Wednesday, December 26, 2007

கலப்பட காரணங்கள்

அந்த சுற்றடலில் இருந்த சாப்பாட்டுக் கடைகளை விட சில பொருட்களின் விலை சற்று அதிகம். நன்கு பழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் என் காது கேட்கக் கூடியதாகச் சொன்னார்.

“விலையெல்லாம் கூடச்சொல்லி இப்படி வயித்திலை அடிக்கிறீங்களே” அப்பாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. “விலை உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கட்டுப்படியாகணும், கலப்படமில்லாமல் சாப்பாடு செய்யிறதால் விலை கொஞ்சம் கூட, வயித்தில அடிச்சாலும் இந்தச் சாப்பாட்டால வருத்தம் வராது”

கலப்படம் இருக்கக் கூடாது என்பது கடையை ஆரம்பித்த தில்லைவனம் பிள்ளை முதலாளியின் கண்டிப்பான உத்தரவு. சாப்பிட வருவோர் அடுக்களை வரை வந்து சாப்பாடு தயாராகும் விதத்தைப் பார்க்கலாம். அரிசிமா, மிளகாய்த் தூள், கோப்பிதூள் போன்றவற்றை ஆட்களைக் கொண்டுவந்து ஹோட்டலில் தயாரிப்பார்கள். பால் பெற்று கொள்வதற்காக மாட்டுப் பண்ணையொன்றும் நடாத்தப்பட்டது. தேவை அதிகரித்ததால் வெளியே பால் வாங்கினாலும் மாட்டுப்பண்ணை தொடர்ந்தும் பேணப்பட்டது.

“நாளைக்கு ஆட்கள் வராவிட்டாலும பரவாயில்லை. சாப்பாட்டைக் குறை சொல்லக்கூடாது. நேர்மையாகச் சம்பாதிக்கிற காசுதான் தங்கும் ஏமாத்திச் சம்பாதிக்கிற காசு எங்களை ஏமாத்திப் போடும்” என அடிக்கடி சொல்லி கோதுமை மாவுடன் தவிட்டைக் கலந்து தயாரித்த இடியப்பத்தை அரிசிமா இடியப்பம் என்று விற்று பணம் சம்பாதித்த ஒருவர் இளவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகி தவிட்டுப் பாண் சாப்பிடும் உதாரணத்தையும் சுட்டிக் காட்டுவார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: