Wednesday, December 26, 2007

பந்திக்கு முந்துகையில்....

மட்டக்களப்பைச் சேர்ந்த உறவினர் இல்லத்துக்கு விருந்துண்ணச் சென்றிருந்தோம். வழமையான உணவைத் தொடர்ந்து ஒரு கேள்வி. ‘தயிர் கொஞ்சம் சாப்பிடுறீங்களா?” ஒரு அளவான மண்பனை நிரம்ப தயிர். பானையோடு கவிழ்த்தால் கூட விழாத வகையில் கட்டியாக இருந்தது கெட்டித்தயிர். மட்டக்களப்புத் தயிர் அப்படித்தான். அதன் சுவையே தனி. கட்டித்தயிரை வெட்டியெடுத்துப் போடுவதற்காக பெரிய கண்ணாடிக் கிளாசும் கரண்டியும் வைக்கப்பட்டிருந்தன. அப்பா சிறிதளவு தயிருடன் நிறுத்த நான் கிளாசின் விளிம்பு வரை நிறைத்தேன். இனி கிளாசில் இடமில்லை. அழைத்த விருந்தினர் அடுத்துக் கொண்டு வந்த தட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் சீனியும் சிறு கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. அப்பா சிறிதளவு சீனியை தயிரில் சேர்த்துக் கலக்கினார். இருக்கம் தயிரில் சிறிதளவென்றாலும் குடித்தால்தான் சீனி சேர்க்க இடம் உண்டாக்கும். அப்படி இடத்தை ஏற்படுத்தி சீனியை அள்ளப் போட்ட போது வோறொரு தட்டத்தில் வட்டம் வட்டமாக வெட்டிய வாழைப்பழ துண்டுகளும் கஜூக் கொட்டைகளும் வந்து சேர்ந்தன. இப்போது எனது கிளாசில் அரைவாசித் தயிரைக் குடித்த பின் சீனி கஜூ கொட்டை எல்லாம் சேர்த்துக் கலக்கினேன். இருந்தாலும் அப்பா குடித்த தயிர் சுவையாகத்தான் இருந்திருக்கும்.

அப்பா சொல்லுவார் ‘பந்திக்கு முந்தத்தான் வேணும். ஆனால் அவசரப்படக் கூடாது. அக்கம் பக்கத்திலிருப்பவரையும் சாப்பாட்டையும் பார்க்க வேணும்’



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: