Thursday, May 15, 2014

எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்....-உடுவை.எஸ் தில்லைநடராஜா


எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம்  அவர்கள்
-உடுவை.எஸ் தில்லைநடராஜா
அண்மையில் எம்மை விட்டுப்பிரிந்த கல்விப்பெருந்தகை திரு.தில்லையம் பலம் என்ற பெயரைக் கேட்டால்  என்மனத்தில் உடனடியாகத் தோன்றுவது எப்போதும் புன்சிரிப்பு தவழும் அவரது முகம் – எதிலும் எளிமையான சுபாவம் –இதமானதும் மென்மையானதுமான  பேச்சு ....இவற்றின் சொந்தக் காரர் ..அதிபர் திலகம் –ஆசிரியமாமணி – அமரர். சி.தில்லையம்பலம் அவர் களே! . சிறுவயது முதல் நான் படித்த அதே  உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான் அவரும் உயர் வகுப்புகளில் படித்திருக்கிறார்., அப்போது நான் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை.,அவசியமானபோது கூட அவரைப்பற்றி அறியாதிருந்துள்ளேன் .
நேரடியாகவே விடயத்துக்கு வருகின்றேன்.,  1960 ம் ஆண்டு டிசெம்பர்  வரை படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்து வகுப்பில் முன்னணியில் திகழ் ந்த எனக்கு 1961 க்குப்பின் விஞ்ஞான பாடங்கள் மூளைக்குள் ஏற மறுத்தன. 1963 டிசம்பர் க.பொ.த. (சா /த ) பரீட்சை முடிவுகள் என்னை ஏமாற்றி விட்டது .அப்போது க.பொ.த. (சா /த ) பரீட்சை  டிசம்பர்- ஆகஸ்ட் என இரண்டு தடவைகள்  நடைபெறும்
பிரதி அதிபர் திரு.றோபேர்ட் நவரத்தினம் என்னை நன்கு புரிந்து கொள்ள- அவரின் அறிவுரையோடு க.பொ.த. (சா /த ) 1964 ஆகஸ்ட் மாத பரீட்சையில்  விஞ்ஞான பாடங்களுக்குப் பதிலாக, கலைப் பாடங்களில் எழுத என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன் .
கல்லூரி அதிபர் திரு.எஸ்.எஸ்.செல்வத்துரை பரீட்சையில் பாடங்களை மாற்றி  எழுத பெற்றோரின் அனுமதியும் தேவை என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் .
பெரும்பாலான பெற்றோர் போல எனது பெற்றோரும், என்னை ஒரு doctor ராக பார்க்க வேணும் என்று கனவு கண்டு கொண்டிருந்த காலத்தில் எனது  பெற்றோரிடம் எப்படி கலைப் பாடங்களை மாற்றி  எழுத அனுமதி பெறுவது? கல்யாணப்பரிசு படம் பார்த்ததால் அம்மாவுக்கு விட்டேன் ஒரு டூப் –“ காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் ,”அம்மா  maths படிக்க கஷ்டமாக இருக்கு இந்த சோதனைக்கு maths எடுக்காமல் arithmetics எடுக்கப் போறன்” என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போனதும் நான் எதிர் பார்த்த தற்கு மாறாக அம்மா முந்திக்கொண்டு ,” தில்லையம்பல மாஸ்ரட்டை படிச்ச பொடியள் எல்லாரும் பாஸாம்- நீயும் அவரட்டைப் போய் படி- .அவர் காசும் வாங்கிறதில்லையாம்...நல்லாக சொல்லிக் குடுக்கிறாராம்”
வீட்டில் இருக்க முடியாத நிலையில் உடுப்பிட்டி சந்திக்கு வந்து கொஞ்ச நேரம் நின்றுகொண்டு யோசித்தேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தில்லையம்பலம் மாஸ்டர் வல்வெட்டிப் பக்கமாக இருந்து ஸ்கூட்டரில் வரும் ஆசிரியர் தான். அவரது வீடு இருக்கும் இடமும்  சரியாகத் தெரியாது உடுப்பிட்டி சந்தியிலிருந்து வன்னிச்சி கோவிலடி வரையும் பொடி நடையில் போய் வந்து, இரவு எட்டு மணியளவில்  அம்மாவுக்கு விட்டேன்-இரண்டாவது  டூப் –“ அம்மா தில்லையம்பல மாஸ்டர் வீட்டிலை கதிரை மேசை காணாதாம் .எனக்கு முதல் அங்கை போன பொடியங்களுக்கே இருக்க இடமில்லையாம் “
அம்மா ஒரு மாற்று யோசனையை சொன்னார்:- “இஞ்சை வீட்டிலை இருக் கிறதிலை ஒரு சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வை .சோதினை முடிய திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம் .”
நான் முணுமுணுத்துக்கொண்டே சிணுங்கினேன்-:”என்னை மேசையையும் கதிரையையும் காவிக்கொண்டு உடுப்பிட்டி சந்தியாலை போக சொல்றீங் களோ ?”
எனக்கு வந்த கோபத்தில் ஒரு ஆயுதத்தை பாவித்தேன்., ஒன்றும்  சாப்பிடா மல் படுத்து விட்டேன்.
அம்மா தனக்குத்தானே சொன்னது எனக்கும் நன்றாக் கேட்டது: –“நாளைக்கு காலமை நான் தான் சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வைக்க வேணும்”
ஒரு பத்து நிமிடத்தால் வீட்டுக்கு முன்னால் இருந்த படலை திறந்து சாத்தும் சத்தம் கேட்டு கண் விழித்துப்பார்த்தேன். நல்ல வேளை நான் பயந்தது போல் அம்மா  மேசையையும் கதிரையையும் காவவில்லை., எங்கேயோ பக்கத்து வீட்டுக்கு போவது போல தெரிந்தது.
சுமார் அரை மணி நேரத்திலை திரும்பி வந்த அம்மா எனக்கு அதிர்ச்சி அளிக் கும் செய்திகளை சொன்னார்.
“ நீ தில்லையம்பல மாஸ்டர் வீட்டை போக இல்லையாம் . நீ வல்வெட்டிப் பக்கமாக எல்லே போனனி ! ? .அது வேறை தில்லையம்பல மாஸ்டர் !. இவர் நவிண்டிலிலை இருக்கிற தில்லையம்பல மாஸ்டர்.!அங்கை வாங்கு மேசை யெல்லாம் இருக்காம் . உடுப்பிட்டியிலை இருந்து கனபேர் போறவங்களாம் . மகேந்திரனும் இண்டைக்கும் போய் வந்தவனாம் .நீயும் நாளுக்கு துடக்கம் போ “
இவ்வளவு தகவலுக்கும் பிறகு நான் வாய் திறக்க முடியுமா ?- தகவலை சொன்னவர் எனது பெரியம்மாவின் மகன்.
எனது தாயார் மட்டுமல்ல- பெண்கள் நாலைந்துபேர் சேர்ந்தால் ஊர் உலக செய்திகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்து விடும்.
அடுத்த நாள் மாலை பெரியம்மாவின் மகனுடன் சேர்ந்து நானும் நவிண்டில் சென்று ஆசிரியர் தில்லையம்பலம் கணித பாடம் படிப்பிக்கும் இடத்துக்கு அண்மையிலுள்ள பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இரண்டு மணி நேரம் ஆறுதலாக இருந்தேன். அரை றாத்தல் ரோஸ்ட் பாண் 15 சதம்., மெல் லிய சூட்டோடை சாப்பிட நல்ல ருசி., சம்பலும் வேண்டாம்- கறியும் வேண்டாம்.
ஒரு கிழமையாக  ரோஸ்ட் பாண் சாபிட்டேனே தவிர- தில்லையம்பல மாஸ் டர் பற்றி, அவரது கற்பிக்கும் ஆற்றல், பற்றி அறிந்து கொள்ள அப்போது முயற்சிக்கவில்லை.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பே எங்கள் பெற்றோர், தில்லையம்பல மாஸ் டர் காசு வாங்காமல் - காலமெல்லாம் பயன் தரும் கணித பாடத்தில் எப்படி அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைவது என்று மாணவர்கள் தடுமாறியபோது –தம்மை முழுமையாக அர்ப்பணித்து தன்னை நம்பியுள்ள மாணவர்கள் சித்தி யடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
திரு.தில்லையம்பலத்திடம் மாணவனாக நான் படிக்கக் கொடுத்து வைக்க வில்லை. ஒரு கிழமை கூட ரோஸ்ட் பாண் சரியாக சாப்பிடயில்லை. தில்லையம்பல மாஸ்டரின் பெயரை சொல்லி, பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இருந்து ரோஸ்ட் பாண் சாப்பிடுற  கதை அம்மாவுக்கு போடுத்து.
தில்லையம்பல மாஸ்டரின் பெயரைப் பழுதாக்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் சிறையில் இருத்தி விட்டா,அம்மா .
70 களுக்கு முந்திய காலத்தில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித் தல் கடமையாகக் கருதப்பட்டது .பிரத்தியேக கல்வி நிலையங்கள் பெருமள வில் இல்லாத காலம் –காலையிலும் மாலையிலும் தனிப்பட்ட டியூஷன் வகுப்புகள் இல்லாத காலம்.
இவரது சகபாடியும் இணைபிரியாத நண்பருமாகிய  ஒருவர் ஒருமுறை திரு. தில்லையம்பலதைப் பற்றி சொல்லும்போது- பாடசாலை நாட்களிலேயே கணிதப்பாடத்தை சக மாணவர்களுக்கு ஆசிரியர்களைப்போல படிப்பிக்கும் ஆற்றல் உள்ளவராக இருந்ததாகவும் –அதனால் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் திரு தில்லையம்பலம் மாணவர்களுக்கு ஆசிரியராகக் கடமை யாற்றியதாகவும் தெரிவித்தார்.
ஒருவர் செய்வதைப்போல இன்னொருவர் செய்து காடுவதை  மிமிகிரி என்று சொல்வார்கள். திரு தில்லையம்பலம் பல்கலைகழகத்தில் இருக்கும்போது ஒரு விரிவுரையாளர் வராததால் அவரைப் போல மிமிகிரி செய்யும்போது குறிப்பிட்ட விரிவுரையாளர் வந்து இவர் மீது நடவடிக்கை எடுத்ததால் இவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் அறிய முடிந்தது.
அதன் பின்னர் நுவரெலியாவில் ஆசிரியராக கடமையாற்றி, ஆசிரிய கலாசாலைக்கு சென்று பயிற்சி பெற்றதையும் அறிய முடிந்தது. ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் கற்பிக்கும் ஆற்றலும் மாணவர்களை தம் வழிப் படுத்தி ஒழுக்கமுள்ளவர்களாக்கும் திறமையும் இருப்பினும் இவை திரு தில்லையம்பலத்திடம் சாரசரிக்கு மேற்பட்டதாக இருந்தது.
தன் குடும்ப மேம்பாட்டுக்கன்றி மாணவர் மேம்பாட்டுக்காக –உயர்வுக்காக உழைத்து மாணவரின் மேலான மதிப்பையும் பெற்றோரின் பெரும் அன்பை யும் பெற்றுக்கொண்டார். யார் அவரிடம் சென்று கேட்டாலும் எதுவித வேறு பாடும் காட்டாது பாடம் சொல்லிக் கொடுத்து, பல மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்டக் காரணமான கற்பித்தல் சிகரம் தில்லையம்பலம் என்று சொன் னால் யாரும் இரண்டாவது கருத்து சொல்லமாட்டார்கள்.
கணிதம் கற்க வந்த மாணவர்களை தன் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி மனம் வைத்து கற்பித்தார் .”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் “ என்று பெரியவர்கள் சொல்வது உண்மை என்பது போல அமரர் தில்லையம்பலத்தின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு உயர்ந்துள் ளார்கள்.
பிற்காலத்தில் 90 களில் பிரச்சினைக்குரிய காலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.. ஒருபுறம் போராளிகள் ...இயக்கங்கள் ...மறுபுறம் பாதுகாப்புப்படையினர். இவர்களுக்கிடையில் சம நிலை பேணுதல் என்பது கூரிய கத்தியின் மேல் நடப்பதற்கு ஒப்பானது. சோதனை மிக்க அக்காலத்தில் அதிபர் திரு.தில்லையம்பலத்தின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
ஒய்வு பெற்றாலும் ஓயாமல் கல்விப்பணி சமூகப்பணி எனதன்னை ஈடுபடுத் திக் கொண்டு பொதுப் பணிகளில் பல சாதனைகளை நிலைநாட்டினார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல ஒரு சம்பவம்:-சில வருடங் களுக்கு முன் கொழும்பில் எனது வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் .திறந்து பார்த்தால்.... திரு தில்லையம்பலமும் அவரது மகனும். அப்போது அவர் அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்., பழைய மாணவர் சங்க தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.,சிறிது நேரம் என்னுடன் கதைத்து விட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாணிக்கவாசகரின் தொலை பேசி இலக்கத்தை என்னிடம்தான் பெற்று ஏதோ கதைக்கின்றார்., நிதியுதவி என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தவிதமானதொரு சிரமமும் எனக்கு இருக்கவில்லை., தொலைபேசி உரையாடல் முடிந்ததும் “Thank You Sir “ என்று எனக்கு நன்றி சொன்னார்.,நான் எனது குரலை உயர்த்தினேன் –சற்று தடுமாற்றத்தோடு –“Sir “
அவரது பதில் –“ஓம்  தம்பி ...நீங்க டெலிபோன் நம்பர் தந்ததால் மாணிக்க வாசகருடன் கதைத்தேன் ..Professor துரைராசாவின் பெயரால் ஒரு மாணவனுக்கு புலமைப் பரிசில் கொடுக்க ஒரு லட்சம் ரூபா அனுப்புறாராம்-.ஆசிரியப் பெருந்தகை கேட்டால் ஆயிரமல்ல லட்சக்கணக்கில் உதவி வழங்கத் தக்க நிலையில் வசதியும் விருப்பமும் கொண்ட அவரது மாணவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
 இவர் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்த போது 13-04-2014 உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாட்டுக் கிளைகளின் பழைய மாணவர்கள் உட்பட இங்கேயுள்ள பழைய மாணவர் களும் கலந்து கொண்டதுடன், கல்லூரியின் பௌதிக தேவைகளின் ஒரு பகுதியாக கூட்ட மண்டபத்திற்கு உரிய நாற்காலிகள் திரைசீலைகள்- உள்ளக ஒலிபரப்பி- துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம்-புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்-விளையாட்டு மைதானம் என்பன வழங்கப்பட்டன.
கல்விப் பெருந்தகை அமரர்.திரு.தில்லையம்பலம் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், கல்லூரித்தேவைகள் யாவும் நிறைவேறியிருக்கும்.
அவரின் ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் நன்றாக வாழவும், அவரது மாணவர்கள் மேலும்மேலும் உயர்வடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


No comments: