Friday, December 28, 2007

கலைந்திடாத கோலம்

முற்றத்தை அலங்கரிக்கும் அழகான கோலங்களைப் போடுவது அம்மாவுக்கு கை வந்த கலை. தங்கை அம்மாவிடம் பயின்ற கலையை மேலும் மெருகுபடுத்தி தினமும் விதவிதமாகவும் வித்தியாசமான பொருட்களாலும் கோலம் போட்டு வீட்டைப் பொலிவாக்கி எங்களையும் மகிழ்வித்தாள். தங்கையின் முயற்சியையும் கலையார்வத்தையும் பாராட்டிய தந்தை இந்தியா சென்ற அவர் நண்பரிடம் சொல்லி கோலம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கிப் பரிசளித்தார்.

தங்கை சில நாட்களாக பல விதமான பொருட்களைச் சேகரித்து ஒரு நாள் மாலை வீட்டு விறாந்தையையும் முற்றத்தையும் வண்ணக் கோலங்களால் நிரப்பினாள். பெரும்பாலும் மாவையும் தேங்காய்பூவையும் பயன்படுத்தியே கோலம் போடப்படும். தங்கை போட்ட கோலங்கள் வித்தியாசமானது. – பல வடிவங்கள் நிறங்கள் உள்ள இலைகளைப் பயன்படுத்தி ‘இலைக் கோலம்’ அழகான அமைப்பும் கண் கவர் வண்ணமும் கொண்ட பூக்களைப் பயன்படுத்தி ‘மலர்க்கோலம்’ அரிசி உழுந்து, பயறு , பருப்பு, போன்றவற்றால் ‘தானியக் கோலம்’ மாலை கோர்க்கப் பயன்படும் மணி போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து ‘மணிக்கோலம்’ இப்படிப் பற்பல. இவற்றுடன் தேங்காய்ப்பூவுக்கு வர்ணம் சேர்த்து செய்யப்பட்ட கோலமும் இருந்தது.

காரணமில்லாமல் விழாக்கோலம் கொண்ட வீடு என்னை வியப்பில் ஆழ்த்த அம்மா வியப்பை விடுவித்தார் - “நாளைக்கு காலமை சிநேகிதப் பிள்ளையள் வருகினமாம். அவைக்குக் காட்டுறதுக்கா பிள்ளை கோலம் போட்டிருக்கு”

“எந்தக் கோலம் வடிவு?” என்று தங்கை கேட்டபோத – “வீட்டின் பிரதான முற்றத்தில் போட்டிருந்த கோலம் தான் வடிவு” என்றேன். அதிகம் செலவில்லாமல் சிரமமில்லாமல் அரிசிமாவினால் வரையப்பட்ட சாதாரணமான கோடுகளைக் கொண்ட கோலமானாலும் கலையழகையும் தனித்துவத்தையும் கொண்டிருந்த அக்கோலமே வடிவான கோலம் என்ற எனது கருத்தை அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் காலை தங்கையின் சிணுங்கல் சத்தத்தில் விழித்துக் கொண்டோம். வடிவான மாக்கோலத்தையும் தேங்காய்ப்பூக் கோலத்தையும் எறும்புகள் சுவைத்துப் பார்த்திருக்க வேண்டும். அலங்காரக் கோலம் சிதைந்தும் அழிந்தும் உருமாறி அலங்கோலமாயிருந்தது.

கோலம் போடுவதற்கான மாவைப் பக்குவப்படுத்தி கோலம் போடுவதற்குள் சிநேதிகள் வந்து விடுவார்கள் என்பதுதான் தங்கையின் கவலைக்குக் காரணம். அப்பா ஒரு சிறு ஓலைப் பெட்டியை எடுத்து அங்குமிங்கும் குனிந்து நிலத்திலிருந்து எதையோ எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போடுவதை அவதானித்தோம். அப்பா கல்லுரலை நிமிர்த்தி அலவாங்கைக் கொண்டு வரும்படி சொன்னார். அப்போதுதான் பெட்டியில் சேகரித்துக் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்தோம்.

சாதாரணமாக நிலத்தில் காணப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள் அப்பா கற்களை உரலில் போட்டு அலவாங்கால் இடித்தார். உரலில் இடித்தவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டே “கோலப் பொடி ரெடி” என்றார்.

“சாதாரணமாக ஒரு பிரயோசனமுமில்லாம இருக்கிற இந்த மாதிரிக் கல்லை பொறுக்கி மாவாக்கி தகர டப்பாவிலை போட்டு வைச்சா தேவையான போது கோலம் போடலாம். காசும் வேணாம். எறும்பும் தின்னாது” – அப்பா சொன்னது என் காதில் விழுந்து பதிவானது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: