Sunday, December 30, 2007

ஒட்டுமா

எங்கள் ஊரில் ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு பெயர். அப்பாவும் அம்மாவும் வாங்கிய காணியின் பெயர் “கோரைத்தரை”. யாழ்ப்பாணத்தில் பயிர்கள் செழித்து வளரும் பசளைத் தன்மை கொண்ட சிவப்பு நிறமண் கொண்ட நிலங்களும் உண்டு.

கோரைப் புல் நன்கு வளரும் மணற்பாங்கான நிலம் - கோரைத்தரை. நீரை உறிஞ்சுகின்ற தன்மை கொண்ட மண். வாய்கால் வழி நீர் பாய்ச்சி பயிர் வளர்ப்பது சிரமமென்பதால் சாப்பிட்ட பின் கை கழுவும் இடத்தில் - சட்டி பானை கழுவும் இடத்;தில் வாழைக்குட்டி வைக்க சிறுவனான என்னை ஊக்குவித்தார். வாழைக்குலையில் இடைப்பழம் பழுத்ததும் பக்குவமாக வெட்டி ஒரு சீப்பு பழத்தை சாப்பிடச் சொல்லி மற்றவற்றை விற்றுப் பணத்தை என்னிடம் தந்துவிட்டார். பழத்தையுமு; சாப்பிட்டு பணத்தையும் கண்டால் சும்மா இருப்பேனோ? இப்படியே தங்கையை சமையல் வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் அம்மாவுக்கு உதவியாக இருக்கப் பழக்கினார். அரிசி புடைக்கும் போது ஒதுக்கித் தள்ளும் குருணல் அரிசியை குப்பையில் வீசாமல் அதைப் போடுவதற்காக கோழி வளர்க்கச் சொல்லி முட்டை விற்கும் காசு தங்கைக்கு சொந்தமானது.

சிறு வாழைத்தோட்டம். பயிற்றம் செடி, பப்பாசி எனச் சற்றுப் பெரிதானது. ஒரு கோழி வளர்க்க ஆரம்பித்த தங்கை படிப்படியாக எண்ணிக்கையைக் கூட்டி ஆடும் வளர்க்க ஆரம்பித்தாள். வீடு முற்றம் ஆகியவற்றைத் துப்பரவாக வைத்திருப்பதும் தங்கையின் கடமை. குப்பை விற்கும் பணமும் அவளுக்குத்தான் சொந்தம். மாணவர்களான பிள்ளைகளிடம் பெற்றோர் கடனாகப் பணம் பெற்று சிறு வட்டியும் திருப்பிக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.

வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு அதிகரித்ததை அவதானித்த தந்தை “இந்த வருடம் நல்ல மாங்கன்று கொஞ்சம் வாங்கி வைக்க வேணும்” என்றார்.

தந்தையின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட தாயார் ஒருநாள் கிராமத்துச் சந்தையிலிருந்து பத்து சிறிய ஒட்டு மாங்கன்றுகளை வாங்கி வந்தார். மூங்கில் குழாய்களில் மண் நிரப்பி மாங்கொட்டையை விதைப்பார்கள். பின்னர் மாங்கொட்டையில் இருந்து செடி முளைத்துச் சிறு மரமானதும், நுனிப்பகுதியை வெட்டி ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற நல்ல இன மாமரத்தின் கிளைகளை வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். இப்படி ஒட்டி வைத்த மாமரத்தை யாழ்ப்பாணப் பகுதியில் ‘ஒட்டுமா’ என்றழைப்பர்.

விதையிலிருந்து முளைத்து வரும் மாமரம் வேறு வகையானதாக இருந்தாலும் , சுவை நிறைந்த கனி தரும் மரத்தின் கிளையை ஒட்டி , அந்த மரத்தின் பழங்கள் எல்லாவற்றையும் சுவையானதாக அமையும் படி தோட்டக்காரன் மாற்றி விடுவான். குறுகிய காலத்துக்குள் நல்ல இனிப்பாக கனி தரும் ‘ஒட்டுமா’ வைத் தேடி வாங்கி வைக்கும் வழக்கம் இருந்தாலும் சிலர் போலியான ஒட்டுமாவை உற்பத்தி செய்து ஏமாற்றும் வழக்கமும் இருந்தது.

அம்மா ஆவலுடன் வாங்கி வந்த ‘ஒட்டுமா’ போலியானது. சுவையான பழத்துக்குப் பதில் புளிப்பான மாம்பழங்களையே நான்கு வருடங்களுக்குப் பிறகு பெடி முடிந்தது. மாமலர விடயத்தில் வியாபாரி ஒருவனால் ஏமாற்றப்பட்ட கவலை அம்மாவுக்கிருந்தது.

அப்பா அம்மாவுக்கு ஆறுதலளித்தார். “பரவாயில்லை. இது ஒரு பாடம். திருநெல்வேலி விவசாயப் பண்ணையிலோ அல்லது நன்றாக தெரிந்தவர்களிடமோ ‘ஒட்டுமா’ வாங்கி வைத்திருந்தால் ஏமாற வேண்டியிருக்காது. பொருட்களை வாங்குவதற்கு முதல் விற்பவர் பற்றியும், பொருட்களின் தன்மை , விற்பவரின் குணநலன் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்”

பின்பு சற்று விபரமாகச் சொன்னார். “நிரந்தர முகவரியைக் கொண்ட நிறுவனங்கள் , நன்மதிப்பைத் தேடி வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். மலிவான பொருட்கள் எல்லாம் தரமான பொருட்கள் எனச் சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பை தோட்டச் செய்கைக்கு பயன்படுத்தினாலும் சிறந்த முறைகளைக் கையாள்வதனாலேயே பயன்பெறுகின்றார்கள். உதாரணமாக மாமரம், பலாமரம் போன்றவற்றை வைப்பதற்கு முன் பயன் தரக் கூடிய மரமா என்பதை அவற்றின் தாய் மரம் அல்லது விதை பெற பயன்படுத்தப்பட்ட மரம் என்பதிலிருந்து அறிந்து கொள்வார்கள். என்பதையும் ஒட்டு மரமானால் , ஒட்ட வைப்பதற்காக கிளை எடுக்கப்பட்ட மரத்தைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அக்கறை காட்டுவார்கள். மரத்தை நாட்டும் போது இடத்தை தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருப்பார்கள். மரம் வளரும் காலத்தில் விலங்குகளால் பாதிக்கப்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிடுங்கப்படாத இடத்தில் மரம் வைக்கப்பட்டு வளர்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். செடி வளர்ந்த பின் தவறான மரம் என்றோ அல்லது வைத்த இடம் தவறான இடம் என்றோ கருதக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்பதில் யாழ்ப்பாணத் தோட்டக்காரர் கரிசனையானவர்கள்” என்றார்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: