Monday, December 31, 2007

கடனை முறிக்க ஒரு தந்திரம்

ஏப்ரல் மாத விடுமுறையில் அப்பாவுடன் நிற்கும் போது, அப்பாவுடன் நெருங்கிப் பழகும் ஒருவர் கைமாற்றாக ஐந்து ரூபா கேட்டார். அவரை வெளியில் நிற்க வைத்துவிட்டு, அப்பா தனது பெட்டியிலிருந்து பத்து ரூபா நோட்டைக் கொடுத்து, “மாத்தின காசில்ல. சாவகாசமா திருப்பித் தா” எனக் கொடுத்தார்.

பெட்டியில் ஐந்து ரூபா நோட்டு இருக்கத்தக்கதாக அப்பா பத்து ரூபா கொடுத்ததால் காரணத்தை அறிய முயன்றேன்.

“பத்து ரூபா நட்டம் தான்! ஆனா பழகியிட்டான். பத்து ரூபாவுக்கு மேல நட்டம் வராமல் பாதுகாக்க முடியும்” என்றார்.

இரண்டு நாள் கழித்து அவர் பத்து ரூபாவுடன் அப்பாவை சந்தித்தார்.

“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.

“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.

மீண்டும் இரண்டு நாள் கழித்து அப்பா சம்பளம் எடுத்த சில நிமிடங்களுக்குள் வந்தார், பத்து ரூபா கடன்காரர். இப்போது அவர் கடனாகக் கேட்ட தொகை ஐம்பது ரூபா.

அப்பா சிரித்தார். “கொஞ்சம் முன்னாடி வந்திருக்கப்படாது. ஊர்லேயிருந்து வந்தவரிடம் சம்பளத்தைக் கொடுத்திட்டேன். காசிருந்தா ஐம்பது இல்லே நூறுகூடத் தருவேனே”

இந்தச் சம்பவத்தைப் பற்றி அப்பா கூறும் போது “சில ஆட்களுடன் பழக வேணும். பகைக்கக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் செய்து பகைக்கக் கூடாது. அஞ்சு கேட்கிற போத பத்தைக் கொடுத்துக் கொடுத்து கொடுக்கல் வாங்கலுக்கும் பத்தோடே முற்றுப்புள்ளி போட்டால் பத்து ரூபா மட்டும் நட்டம்” என்றார்.

இந்தச் சம்பவம் தந்த படிப்பினையால் ஆயிரக் கணக்கில் ஏற்பட வேண்டிய எனது நட்டம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இன்னுமொரு சம்பவம் -

சுமாரான சம்பளம் வருமானம் என்று எனது நிலை உயர்ந்த பின் ஊரில் நிதிச்சேகரிப்பு பட்டியலுடன் தெரிந்தவர்கள் வந்திருந்த போது விறாந்தையில் அப்பாவும் இருந்தார்.

சம்பிரதாயபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்கும் எண்ணத்துடன் பணம் எடுப்பதற்கு அறைக்குள் நுழைந்த போது பின் தொடர்ந்த தந்தை கேட்டார்.

“கட்டி எவ்வளவு பணம் என்று கேட்டீர்களா?”

நான் இல்லையென்று தலையசைத்து “ஒரு 250 ரூபா கொடுக்கலாம்” என்றேன். தந்தை 100 ரூபா போதுமென்றார்.

அவர் விருப்பப்படியே வெளியே சென்ற நான் மீண்டும் நிதி சேகரிப்பு பட்டியலை வாங்கி “எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீங்கள்” என்றேன்.

என்ன ஆச்சரியம் “100 ரூபா எண்டாலும் நீங்கள் போடவேணும்” என்றவர்களிடம் 100 ரூபாவைக் கொடுத்து நிதிசேகரிக்கும் பட்டியலிலும் பதிவு செய்தேன்.

அப்பா தந்த விளக்கம் “பாத்திரமறிந்து பிச்சை இடு. அவர்கள் குறைய எதிர்பார்க்கிற போது கூடக் கொடுக்கக் கூடாது. அவங்கள் அதிகமாக கேட்டு உனது பொருளாதார நிலை இடம் கொடுக்காவிட்டால் அதிகம் கொடுத்து நீ நட்டப்படக் கூடாது. தனக்கு மிஞ்சியதுதான் தானம். ஆகவே தண்டலுக்கு வருவோரிடம் என்ன எதிர்பார்க்கிறீங்க என்று கேட்டு அளவாகக் கொடுக்க வேண்டும். கேட்கும் அளவு அதிகமானால் இருப்பு அறிந்து கொடுக்க வேண்டும்”

இதனால் அன்று 150 ரூபா மீதப்படுத்த முடிந்தது போல பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சிலவற்றை மீதப்படுத்த முடிந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)


No comments: