Wednesday, December 26, 2007

பிணமானவர் குணமானவர்

முதலாம் வகுப்பில் படிக்கும் போதா அல்லது இரண்டாம் வகுப்பில் படிக்கும் போதா என்பது சரியாக நினைவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து போது கண்களில் ஈரமும் நெஞ்சில் பயமும் இருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. இமைகள் மூடாமல் இராப் பொழுதைக் கழித்ததும் ஒருவருக்கும் தெரியாது. பொழுது விடிந்ததும் ‘இன்று மட்டும் பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என அடம் பிடித்தேன். அப்பா சிறிது சிறிதாக வற்புறுத்த காரணத்தைக் கக்கினேன்.

‘பாடசாலையிலிருந்து வரும் வழியில் ஒரு செத்த வீடு – செத்த வீட்டுக் கதைகள் பேய்க் கதைகள் பயங்கரத்தைத் தந்ததால் பாடசாலை செல்ல பயமாயிருந்தது. அப்பா மிக ஆறுதலாக அரவணைத்து முதுகைத் தடவினார். ‘கட்டிக்கு பயமெண்டால் போக வேண்டாம்’ பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றதும் நானும் மகிழ்ந்தேன். சில நிமிட மௌனத்தை அப்பாதான் கலைத்தார் - ‘கட்டி கூட நானும் பள்ளிக்கு வாறன், பயமில்லையா? அப்பா என்னோடிருந்தால் நான் ஏன் பயப்படப்போறன். ‘பயமில்லை’ என்ற அர்த்தத்தில் என் தலை இடமும் வலமும் அசைந்தது. அப்பாவும் என்னோடு பள்ளிக்குப் புறப்பட்ட போது சொன்னார். ‘கட்டி எப்பவும் செத்த ஆட்களாலை பிரச்சனையில்லை. செத்த பிறகு அவங்களாலை ஒண்டும் செய்ய முடியாது. உயிரோடையிருக்கிற ஆட்களோடை தான் கவனமாய் இருக்க வேணும்’ பிணம் பேய் பிசாசு என்ற பயம் படிப்படியாகக் குறைந்தது. 1996 ல் முல்லைத்தீவில் இடம் பெற்ற ‘ஓயாத அலைகள்’ போராட்ட நடவடிக்கையின் பின் 531 பிரேதங்களை ஒரே நேரத்தில் பொறுப்பேற்று 476 பிரேதங்களை அடக்கம் செய்யுமளவுக்கு பயமில்லாதிருந்தேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: