Wednesday, December 26, 2007

காதுக் குடைகையிலே..

சின்ன வயதில் இன்னுமொரு கெட்ட வழக்கம். நல்ல விடயங்களை விரும்பிக் கேட்கும் எனது காது தீப்பெட்டிக்குச்சு , கிளிப், ஊசி போன்றவற்றையெல்லாம் கேட்கும் - காது குடைவதற்காக, சில சமயம் கை ஏதாவது பொருளைத் தேடியெடுத்து காதினுள்ளே விட்டு பெரிய அட்டகாசம் செய்யும். அப்பா பார்த்து விட்டால் அவ்வளவுதான்.

“கட்டிக்கு எத்தனை தரம்...” அவர் ஆரம்பித்ததும் அவர் பார்வையிலிருந்து மறைவதைத் தவிர வேறு வழியில்லை.

‘குளிக்கும் போது நீரூற்றி காதுகளைக் கழுவ வேண்டும். பின்பு சற்று தடிப்பான பழைய சீலைத்துண்டை திரிபோல உருட்டி காதில் விட்டு அழுக்கையகற்ற வேண்டும். கிளிப் ஊசி போன்றவை காதில் காயத்தை ஏற்படுத்தினால் புண் உண்டாகலாம். தீக்குச்சியின் மருந்துள்ள முனை காதில் போனால் மேலும் அழுக்குச் சேரும். பயன்படுத்தி எறிந்த தீக்குச்சை எடுக்கிற போது நிலத்திலிருந்த அழுக்கையும் சேர்த்தெடுத்து காதுக்குள் சேமிக்கின்றோம்.

இரு முனைகளிலும் பஞ்சு வைத்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சியை அப்பாவிடம் காட்டினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்போதும் சிரித்தார். ஒரு முனையில் ஒட்டப்பட்டிருந்த பஞ்சு கழன்றிருந்தது. ‘நல்ல வேளை காது குடையும் போது காதுக்குள் கழன்றால்...’ என நான் சிந்தித்த போது இன்னொரு சம்பவத்தைப் சொன்னார்.

அப்பாவின் மருமகன் ஒருவன் பாடசாலைக்குச் செல்லும் நாட்களில் பொழுது போக்காக தும்பு, சிறுகுச்சு போன்றவற்றை மூக்கினள் நுழைத்து தும்மலை வரவழைத்து மற்றவர்களைச் சிரிக்க வைப்பான். ஒரு நாள் அவனுக்கு கிடைத்த பொருள் கொப்பியில் எழுதுவதற்கும் எழுதியவற்றை அழிப்பதற்கும் சிறு இறப்பர் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பென்சில். இறப்பர் முனையை மூக்கினுள் விட்டு தும்மல் விளையாட்டு காட்டிய போது இறப்பர் கழன்று மூக்குத்துவாரத்தில் சிக்கி விட்டது.

தும்மி மற்றவர்களைச் சிரிக்க வைத்த மருமகனின் கண்கள் சிவந்து நீரை சிந்த மூச்சு விடுவதற்கும் வெகு சிரமப்பட்டான். பல முயற்சிகள் பயன் தராமல் போக ஆஸ்பததியில் டாக்டர் வளைந்த கம்பியொன்றை மூக்குக்குள் செலுத்தி இறப்பரை எடுத்த பின் மருமகனுக்குத் தும்மல் வருவதில்லை.

சில வேளை என்னை மறந்து ஊசியெடுத்து பல்லைக் குத்தினால், நகத்தைக் கிண்டினால் அப்பா என் முன்னால் நின்று ஏசுவது போல ஓர் உணர்வு. உஷாராகி உள்ளத்தால் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுத் ஊசியை எறிந்து விடுவேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: