Monday, December 31, 2007

வெளியேறும் விற்றமின்கள்

பாடசாலை நாட்களில் நெல்லிக்காய் தோடம்பழம் போன்றவற்றில் விற்றமின் ‘சி’ இருப்பதாகப் படித்ததும் இவற்றைத் தேடியலைந்தேன்.

எளிதாக எப்போதும் பெறக்கூடிய பொருள் தேசிக்காய் என்பதால் தேசிக்காயைப் பிழிந்து குடித்தால் விற்றமின் ‘சி’ கிடைக்கும் என ஆசிரியர் சொல்லியதை கேட்டு, பழுத்த எலுமிச்சம் பழங்கள் மூன்றை வாங்கி வந்து அவற்றைப் பிழிந்து பின்னர் நீரூற்றி சீனி போட்டுக் கலக்கிய போது அப்பா தெரிவித்த தகவல்;.

“எல்லோரும் வழமையாக முதலில் சாற்றைப் பிழிந்து சீனியோ சர்க்கரையோ போட்டு கலக்கிய பின் அல்லது இரண்டு பாத்திரங்களை எடுத்து மாற்றி மாற்றி ஆற்றி தேசிக்காய் நீரைத் தயாரித்துப் பருகுவார்கள். இப்படிக் கலக்கும் போதும், ஆற்றும் போதும் விற்றமின் சத்து வெளியேறி விடும் எனவும் உண்மையான விற்றமின் சத்து தேவையானால் தண்ணீரில் சீனியையோ அல்லது சக்கரையையோ சேர்த்துக் கரைத்து சரியான பக்குவத்திற்கு வந்த பின் தேசிக்காயைப் பிழிந்து சீனிக் கரைசலில் ஊற்றி அதிகம் கலக்காமலோ ஆற்றமலோ பருகும் போது தான் விற்றமின் ‘சி’ யைப் பெறக் கூடியதாகயிருக்கும்” என்றார்.

ஆரம்பத்தில் அப்பாவின் இக்கருத்துடன் உடன்படத் தயங்கினாலும் , சற்று வளர்ந்த பின் காய்கறிகளை சட்டியால் மூடி அவிக்காவிட்டால் விற்றமின் வெளியேறிவிடுமென வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் பத்திரிகைகளில் படித்த போது அப்பாவுடன் உடன்பட முடிந்தது. உயிர்ச் சத்தான விற்றமின் இருப்பதாக நாங்கள் வாங்கும் பொருட்களைத் தவறாகப் பதப்படுத்துவதாலும் பக்குவப்படுத்துவதாலும் உயிர்ச்சத்திழந்த உணவுப் பொருட்களையே உட்கொள்கின்றோம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: