Saturday, December 29, 2007

பெரிய இடத்து விஷயங்கள்

பள்ளி மாணவப்பருவத்தில் பாடசாலை விடுமுறை நாட்களிலும் வார இறுதியிலும் யாழ்ப்பாணம் செல்லும் போது அப்பா மாலை வேளைகளில் முற்றவெளிக்கோ இல்லது கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கோ என்னை அனுப்பி வைப்பார். பின்னர் இரவுச் சாப்பாட்டுக்குப்பின் கூட்டங்களில் யார் யார் என்ன பேசினார்கள் என்பதை அப்பாவுக்குச் சொல்ல வேண்டும். அதன் பின்பு இரண்டாவது நாள் பத்திரிகைச் செய்திகளைப் பார்வையிட்டு நான் சொன்னவற்றை ஒப்பிடுவார். இது சாரம் கெடாமல் சுருக்கி சொல்லக்கூடிய திறனையும் வளர்த்தது.

ஒரு சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு முற்ற வெளியில் பிரமுகர் ஒருவர் பேசியது ஞாயிற்றுக்கிழமை பத்திரிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தால் தந்தையாரிடம் அது பற்றிக் கேட்டேன்.


‘’ கொழும்பு பத்திரிகள் சனிக்கிழமை மாலையில் அச்சிடப்படடு இரவு தபால் புகையிரத முலம் யாழ்ப்பாணம் வருகின்றன. அப்படியானால் இரவு ஒன்பது மணிக்கு இடம் பெற்ற பேச்சு... என நான் பேசி முடிப்பதற்க்கு முன்பாக அவர் சொன்னார். ‘’இது பெரிய இடத்து விஷயம். எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சை முன் கூட்டியே பத்திரிகைக்கு கொடுத்திருப்பார்கள்....சில விஷயங்களைத் தெரிந்தாலும் தெரியாதது மாதிரி காட்டிககொள்வது நல்லது.’’

காலம் போக போகத்தான் ‘வாய் திறந்து மாட்டிக் கொண்டு முழிப்பதைக் காட்டிலும் வாயை மூடிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல முழிப்பது நல்லது.’ என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: