Monday, December 24, 2007

ஆத்திரம் கொள்ளாப் பாத்திரம்

அப்பா எவ்வளவு சீரியஸாக் கதைப்பாரோ, அதே போல நோகாமல் பகிடிக் கதைகளும் சொல்லுவார். சீனிப்பாணி காய்ச்சி மாவுடன் வண்ணப் பொடி வாசனைத் திரவியங்கள் சேர்த்து நெய்யையும் விட்டுக் கிளற உருவாகும். மைசூர்ப்பாகு நாவில் நீரை ஊற வைக்கும். வாசனையால் கவரப்பட்டு தங்க ஆபரணங்கள் வடிவமைக்கும் ஒருவர் நாவூற குசினிக்குள் நுழைந்தார்.

அப்பா இரும்புத் தாச்சியில் இளகிக் கொண்டிருந்த மைசூர்ப்பாகுக் குழம்பை 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட தட்டில் ஊற்றினார். வெகு நிதானமாக ஊற்றிய போதும் சிறிதளவு குழம்பு கட்டுப்பாட்டை மீறி தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் வடிந்து திரண்டது. அவரின் கைகளுக்குள் புகுந்த அளவு கோலும் கத்தியும் 2 அங்குல நீளம் 1 அங்குலம் அகலம் என கோடுகளைக் கீற மைசூர்ப்பாகுக் கட்டிகள் உருவாகின. தட்டின் நான்கு பக்கமும் மேலதிகமாக இருந்த குழம்பை கத்தியால் சீவ அதுவும் தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் விழுந்தது. அதுவரை பொறுமையாக இருந்த நகை வடிவமைப்பவர் மைசூர்ப் பாகு தட்டத்தினருகே குனிய பேப்பரில் விழுந்திருந்த மைசூர்ப் பாகுத்துகள்களை எடுக்க முனைந்த அவர் கைகளை அப்பாவின் கைகள் தடுத்தன.

“இது சரியில்லை. நீங்கள் நகை செய்யிற போது கீழே சிந்திற தங்கத்தை இன்னொரு ஆள் எடுக்க விடுவீங்களா? இந்த சாப்பாட்டுச் சாமான்கள் என்னுடைய முதலாளிக்குத் தங்கம் மாதிரி. அவர் சொன்னா நான் தாறன்”

சிரித்துக்கொண்டே சொன்ன நியாயத்தை உணர்ந்தவரும் அசட்டுத்தனமாகச் சிரித்தார்.

“நான் சுடச்சுடச் சாப்பிட்டுப் பார்க்க நினைச்சன்”

அடுத்த தடவை அப்பா சிரித்தார் “நல்லது. நாலு மைசூர்பாகு காசு கொடுத்து வாங்கிட்டுப் போங்க. சொல்லி வேலையில்லை. அந்த மாதிரி மணியாயிருக்கும்”

இது போன்ற சமயங்களில் பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் சிரித்துச் சமாளிக்கும் அப்பாவின் சாமர்த்தியத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன். அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டவற்றில் இதுவும் ஒன்று. ‘கோபம் கொள்ள வேண்டிய வேளையில் சிரித்து சமாளிக்கும் சாமர்த்தியம்’ சிநேகத்தை வளர்க்கும்.



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: