Monday, December 24, 2007

அவரவர் அளவுகள்.

அருகாமையிலுள்ள ஆலயத்துக்கு புதிய கோபுரம் கட்டும் போது தூண்கள் தெய்வச் சிலைகள் செதுக்க வந்த கலைஞர்கள் கடைக்குச் சாப்பிட வரும் போது அப்பாவுடனும் அளவளாவிச் செல்வது வழக்கம். கோவிலில் சிலைகள் செய்வதைப் பார்க்க விரும்பிய என்னை அப்பா அழைத்துச் சென்றார். வேறு வேறு உளிகளும் சுத்தியலும் கலைஞர்களின் கைகளில் சுழன்று வர உருவாகும் தெய்வச் சிலைகளின் அழகில் மெய் மறந்து நின்றோம்.

தலைமைக் கலைஞனின் ஏளனச் சிரிப்பு – “சிலை செய்யிறதொண்ணும் சுகமான வேலையில்லை. மண்ணையும் கல்லையும் கலந்து சாப்பாடு செய்யிற மாதிரியில்லை. உப்பையும் புளியையும் கூடக்குறையப் போடுற சமையல் மாதிரியில்லை”


அப்பா சர்வசாதாரணமாகச் சொன்னார். “சிலை செய்யிறதுக்கு முந்தி நீங்க ஆண் கல்லு, பெண் கல்லு, அலிக் கல்லு பார்க்கிற மாதிரி அரிசியையும் மாவையும் வாங்கிய போது, கவனமாக இருப்பம். நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யிற பnhதும் பிரமாணம் அளவு பார்க்கிற மாதிரி அளவு பார்த்துத்தான் உப்பு புளி போடுவம். நீங்க ஒண்ணு செய்யிற போது கொஞ்சம் பிழைச்சா அதை இன்னொண்ணா மாத்தியிடுவீங்க. சாப்பாட்டை அப்படி மாத்த முடியாது. தூக்கி தூர வீசிட வேண்டியதுதான். சாப்பாட்டை வீசியிட்டா முதலாளி எங்களைக் தூக்கி வீசியிடுவார்”

சற்றும் எதிர்பாராத பதிலால் தலைமைக் கலைஞர் திகைத்தார். “எப்படி உங்களாலை பட்பட்டென பதில் சொல்ல முடியுது”

அப்பாவின் முகத்தில் புன்சிரிப்பு மின்னல் “முட்டாள்த்தனமான கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதில் சொல்ல முயற்சிக்கிறன்”





(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: