Wednesday, December 26, 2007

ஒரு பக்க "நாணயம்"

சிக்கனமாக வாழப் பழகிக் கொண்ட அம்மா மிச்சம் பிடிக்கும் சிறு பணத்தையும் சீட்டில் முதலீடு செய்து ‘பெருக்கும் முயற்சிகளில்’ ஈடுபட்டார். எனக்குத் தெரிந்தளவில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வகையான சீட்டுகள் நடைமுறையிலிருந்தன. மொத்தத் தொகையையும் காலத்தையும் கவனத்தில் கொண்டு ஊர் வட்டியைக் கணக்கிட்டு அதற்கேற்ப கழிவுத் தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஏலச்சீட்டு. அடுத்தது வட்டியோ கழிவோ எதுமில்லாமல் குறிப்பிட்ட நாளில சீட்டுக்குப் பணம் கொடுப்போர் சீட்டைப் பொறுப்பேற்று நடாத்தும் ‘தாச்சி’ எனக் கௌரவமாக அழைப்படுபவர் வீட்டில் ஒன்று கூடி பெயர்கள் எழுதி உருட்டப்பட்ட துண்டுகளைக் குலுக்கி அவற்றுள் ஒரு துண்டை எடுப்பதன் மூலம் சேர்ந்த தொகையைப் பெறுபவர் யார் எனத் தீர்மானித்தல். அம்மாவும் இரண்டு வேறு வேறு இடங்களில் குலுக்குச் சீட்டுக்காகப் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். இரகசியமான முறையில் பெயர்கள் எழுதப்பட்டு வாசிக்க முடியாத வகையில் துண்டுகள் உருட்டப்பட்டிருந்தாலும் சீட்டை நடத்துகின்ற தாச்சி யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று ஜாடைமாடையாகச் சொல்லிவிடுவார் என்பதை அம்மா அவதானித்திருக்கின்றார். இந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல அவரும் அம்மாவின் காதில் ஏதோ இரகசியம் சொன்னார். அதற்கடுத்த மாதம் குலுக்குச் சீட்டு நடைபெறும் வீட்டுக்கு அம்மா என்னையும் கூட்டிச் சென்றார்.

‘இநத் மாசம் சீத்தாவுக்கு சீட்டு விழும் சீத்தா எனக்குப் பத்து ரூபா தருவா’ என்று தாச்சி சொன்ன மாதிரியே சீட்டு சீத்தாவுக்கு கிடைத்தது. சீட்டு குலுக்கி முடிந்ததும் அம்மா கிளப்பிய ஆட்சேபனையால் தாச்சி வீட்டில் கூடிய எல்லோரும் உருட்டப்பட்டிருந்த துண்டுகளை ஆளுக்கொன்றாக எடுத்து எழுதப்பட்டிருந்த பெயரை வாசித்தனர். என்ன ஆச்சரியம்? எல்லாத் துண்டுகளிலும் சீத்தா என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. தாச்சியாக இருந்து சீட்டை நடத்தியவர் தனக்கு விருப்பமானவர்களுக்கு சீட்டுக் காசு வழங்க செய்து வந்த சூழ்ச்சி அம்மாவால் அம்பலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அப்பாவிடம் பின்பு கேட்டேன். ‘சர்வாதிகரியாகிய ஹிட்லர் யுத்த முனையில் சண்டையை ஆரம்பிக்க முன் போர் வீரர்கள் முன்னிலையில் நாணயத்தை எடுத்து பூவா தலையா போட்டு பார்த்து பூ விழுந்தால்தான் யுத்தத்தை ஆரம்பிப்பானாம். அந்த நாணயத்தை ஹிட்லர் தனது சட்டைப்பையிலிருந்து தான் எடுப்பானாம். காலம் கடந்து வெளியாகிய ரகசியம் தான் ஹிட்லர் இதற்கென தயாரித்து வைத்திருந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களிலும் பூதான் இருக்குமாம். தலையே இருக்காதாம்’


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: