Monday, December 31, 2007

மூலைக்கடைக்கார முதலாளி

கிராமத்தின் மத்தியில் மூன்று வீதிகளும் இணையும் சந்திகருகே பலவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் சில கடைகள் இருந்தன. சந்திக்குச் சிறிது தூரம் தள்ளி தார்வீதியுடன் ஓர் ஒழுங்கை இணையும் இடத்தில் இருந்த கடைக்குப் பெயர் மூலைக்கடை. ‘மூலைக்டை’ என விளம்பரப் பலகை இல்லாத போதும், தார்வீதி வழியாகப் போவோர் வருவோர் வீதியோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் அதேவேளை ஒழுங்கை வழியாக வருவோர் தார்வீதிக்கு வராமல் ஒழுங்கையோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியும் இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து பல கடைகளைத் தாண்டித்தான் மூலைக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் , மூலைக்கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்பது அப்பாவின் உத்தரவு. அதற்கான காரணத்தை அப்பாவே சொன்னார்.

சில ஆசிரியர்கள், பல பெரியவர்கள் சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதால் மாணவர்களையும் குழந்தைகளையும் கடைகளுக்கு அனுப்பி புகைத்தல் பொருட்களை வாங்குவது வழக்கம். மூலைக்கடை உரிமையாளர் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகரெட், சுருட்டு போன்றவற்றை விற்பனை செய்தார். அவரிடம் ஆசிரியர்களின் பெயர் சொல்லியோ, பெற்றோர்களைச் சொல்லியோ பணம் கொடுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு வாங்க முடியாது. இலாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்னால் சமூகம் நட்டப்படக் கூடாது என்ற மூலைக் கடைக்காரரின் இலட்சியம் அப்பாவுக்குப் பிடித்துக் கொண்டது.

அந்த மூலைக்கடைக்காரரும் அப்பாவும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டது தெரியுமு;. ஒரு தடவை மனித சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாகக் கருதி விற்பனை கூடிய வாரப் பத்திரிகை சிகரெட் விளம்பரங்களைத் தனது சஞ்சிகையில் இடம் பெறாது என பகிரங்கப்படுத்திய போது, மூலைக்கடை வியாபாரியும் இலாபம் தரக் கூடிய சிகரெட் விற்பனையை நிறுத்தி விட்டார்.

மாணவனாக இருந்த காலத்தில் சமுதாயச் சிந்தனையைப் பற்றி நான் பெரிதாக கருதாத போது ஓரளவுக்கு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்துள்ள இன்றைய நிலையில் அப்பாவின் சிந்தனையையும் மூலைக்கடைக்கார முதலாளியின் சிந்தனையையும் பல தடவை எண்ணியுள்ளேன். இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படாத முதலாளிகளும் இருக்கின்றனர்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: