Monday, December 24, 2007

இல்லையென்று இல்லையே...

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ம் திகதி யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகரிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிருக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும் இலங்கையில் மிக முக்கிய பதவியான அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இருபத்தைந்து பேரில் நானும் ஒருவன். ஒரு மரத்துக்கு கீழ் மக்களின் அவலங்களை பற்றிய கவலையோடிருந்தேன். வழமையாக கச்சேரி,நீதிமன்றம் போன்ற அரச அலுவலங்கங்களுக்கு அருகில் தட்டெழுத்துப் பொறியுடன் இளைப்பாறிய உத்தியோகத்தர்கள் உழைக்கும் காட்சி மனக்கண்ணில் தோன்றியது. ஆரம்ப நடவடிக்கையாக ஒரு மேசையும் கதிரையும் இரவலாக பெற்றுக்கொண்டேன். பேனாவைத் தவிர எழுதுவதற்கு கடதாசி கூட இல்லையே என எண்ணிக் கொண்டிருக்கையில் பாரதியாரின் வறுமை வாழ்க்கை பற்றி அப்பா எப்போதோ சொன்னது நினைவில் தோன்ற உடுப்பைச் சுற்றி கொண்டு வந்த பழைய செய்தித்தாளின் நிலை உயர்ந்தது. அச்சிட்டப்பட்ட செய்தித்தாளின் அச்சிடப்படாத ஓரங்களில் பாரதியார் கவிதைகள் எழுதியதாகவும் தெரு விளக்கின் கீழ் இருந்து படித்ததாகவும் அப்பா சொன்ன கதைகள் மனதில் தோன்றின. கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பிதா. ஜெபநேசனுக்கு செய்தித்தாள் ஓரத்தைப் பயன்படுத்தி எழுதிய கடிதத்துக்கு பதிலாகக் கிடைத்த தென்னோலைக் கிடுகுகள் கிளிநொச்சி கச்சேரியாக மாறி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலையைச் செய்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: