட்டத்தில் வவுனியா  பல நோக்கு கூட்டுறவு  சங்கத்தின் அருகே கடுங் கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது., அந்தக் காணியில் ஒரு நெல் குற்றும் ஆலையும் அமைக்கப்பட்டிருந்தது. .அதற்கு அருகாமையில் ஒரு கோழிப்பண்ணை இருந்தது .வவுனியா மக்கள் தரமான கோழி இறைச்சியையும் முட்டையையும் அங்கே வாங்கக் கூடியாதாக இருந்தது.இந்த நிறுவனங்கள் வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமானவை . இது மட்டுமல்ல நொச்சி மோட்டையில் ஒரு ஆடைத்தொழிலகமும் இருந்தது .அந்தக் கிராம மக்களும் அயலூர் மக்களும் வவுனியா நகருக்கு வராமல் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததுடன் அந்நிறுவனம் பல இளம் பெண்களுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியது.
அப்போதைய   பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வவுனியா நகருக்கு அண்மையிலுள்ள ஓமந்தை தோடம் பழச் செய்கைக்கு உகந்த இட மென அறிந்து பிபிலை என்னுமிடத்திலிருந்து தோடம்பழக்கன்றுகளை வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டும் அன்றையகால சூழ்நிலைகளால் அத் திட்டம் கைவிடப்பட்டது அதே போல வவுனியாவில் பெரும் எண்ணி க்கையான கால் நடைகள் இருப்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் வவுனியா மக்களின் தேவைக்கு மேல் மித மிஞ்சியதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்தி பால் பதனிடும் சாலை ஒன்றை வன்னியில் ஆரம் பித்து”வன்னிஸ்பிரே” என்னும் வர்த்தகப் பெயருடன் பால் மா விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது  அது மட்டுமல்ல ..போத்த லில் அடைக்கபட்ட பால் நிறமூடப்பட்ட வாசனைச் சுவையூட்டப்பெற்ற பால் பட்டர் பாலாடைக்கட்டி தயிர் எல்லாவற்றையும் தரமான பொருட்களாக நியாமான விலையில் கிடைக்க வழி வகுத்து போசாக்குச் சத்துள்ள உணவு வகைகளை விநியோகம் செய்வதோடு பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அண்மையில் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சுமார் இருபத்தையாயிரம் பால் தரும் பசுக்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து மாதம் தோறும் சுமார் இரண்டு லட்சம் லீட்டர் பால் பெறப்படுவதாகவும் அறிய முடிந்தது. மேலும்  இரண்டாயிரம் எருமைமாடுகள்,  பத்தாயிரம் ஆடுகள் வளர்க்கப்பட்டு அவற்றின் பயன்களையும் இங்குள்ளவர்கள் பெறுவதாக அறிகின்றேன். வவுனியாவில் வளர்க்கப்படும் கோழிகள் மாதம் தோறும் சாராசரி இரண்டு லட்சம் முட்டைகள் இடுவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
சாதாரணமாகவே பப்பாசிப்பழமும் வாழைப்பழமும் தாரளமாக வவுனியாவில் உண்டு. மாம்பழம் பலாப்பழம் போன்ற பருவ காலப் பழங்களும் உண்டு. மிகையாகக் கிடைக்கும் காலத்தில் பழங்களைப் பதனிட்டு ஜாம் பழரசம் வற்றல் போன்றவற்றை போத்தல், தகரத்தில் அடைத்தும் பிற இடங்களுக்கு அனுப்பலாம்.. சாதாரணமாக எங்கள் சந்தைகளில் தேங்கிக்கிடக்கும் கறிவேப் பிலைக்கும் முருங்கையிலைக்கும் நம்மவர் புலம் சிதறிய நாடுகளில் நல்ல கிராக்கி.
60 களில்       70  களில்    வவுனியா நகரத்திலுள்ள ஹோட்டல்களுக்கு சென்றால்  வேறு ஹோட்டல்களில் காணாத தனித்தன்மையைக் காணக்கூடியதாக இருக்கும். வவுனியாகுளம், நகரோடு இணைந்திருக்கும் வைரவபுளியங்குளம் உட்பட சிறு சிறு குளங்களில் உள்ள  தாமரையிலைகள் சாபாட்டுக்கடை களுக்கு வரும்.அதனால் உள்ளூரில் சிலருக்கு உழைப்பு  சுழல் மாசு அடைவதில்லை. பயன் படுத்திய இலைகள் பின்னர் மண்ணோடு சேர்ந்து உரமாகிறது. இன்று தாமரையிலைகளுக்குப் பதிலாக பொலிதீன் கடதாசி களில் உணவு பரிமாறல்.அதிகமான செலவு ஒரு புறம்.சூழல் மாசடைவது மறுபுறம்.
 கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் நாள்தோறும் பல புகையிரதங்கள் ஓடிய காலத்தை நினைத்துப்பார்க்க ஆசையாக இருக்கிறது.இப்போது வெகு விரைவில் கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் யாழ்பாணம் வரை செல்லும் என்ற தகவலும் கிடைத்துள்ளது .அந்த நாட்களில் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணம் வரை “வவுனியா கச்சான்”  “வவுனியா கச்சான்”  என கூவி விற்ற வியாபாரிகள் பலரைக் கண்டிருக்கின்றோம் கட்டுப்படியான விலையில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த நட்டுநொருக்குத் தீனி வவுனியா கச்சான்.பெரும்பாலும் வறுத்து சிறு பைகளில் அடைக்கக் பட்டாலும் பல்வேறு வகைகளில் பதனிடப் படுவதையும் காணலாம். கச்சானுடன் . .மிளகாய்த்தூள் சேர்த்தால் உறைப்பாக இருக்கும் சீனிப்பாணியில் போட்டு எடுத்தால் மிகச் சுவையாக இருக்கும்   உப்புத்தூள் இட்டால் உவப்பாக இருக்கும்.இவற்றை இங்குள்ள கூட்டுறவு சங்கம்   கொழும்பில் பொருட் காட்சி ஒன்றில்  விற்பனை செய்தபோது அமோகமான வரவேற்பு கிடைத்தது . சாதாரணமாக கச்சான் பருப்புகளை எடுத்துக் கொண்டு கோதுகளை வீசி எறிந்து விடுவார்கள். இந்தியாவில் கச்சான் கோதுகளை கடின அட்டை தயாரிப்பதற்கு கடதாசி தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதாகவும் வயல்களில் உரமாக போடுவதாகவும் பத்திரிகைகள் மூலம் அறிந்துள்ளேன்
இன்று மின்சாரத்தில் இயக்கும் அரவை இயந்திரங்கள் வருவதற்கு முன்பு நல்ல அம்மி ஆட்டுகல்லு கல்லுரல் வவுனியாவிலிருந்தே பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வவுனியாவிலும் பனைமரங்கள்  உண்டு. இலங்கையில் பொதுவாக ‘சோத்தி ‘என்று தரம் குறைவாகக் கருதி கழித்து விடப்படும் பனைமரங்களில் இருந்து அழகான அலங்காரப் பொருட்கள் செய்வதையும் –அவை வரவேற்பறைகளில் வைக்கபட்டிருப்பதையும் தாய்லாந்தில் பார்த்துள்ளேன். அது மட்டுமல்ல நுங்கை உள்ளுடனாக வைத்து சுசியம் போன்ற ஒருவகைத் தின்பண்டத் தையும் சுவைக்கக்கூடிய வாய்ப்பு அங்கே  கிடைத்தது . எங்கள் பகுதிகளில் கிடைக்கும் வளங்களையெல்லாம் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி சொல்வார் அமரர் முத்தையா. முடியமான போதெல்லாம் தெரிந்த விடயங்களையே திருப்பித் திருப்பிச் செய்யாமல் புதுப்புது வடிவம் புது மாதிரி என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பார்

வவுனியாவில் சாதாரண விவசாயிகளே கடின உழைப்பால் விவசாய மன்னர்களாக பட்டம், பதக்கம்,பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.இன்னொரு விடயம் 80களில் வவுனியாவில் கத்தரிக்காய் அமோக விளைசல் காணப் பட்டது. அதனை பிற இடங்களுக்கு சாக்கில் கட்டிக்கொண்டு செல்லும்போது கணிசமான அளவு கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடைவதை அவதா னித்த “வேலு” என்ற விவசாயி  கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடை வதை தவிர்க்கும் வகையில் புதிய இனம் ஒன்றை அறிமுகம் செய்தார். அது அந்த நாட்களில் “வேலு கத்தரிக்காய்” என் அழைக்கப்பட்டது
வவுனியாவின் வட புறத்தே நெடுங்கேணி பகுதியில் சுத்தமான தரமான தேன்.கிடைக்கும். அதை அளவான போதல்களில் அழகிய லேபல்கள் ஒட்டி சந்தைபடுத்தினால் கணிசமான பணத்தை பெறக்கூடியதாக இருக்கும்
கொழும்பில் சில கடைகளில் வவுனியா அரிசி என்று சொல்லியே விற்பனை செய்வார்கள். ஒரு பிரதான இடத்தில் “ வவுனியா அரிசிக்கடை” என்று பெயர்ப் பலகையே மாட்டப்பட்டிருக்கிறது. வியாபாரத்தை விருத்தி செய்து நெல் அரிசி மட்டுமல்லாது அரிசி மா, அவல் அரிசியையும் அரிசி மாவையும் மூலப்பொருளாகக் கொண்ட உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக அமரர் முத்தையா தெரிவித்த ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளக்கூடியவை கிடைக்கும். விவசாய திணைக்கள  புள்ளி விபரங்களின் பிரகாரம் கால போகத்தில் சுமார்  ஐம்பதி னாயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான  நெல்லும்  சிறு போகத்தில் அதில் அரைவாசியளவு நெல்லும் விளைவதாக அறிய முடிகிறது 
காலபோக மற்றும் சிறு போக காலங்களில் சோளமும் செய்கை பண்ணப் படுகிறது. இன்று சோளத்தை அவித்து விற்பனை செய்வோரைக் காணலாம். அவித்த சோளம் பயணிபோரின் சிற்றுண்டியாக உள்ளது. அது  ஹோட்டல் களில் சூப் லட்டு உட்பட பலவகையான பண்டங்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.வெளி நாடுகளிலிருந்து கவர்சிகரமான பெட்டிகளிலும் பொதிகளிலும் இறக்குமதியாகும் சோளம் தான் கணிசமானோரின் காலை உணவாகவும் உள்ளது. சோளத்தைப் பதனிடல், பொதி செய்தல் ஆகியவற்றோடு விளம்பரம் விநியோகம் ஆகியவற்றையும் சீராகச் செய்வதன் மூலமும் வருமானத்தைப் பெருக்கலாம்
70 கள்   80 களில் உழுந்து செய்கை பண்ணி பெரும் செல்வந்தராக வந்தோ ரும் இருக்கிறார்கள். வவுனியாவில் விளைந்த உழுந்தில் பெருமளவு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நம்மவர் உழுந்தை தோசை இட்லி வடை என்று சாப்பிட இறக்குமதி செய்தவர்கள் அதனை நீரில் ஊற வைத்து முளை விட்டதும் முழுமையாகவே பச்சையாகச் சாப்பிடுவதை சில நாடு களில் பார்த்திருக்கின்றேன். அதில் தான் போஷாக்கு அதிகமாம். தருவிப் போருக்கு தெரிந்த சங்கதிகள் விளைவிப்போருக்கு தெரியாமலிருக்கிறது என திரு முத்தையா சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெடித்த கலவர சமயம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் வெங்காய கொள்வனவு விற்பனை விடயத்தில் பெருந் தொகையை இழந்து எல்லோரும் சோர்ந்து போய் இருக்கையில் வியாபாரம் என்பது எப்போதும் ஒரேமாதிரி இருக்காது . எழுப்பி விழுத்தும்  எதிர்பாராத லாபங்களும் வரும் என்றார்,அமரர் முத்தையா. அது போலவே வவுனியா ஊடாக செல்லும் பாரவூர்திகளில் பொருட்களை இறக்கி ஏற்றும்போது பெற்ற வருமானம் விழுந்த சங்கத்தை எழும்ப வைத்தது.
அமரர்.பொன்.முத்தையா வழங்கிய இன்னொரு சிறந்த ஆலோசனையையும் பதிவு செய்தாக வேண்டும்.  1983 நடுப்பகுதியிலிருந்து உள்நாட்டுப்போர் தொடர் பிரச்சினைகளாகின. ஒரு நாள் மாலை தெற்கிலிருந்து  நூற்றைம்பது பேர் வந்த போது,அவர்களுக்கு  உணவு வழங்க முடியாமல் கச்சேரி உத்தி யோகத்தர் தடுமாறினார்கள். வவுனியா வர்த்தகர்கள் பாண்,ஜாம்,வாழைப்பழம் என்று வாரி வழங்க வந்தவர்கள் வயிறு குளிர்ந்தது ஏனென்றால் அப்போது புனர்வாழ்வு அமைச்சு என் ஒரு நிறுவனம் இருக்கவில்லை.
 பிரச்சினைகள் பெருகிக்கொண்டு போவதை உணர்ந்த வவுனியா அரச அதிபர்.கே.சி.லோகேஸ்வரன், இடம் பெயர்ந்து வருவோர்,போராட்டத்தினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார்.அக்கூட்டத்தில் அரச உத்தியோகத்தர்களோடு பொது மக்கள் சார்பில் அமரர்முத்தையா அவர்களையும் அழைத்திருந்தார். கச்சேரியில் நடை பெற்ற கூட்டத்தில்  அரச உத்தியோகத்தர்களுக்கே முன் மாதிரியாக சில  தீர்மானங்களை எடுக்க வழி காட்டியவர் முத்தையா.

சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வருவோருக்கு முதலில் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றார்.அது சமைத்த உணவு என்று அழைக்கப்பட்டது. தொடர்ந்து சமைத்த உணவு வழங்க முடியாது,ஆகவே உணவுப்பொருட்கள்.சமைப்பதற்கான உபகரணங்கள்  வழங்க வேண்டுமென்று யோசனை சொன்னார். அதுவே பின்னர் உலருணவு சமையல் பாத்திரங்கள் என்ற பெயரைப் பெற்றது. அரச உத்தியோகத்தர் இடம் பெயர்ந்தாலும் சம்பளம் கிடைக்கும். மற்றவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது போலவே இருப்பிடம் அமைக்கவும்  நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப் பட்டது.
1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின் “ஒருங்கிணைந்த புனர்வாழ்வு உதவித்திட்டம்” என்பது நடைமுறைப்படுத்த பட்டபோது, சமைத்த உணவு சமையல் பாத்திரங்கள் மீளக் குடியமர்தல் படி ,  உற்பத்தி முயற்சி நன்கொடை வீடமைப்பு உதவி  என்ற பெயர்கள் COOKED MEALS,COOKING UTENSILS, RESETTLEMENT ALLOWANCE,PRODUCTIVE ENTERPRISE GRANT, HOUSING ASSISTANCE ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நாடெங்கும் பரவலாக அறிமுகமானது.

Wednesday, May 21, 2014

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 04-05-2014 ஞாயிறு மாலை நடைபெற்றது

அண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பலத்தின் படத்துக்கு தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜா மலர்மாலை சூடிய போது
உடுவை.எஸ்.தில்லைநடராஜா தலைமை யுரையாற்றுகையில்
செயலாளர் என்.சரவணபவன் உரையாற்றுகின்றார்
கூடத்தில் கலந்து கொண்டோருடன் முன் வரிசையில் அமரர் தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார்
கலாநிதி ஏ.நவரட்ணராஜா இரங்கலுரை நிகழ்த்துகையில்
 ஆசிரியர் இ.பஞ்சநாதன் இரங்கலுரை நிகழ்த்துகையில்

ஆசிரியர் ஆர்.பொன்னம்பலம் இரங்கலுரை நிகழ்த்துகையில்

ஆசிரியர் இ.பஞ்சநாதன் மற்றும் உடுவை எஸ்.தில்லைநடராஜா அண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் உரையாடுகையில்
 உ.அ.மி.கல்லூரி ப.மா.ச (கொழும்பு ) கிளைப் பொருளாளர் எம்.கணபதிப்பிள்ளை நிதியறிக்கை சமர்ப்பிகையில்
 
 உ.அ.மி.கல்லூரி அதிபர்.எஸ்.கிருஷ்ணகுமார் உரையாற்றுகையில்
உ.அமி கல்லூரி ப மா ச தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபாபதி,

கல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் உள்ளக ஒலிபரப்புச் சாதனங்களை அன்பளிப்பு செய்த வைத்தியக் கலாநிதி வி.யோகநாதன் ஆசிரியர்.இ.பஞ்சநாதனால் ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்
 கல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் துவிச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தை அமைத்து அன்பளிப்பு செய்த BOTSWANA பொறியியலாளர் ஏ.மகேந்திரன் சார்பில் அவரது உறவினர் ஆசிரியர்.ஆர்.பொன்னம்பலத்தால்  ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்
 
 உ.அமி கல்லூரியில் கல்வி பயின்ற வண.கலாநிதி டி.எஸ்.சொலமன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக நியமனம் பெற்றதைக் கௌரவிக்கும் முகமாக உ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத்தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜாவால் பொன்னாடை போர்து , மாலை சூடி புத்தகப் பரிசில் வழங்கிக் கௌரவிக்க ப்படுகையில்



உ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத் துணைத் தலைவர் ஆர்.முத்துரத்தினானன்தன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்
 பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் செ.சுதர்சன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்
வண.கலாநிதி டி.எஸ்.சொலமன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்
தற்காலிக தலைவர் புதிய ஆட்சிக்குழு தெரிவை நடாத்திய போது
 மீண்டும் புதிய ஆட்சிக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட  உடுவை.எஸ்.தில்லைநடராஜா நன்றி தெரிவித்து  உரையாற்றுகையில்
மீண்டும் புதிய ஆட்சிக் குழுவின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட  என்.சரவணபவன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்
கல்லூரி பழைய மாணவர் கே.தவம் இசை விருந்தளிகையில்


Thursday, May 15, 2014

எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்....-உடுவை.எஸ் தில்லைநடராஜா


எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம்  அவர்கள்
-உடுவை.எஸ் தில்லைநடராஜா
அண்மையில் எம்மை விட்டுப்பிரிந்த கல்விப்பெருந்தகை திரு.தில்லையம் பலம் என்ற பெயரைக் கேட்டால்  என்மனத்தில் உடனடியாகத் தோன்றுவது எப்போதும் புன்சிரிப்பு தவழும் அவரது முகம் – எதிலும் எளிமையான சுபாவம் –இதமானதும் மென்மையானதுமான  பேச்சு ....இவற்றின் சொந்தக் காரர் ..அதிபர் திலகம் –ஆசிரியமாமணி – அமரர். சி.தில்லையம்பலம் அவர் களே! . சிறுவயது முதல் நான் படித்த அதே  உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான் அவரும் உயர் வகுப்புகளில் படித்திருக்கிறார்., அப்போது நான் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை.,அவசியமானபோது கூட அவரைப்பற்றி அறியாதிருந்துள்ளேன் .
நேரடியாகவே விடயத்துக்கு வருகின்றேன்.,  1960 ம் ஆண்டு டிசெம்பர்  வரை படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்து வகுப்பில் முன்னணியில் திகழ் ந்த எனக்கு 1961 க்குப்பின் விஞ்ஞான பாடங்கள் மூளைக்குள் ஏற மறுத்தன. 1963 டிசம்பர் க.பொ.த. (சா /த ) பரீட்சை முடிவுகள் என்னை ஏமாற்றி விட்டது .அப்போது க.பொ.த. (சா /த ) பரீட்சை  டிசம்பர்- ஆகஸ்ட் என இரண்டு தடவைகள்  நடைபெறும்
பிரதி அதிபர் திரு.றோபேர்ட் நவரத்தினம் என்னை நன்கு புரிந்து கொள்ள- அவரின் அறிவுரையோடு க.பொ.த. (சா /த ) 1964 ஆகஸ்ட் மாத பரீட்சையில்  விஞ்ஞான பாடங்களுக்குப் பதிலாக, கலைப் பாடங்களில் எழுத என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன் .
கல்லூரி அதிபர் திரு.எஸ்.எஸ்.செல்வத்துரை பரீட்சையில் பாடங்களை மாற்றி  எழுத பெற்றோரின் அனுமதியும் தேவை என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் .
பெரும்பாலான பெற்றோர் போல எனது பெற்றோரும், என்னை ஒரு doctor ராக பார்க்க வேணும் என்று கனவு கண்டு கொண்டிருந்த காலத்தில் எனது  பெற்றோரிடம் எப்படி கலைப் பாடங்களை மாற்றி  எழுத அனுமதி பெறுவது? கல்யாணப்பரிசு படம் பார்த்ததால் அம்மாவுக்கு விட்டேன் ஒரு டூப் –“ காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் ,”அம்மா  maths படிக்க கஷ்டமாக இருக்கு இந்த சோதனைக்கு maths எடுக்காமல் arithmetics எடுக்கப் போறன்” என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போனதும் நான் எதிர் பார்த்த தற்கு மாறாக அம்மா முந்திக்கொண்டு ,” தில்லையம்பல மாஸ்ரட்டை படிச்ச பொடியள் எல்லாரும் பாஸாம்- நீயும் அவரட்டைப் போய் படி- .அவர் காசும் வாங்கிறதில்லையாம்...நல்லாக சொல்லிக் குடுக்கிறாராம்”
வீட்டில் இருக்க முடியாத நிலையில் உடுப்பிட்டி சந்திக்கு வந்து கொஞ்ச நேரம் நின்றுகொண்டு யோசித்தேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தில்லையம்பலம் மாஸ்டர் வல்வெட்டிப் பக்கமாக இருந்து ஸ்கூட்டரில் வரும் ஆசிரியர் தான். அவரது வீடு இருக்கும் இடமும்  சரியாகத் தெரியாது உடுப்பிட்டி சந்தியிலிருந்து வன்னிச்சி கோவிலடி வரையும் பொடி நடையில் போய் வந்து, இரவு எட்டு மணியளவில்  அம்மாவுக்கு விட்டேன்-இரண்டாவது  டூப் –“ அம்மா தில்லையம்பல மாஸ்டர் வீட்டிலை கதிரை மேசை காணாதாம் .எனக்கு முதல் அங்கை போன பொடியங்களுக்கே இருக்க இடமில்லையாம் “
அம்மா ஒரு மாற்று யோசனையை சொன்னார்:- “இஞ்சை வீட்டிலை இருக் கிறதிலை ஒரு சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வை .சோதினை முடிய திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம் .”
நான் முணுமுணுத்துக்கொண்டே சிணுங்கினேன்-:”என்னை மேசையையும் கதிரையையும் காவிக்கொண்டு உடுப்பிட்டி சந்தியாலை போக சொல்றீங் களோ ?”
எனக்கு வந்த கோபத்தில் ஒரு ஆயுதத்தை பாவித்தேன்., ஒன்றும்  சாப்பிடா மல் படுத்து விட்டேன்.
அம்மா தனக்குத்தானே சொன்னது எனக்கும் நன்றாக் கேட்டது: –“நாளைக்கு காலமை நான் தான் சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வைக்க வேணும்”
ஒரு பத்து நிமிடத்தால் வீட்டுக்கு முன்னால் இருந்த படலை திறந்து சாத்தும் சத்தம் கேட்டு கண் விழித்துப்பார்த்தேன். நல்ல வேளை நான் பயந்தது போல் அம்மா  மேசையையும் கதிரையையும் காவவில்லை., எங்கேயோ பக்கத்து வீட்டுக்கு போவது போல தெரிந்தது.
சுமார் அரை மணி நேரத்திலை திரும்பி வந்த அம்மா எனக்கு அதிர்ச்சி அளிக் கும் செய்திகளை சொன்னார்.
“ நீ தில்லையம்பல மாஸ்டர் வீட்டை போக இல்லையாம் . நீ வல்வெட்டிப் பக்கமாக எல்லே போனனி ! ? .அது வேறை தில்லையம்பல மாஸ்டர் !. இவர் நவிண்டிலிலை இருக்கிற தில்லையம்பல மாஸ்டர்.!அங்கை வாங்கு மேசை யெல்லாம் இருக்காம் . உடுப்பிட்டியிலை இருந்து கனபேர் போறவங்களாம் . மகேந்திரனும் இண்டைக்கும் போய் வந்தவனாம் .நீயும் நாளுக்கு துடக்கம் போ “
இவ்வளவு தகவலுக்கும் பிறகு நான் வாய் திறக்க முடியுமா ?- தகவலை சொன்னவர் எனது பெரியம்மாவின் மகன்.
எனது தாயார் மட்டுமல்ல- பெண்கள் நாலைந்துபேர் சேர்ந்தால் ஊர் உலக செய்திகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்து விடும்.
அடுத்த நாள் மாலை பெரியம்மாவின் மகனுடன் சேர்ந்து நானும் நவிண்டில் சென்று ஆசிரியர் தில்லையம்பலம் கணித பாடம் படிப்பிக்கும் இடத்துக்கு அண்மையிலுள்ள பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இரண்டு மணி நேரம் ஆறுதலாக இருந்தேன். அரை றாத்தல் ரோஸ்ட் பாண் 15 சதம்., மெல் லிய சூட்டோடை சாப்பிட நல்ல ருசி., சம்பலும் வேண்டாம்- கறியும் வேண்டாம்.
ஒரு கிழமையாக  ரோஸ்ட் பாண் சாபிட்டேனே தவிர- தில்லையம்பல மாஸ் டர் பற்றி, அவரது கற்பிக்கும் ஆற்றல், பற்றி அறிந்து கொள்ள அப்போது முயற்சிக்கவில்லை.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பே எங்கள் பெற்றோர், தில்லையம்பல மாஸ் டர் காசு வாங்காமல் - காலமெல்லாம் பயன் தரும் கணித பாடத்தில் எப்படி அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைவது என்று மாணவர்கள் தடுமாறியபோது –தம்மை முழுமையாக அர்ப்பணித்து தன்னை நம்பியுள்ள மாணவர்கள் சித்தி யடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
திரு.தில்லையம்பலத்திடம் மாணவனாக நான் படிக்கக் கொடுத்து வைக்க வில்லை. ஒரு கிழமை கூட ரோஸ்ட் பாண் சரியாக சாப்பிடயில்லை. தில்லையம்பல மாஸ்டரின் பெயரை சொல்லி, பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இருந்து ரோஸ்ட் பாண் சாப்பிடுற  கதை அம்மாவுக்கு போடுத்து.
தில்லையம்பல மாஸ்டரின் பெயரைப் பழுதாக்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் சிறையில் இருத்தி விட்டா,அம்மா .
70 களுக்கு முந்திய காலத்தில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித் தல் கடமையாகக் கருதப்பட்டது .பிரத்தியேக கல்வி நிலையங்கள் பெருமள வில் இல்லாத காலம் –காலையிலும் மாலையிலும் தனிப்பட்ட டியூஷன் வகுப்புகள் இல்லாத காலம்.
இவரது சகபாடியும் இணைபிரியாத நண்பருமாகிய  ஒருவர் ஒருமுறை திரு. தில்லையம்பலதைப் பற்றி சொல்லும்போது- பாடசாலை நாட்களிலேயே கணிதப்பாடத்தை சக மாணவர்களுக்கு ஆசிரியர்களைப்போல படிப்பிக்கும் ஆற்றல் உள்ளவராக இருந்ததாகவும் –அதனால் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் திரு தில்லையம்பலம் மாணவர்களுக்கு ஆசிரியராகக் கடமை யாற்றியதாகவும் தெரிவித்தார்.
ஒருவர் செய்வதைப்போல இன்னொருவர் செய்து காடுவதை  மிமிகிரி என்று சொல்வார்கள். திரு தில்லையம்பலம் பல்கலைகழகத்தில் இருக்கும்போது ஒரு விரிவுரையாளர் வராததால் அவரைப் போல மிமிகிரி செய்யும்போது குறிப்பிட்ட விரிவுரையாளர் வந்து இவர் மீது நடவடிக்கை எடுத்ததால் இவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் அறிய முடிந்தது.
அதன் பின்னர் நுவரெலியாவில் ஆசிரியராக கடமையாற்றி, ஆசிரிய கலாசாலைக்கு சென்று பயிற்சி பெற்றதையும் அறிய முடிந்தது. ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் கற்பிக்கும் ஆற்றலும் மாணவர்களை தம் வழிப் படுத்தி ஒழுக்கமுள்ளவர்களாக்கும் திறமையும் இருப்பினும் இவை திரு தில்லையம்பலத்திடம் சாரசரிக்கு மேற்பட்டதாக இருந்தது.
தன் குடும்ப மேம்பாட்டுக்கன்றி மாணவர் மேம்பாட்டுக்காக –உயர்வுக்காக உழைத்து மாணவரின் மேலான மதிப்பையும் பெற்றோரின் பெரும் அன்பை யும் பெற்றுக்கொண்டார். யார் அவரிடம் சென்று கேட்டாலும் எதுவித வேறு பாடும் காட்டாது பாடம் சொல்லிக் கொடுத்து, பல மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்டக் காரணமான கற்பித்தல் சிகரம் தில்லையம்பலம் என்று சொன் னால் யாரும் இரண்டாவது கருத்து சொல்லமாட்டார்கள்.
கணிதம் கற்க வந்த மாணவர்களை தன் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி மனம் வைத்து கற்பித்தார் .”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் “ என்று பெரியவர்கள் சொல்வது உண்மை என்பது போல அமரர் தில்லையம்பலத்தின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு உயர்ந்துள் ளார்கள்.
பிற்காலத்தில் 90 களில் பிரச்சினைக்குரிய காலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.. ஒருபுறம் போராளிகள் ...இயக்கங்கள் ...மறுபுறம் பாதுகாப்புப்படையினர். இவர்களுக்கிடையில் சம நிலை பேணுதல் என்பது கூரிய கத்தியின் மேல் நடப்பதற்கு ஒப்பானது. சோதனை மிக்க அக்காலத்தில் அதிபர் திரு.தில்லையம்பலத்தின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
ஒய்வு பெற்றாலும் ஓயாமல் கல்விப்பணி சமூகப்பணி எனதன்னை ஈடுபடுத் திக் கொண்டு பொதுப் பணிகளில் பல சாதனைகளை நிலைநாட்டினார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல ஒரு சம்பவம்:-சில வருடங் களுக்கு முன் கொழும்பில் எனது வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் .திறந்து பார்த்தால்.... திரு தில்லையம்பலமும் அவரது மகனும். அப்போது அவர் அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்., பழைய மாணவர் சங்க தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.,சிறிது நேரம் என்னுடன் கதைத்து விட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாணிக்கவாசகரின் தொலை பேசி இலக்கத்தை என்னிடம்தான் பெற்று ஏதோ கதைக்கின்றார்., நிதியுதவி என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தவிதமானதொரு சிரமமும் எனக்கு இருக்கவில்லை., தொலைபேசி உரையாடல் முடிந்ததும் “Thank You Sir “ என்று எனக்கு நன்றி சொன்னார்.,நான் எனது குரலை உயர்த்தினேன் –சற்று தடுமாற்றத்தோடு –“Sir “
அவரது பதில் –“ஓம்  தம்பி ...நீங்க டெலிபோன் நம்பர் தந்ததால் மாணிக்க வாசகருடன் கதைத்தேன் ..Professor துரைராசாவின் பெயரால் ஒரு மாணவனுக்கு புலமைப் பரிசில் கொடுக்க ஒரு லட்சம் ரூபா அனுப்புறாராம்-.ஆசிரியப் பெருந்தகை கேட்டால் ஆயிரமல்ல லட்சக்கணக்கில் உதவி வழங்கத் தக்க நிலையில் வசதியும் விருப்பமும் கொண்ட அவரது மாணவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
 இவர் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்த போது 13-04-2014 உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாட்டுக் கிளைகளின் பழைய மாணவர்கள் உட்பட இங்கேயுள்ள பழைய மாணவர் களும் கலந்து கொண்டதுடன், கல்லூரியின் பௌதிக தேவைகளின் ஒரு பகுதியாக கூட்ட மண்டபத்திற்கு உரிய நாற்காலிகள் திரைசீலைகள்- உள்ளக ஒலிபரப்பி- துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம்-புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்-விளையாட்டு மைதானம் என்பன வழங்கப்பட்டன.
கல்விப் பெருந்தகை அமரர்.திரு.தில்லையம்பலம் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், கல்லூரித்தேவைகள் யாவும் நிறைவேறியிருக்கும்.
அவரின் ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் நன்றாக வாழவும், அவரது மாணவர்கள் மேலும்மேலும் உயர்வடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.