Tuesday, December 25, 2007

பொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியது....

1999 ஆண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை கொள்வனவு செய்வதற்காக சீனா சென்றிருந்தேன். கல்வியமைச்சர் றிச்சர்ட் பத்திரானவுடன் சென்றதால் எல்லா இடத்திலும் V.I.P வரவேற்று கிடைத்தது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் புறப்பட அரைமணி நேரத்துக்கு முன் வந்தால் போதுமென்று சொன்னார்கள். சங்கத்திணைக்கள , குடிவரவு குடியகல்வு, விமானப் பகுதி ஊழியர்கள் விஷேச விருந்தினர் அறையில் நாங்கள் இருந்த கதிரைக்கு அருகில் வந்து தங்கள் பணிகளை நிறைவேற்றினார்கள். சிறிய கைப்பையைக் கூட தாங்களே தூக்கிச் சென்றார்கள். சிங்கப்பூர் , ஹொங்ஹொங் போன்ற தங்கிச் செல்லும் விமான நிலையங்களிலும் தகுந்த உபசரிப்பு.

இருவாரங்களுக்குப் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காலை மூன்று மணிக்கு விமானம் தரையிறங்க விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கொழும்பு புறப்பட முன் பொதிகளை எண்ணினால் ஒரு பொதியைக் காணவில்லை.

பழைய சம்பவம் மனதில் படமாக ஓடியது. – 1950களில் டீசல் எரிபொருளில் வேகமாக ஓடும் யாழ். தேவி உத்தரதேவி புகையிரதங்கள் வருவதற்கு முன்பு நிலக்கரிப் புகையிரதம் ஊர்ந்த காலம். காலையில் சூட்கேஸ் பெட்டியுடன் புறப்பட்ட சித்தப்பா இரவு யாழ்ப்பாணம் வந்திறங்கிய போது சூட்கேஸ் காணாமல் போன கதை தெரிந்தது. பிரயாணக் களைப்பால் சோர்வுற்றிருந்த சித்தப்பாவிடம் கதைகள் அதிகம் கேட்காமல் சூட்கேஸ் பெட்டியின் அகலம் நீளம் உயரம் நிறம் மற்றும் முக்கியமான அடையாளங்கள் பற்றிய விபரங்களை மட்டும் அப்பா கேட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு விரைந்தார். புகையிரத நிலைய அதிபரின் உதவியுடன் காங்கேசன்துறை புகையிரத நிலைய அதிபருக்கு தகவல் கொடுப்பட்டது. கடைசிப் புகையிரத நிலையமான காங்கேசன் துறையில் எல்லோரும் இறங்கிய பின்னரும் தேடுவாரின்றிக் கிடந்த சூட்கேஸ் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. யாழ் புகையிரத நிலைய அதிபர் மூலம் கிடைத்த விபரங்களுடன் கிடைத்த சூட்கேஸின் விபரங்களும் ஒத்துப் போனதால் சித்தப்பா நிரந்தரமாக இழக்கவிருந்த சூட்கேஸ் திரும்பக் கிடைத்தது.

நானும் மற்றவர்களிடம் விசாரிப்பதை விடுத்து அங்கும் இங்கும் அலையாமல் பிரயாணப் பைகள் கடைசியாக வந்து சேருமிடம் - தேடுவாரற்ற நிலையில் காணப்படும் பொருட்கள் சேகரித்து வைக்குமிடம் ஆகியவற்றில எனது பொருள் இல்லையென்பதை உறுதி செய்ததும் வந்து சேரும் பொருட்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் நான் பிரயாணத்தை ஆரம்பித்த இடம் தரித்த வந்த விமான நிலைய விபரங்கள் - விமான இலக்கங்கள் டிக்கட் இலக்கம் காணாமல் போன பொதியின் நீளம் அகலம் நிறம் இதர அடையாளங்கள் - பொதிக்குரிய அடையாள டிக்கட் இலக்கம் பொதி தவறிப்போன பெட்டியினதும் அதனுள்ளே இருந்த பொருட்களினதும் விபரங்கள் அத்தனையும் எழுத்தில் கொடுத்து விட்டு எனது இருப்பிடம் வந்து சேர்ந்துவிட்டேன்.

மறுநாள் அதிகாலை ஹொங்ஹொங் விமான நிலையத்திலிருந்து தொலைபேசித் தகவல் ‘விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பொதி கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது’ – பயணப் பெட்டியில் எனது பெயர் முகவரியுடன் தொலைபேசி இலக்கமும் எழுதி ஒட்டப்பட்ட துண்டினால் கிடைத்த பலன். சில மணி நேரம் கழித்து அடுத்த தொலைபேசியழைப்ப ‘உங்கள் பெட்டி கட்டுநாயக்கவுக்கு வந்து விட்டது. உரிய அத்தாட்சிகளைச் சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம்’

முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சில சம்பவங்கள் இடம் பெறலாம். விரைந்து சரியாகச் செயற்பட்டால் இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: