Sunday, December 23, 2007

நிறைந்த 'பிச்சை'

அந்த நாட்களில் வெள்ளிக்கிழமையென்றால் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த பிச்சைக்காரர்களுக்கு சிறிது மகிழ்ச்சி. காலையிலிருந்து மாலை வரை கடை கடையாக ஏறி இறங்க கையில் கொஞ்சம் காசும் சேரும். பெரிய மனது படைத்த மிகமிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் தருமத்துக்கு ஓர் அளவுகோல் வைத்திருந்தார்கள். ஒரு சதம் தரும் செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொள்வார்கள். அளவுகோல் விஷயத்தில் சில தருமவான்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அதிகாலையில் ஒருவருக்கு ஒரு சதம் கொடுக்கும் போதே மனக் கணனியில் உரிய பதிவுகளைச் சேமித்து வைத்து விடுவார்கள். தப்பித் தவறி காலையில் ‘ஐயா பிச்சை’ என ஒலித்த குரல் மீண்டும் ஒலித்தால் - தோன்றிய உருவம் மீண்டும் தோன்றினால் தருமவான்கள் ஏசும் போது அகராதியில் இல்லாத சொற்களும் சேர்ந்திருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களைக் கடையில் கழிக்க வேண்டிய சந்தார்ப்பம் ஏற்பட்டு விட்டால் முதலாளி என் கையில் சில்லறைக் காசுகளைத் தந்து பிச்சைக்காரருக்கு தருமம் செய்யும் புண்ணியவானாக என்னை மாற்றி விடுவார். முதலாளி தரும் சில்லறைகளைத் தருமம் செய்யும் போது கவனமாக இருக்க வேணும். இரண்டு ஐந்து சத நாணயங்களை அப்படியே பிச்சைகாரருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் ஒருசதம்தான் தருமம் பெறத் தகைமையிருந்தும் சிலவேளை இரண்டு சதம் ஐந்து சத நாணயங்களுடன் கம்பி நீட்டி விடக்கூடும். அவர்களைப் பின் தொடர்வதும் ஒரு சதம் கழிந்த மிகுதிப் பணம் பெறுவதும் சாத்தியப்படாத காரியங்கள். எனவே ஐந்து சத நாணயம் வைத்திருக்கும் போது பிச்சைக்காரர் இரண்டொருவர் வந்ததும் கொடுக்காமல் சரியாக ஐந்து பேர் வந்த பின் அவர்களுள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஐந்து சதத்தைக் கொடுத்தால் அவர்கள் பிரித்துக் கொள்வார்கள். சிலநேரம் அடிபடுவார்கள். பிரித்துக் கொடுப்பதாலோ கொடுக்காமல் விடுவதாலோ அடிபடுவதாலோ தருமவான்கள் பாதிக்கபட மாட்டார்கள். யாராவது பிச்சைக்காரர் ஒரு சத நாணயக் குற்றிகள் அதிகமாக வைத்திருந்தால் அவற்றை வாங்கிக் கொண்டு பெரிய நாணயக் குற்றிகளைக் கொடுக்க வேண்டும். நாணய மாற்றம் செய்யும் போத செல்லாத நாணயங்களும் அழுக்கேறிய நாணயங்களும் எங்கள் கைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பலவிதமான பிச்சைக்காரரைப் பார்த்த பின்பு அப்பா எனனை அவதானிக்கும்படி சுட்டிக் காட்டியவனின் பெயர் ‘பிச்சை’ – ஏறக்குறைய தோற்றம் வயது எல்லாம் நடுத்தரமிருக்கும். சுத்தமான வேட்டியென்று சொல்ல முடியாவிட்டாலும் அழுக்கான வேட்டியொன்றும் சொல்ல முடியாது. முழுங்காலுக்குக் கீழே நீளும் வேட்டி பாதத்திலிருந்து முக்கால் அடிக்கு மேல் உயர்ந்த முக்கால் கட்டு வேட்டியாக இருந்தது. ஒரு சிறிய துவாய் கழுத்தில் - துவாயில் தலைப் பிரண்டும் வழமைக்கு மாறாக கழுத்திலிருந்து முதுகை நோக்கியபடியிருந்தது.

அப்பாவின் அவதானிப்பு சற்று வித்தியாசமானதாக இருந்தது. எந்தக்; கடையாக இருந்தாலும் பி;ச்சை போதியளவு இடைவெளி விட்டு “ஐயா” என மூன்று தரம் குரல் கொடுப்பான். சில பிச்சைக்காரரைப் போல ‘புண்ணியம் கிடைக்கும் - தருமம் - பிச்சை போடுங்கோ’ மூண்டு நாளாகச் சாப்பிடவில்லை’ என எதுவுமே சொல்லமாட்டான். மூன்று தரம் அழைத்தும் யாரும் வரவிலலையானால் மீண்டும் ஒரு தரம் அழைப்பதில் நேரத்தை சக்தியைச் செலவிடாது அடுதத் கடைக்கு நகர்ந்து விடுவான். யாராவது ஒரு ரூபா கொடுத்தால் 99 சதம் மீகுதி கொடுத்து விடுவான். ஒரு சதத்துக்கு மேல் ஒருவரிடம் பிச்னையெடுக்க கூடாதென்பதில் கண்டிப்பாக இருப்பான். இந்தப் பிச்சையை நன்றாகப் புரிந்து கொண்ட புடவைக்கடை முதலாளியொருவர் தினமும் இரவுச் சாப்பாட்டுக்காக ஐந்து இடியப்பங்களை வழங்கும் படி அப்பாவின் முதலாளியிடம் ஒழுங்கு செய்தார். அப்பாவின் முதலாளியின் மனமும் நல்லதென்பதால் இரவுச் சாப்பாடாக தினமும் பத்து இடியப்பம் பிச்சையின் வயிற்றை நிறைத்தது. அப்பா சுட்டிக்காட்டி உணர்த்திய பின்தான் ஒரு பிச்சைக்காரனால் கூட மற்றவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் தன் தேவைகளை கௌரவமாகவும் ஒழுங்காகவும் பெறமுடியும் என்பதை அறியக் கூடியதாக இருந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: