Wednesday, December 26, 2007

உயிர் கொல்லும் சாதனம்

அந்த நாட்களில் ஐஸ்கிறீம் விற்பனை செய்யாத கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளைக் காண்பதரிது. பெரும்பாலும் போதியளவு எல்லாப் பொருட்களையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதிலேயே மக்கள் நாட்டம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சில பொருட்களை அவித்தோ அல்லது வற்றலிட்டோ பதப்படுத்தி அடுத்த சில நாட்களுக்குப் பயன்படுத்தினர். இப்போதுள்ளது போல பல நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மீன் முதலியவற்றை உயை வைத்து உண்ணும் வழக்கம் இருக்கவில்லை. இந்நிலையில் முகவர் ஒருவரின் சாமர்த்தியத்தால் அப்பாவின் முதலாளி குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கினார்.. சோடா போன்ற குளிர்பானங்கள் வைத்தெடுப்பதற்கு இப்பெட்டி பயன்பட்டது. சாதாரண சோடாவை விட கூல் சோடாவின் விலை ஐந்து சதம் அதிகம். எதிர்பார்த்தளவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் வருமானம் வராதது ஒருபுறம் இருக்க குளிர்சாதனப் பெட்டியைத் தொடர்ந்தும் இயக்கியதால் மின்சாரக் கட்டணம் அதிகரித்தது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அவரின் நண்பர் காட்டிய மாற்று வழி “இரவில் மின்னிணைப்பைத் துண்டித்து குளிர்சாதன பெட்டியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். நீர் நிறைந்த வாளிக்குள் அமுக்கி மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யலாம். சோடாவை விலை கூட்டி விற்கலாம் மின்சாரக் கட்டணமும் குறையும்”

காலையில் குளிர்பானம் விற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் “கூல் கொஞ்சம் காணாது” என்று சொல்லிக் கொள்வார்கள். அப்பா போலி வேலைகளுக்கு பச்சைக் கொடி காட்டாதால் குளிர்சாதனப் பெட்டி விற்கப்பட்டது.

எனது நிதி நிலை திருப்பதியாக இருந்த போது நான் ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கிய போது எனது நண்பர் ஒருவரும் குளிர்சாதனப் பெட்டி வாங்கினார். வாழைப்பழம் போன்றவற்றை அதனுள் வைக்கக் கூடாதென்றும் காலத்துக்குக் காலம் சுத்தமாக்க வேண்டுமென்றும் சொல்லித் தந்த அப்பா ஒரு விடயத்தையும் வற்புறுத்திச் சொன்னார்.

“சில பொருட்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததும் தாமதிக்காமல் பயன்படுத்த வேண்டும். சில பொருட்களைக் குளிர்ரில் வைத்திருந்தாலும் அவற்றின் காலம் காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும். மின்சாரக் கட்டணத்தைக் கணக்கிலெடுத்து தொடர்ச்சியாக மின் இணைப்பைக் கொடுக்காமல் விட்டாலும் பொருட்கள் பழுதாகி விடும்”

இ;ந்த விடயத்தில் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. நனர் மட்டுமல்ல, உயர் அதிகாரியான எனது நண்பரும் தான்.

இளவயதிலேயே நண்பரைச் சில வருத்தங்கள் வாடடியதால் அடிக்கடி ஊசி மூலம் மருந்தேற்றிக் கொள்வார். அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வதும் டாக்டர் என அலைவதும் சிரமம் எனச் சொல்லி தனக்குத்தானே ஊசி மூலம் மருந்தேற்றப் பழகிக் கொண்டார். பார்மஸிகளில் ஊசி மருந்தை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார். தனக்கு விருப்பமானபோது தானே வைத்தியம் பார்த்துக் கொள்வார்.

திருகோணமலையில் வேலை செய்த நண்பர் கடமையொன்றுக்காக சில தினங்கள் மட்டக்களப்புக்கு சென்று திருமலை திரும்பியதும் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கின்றார். வழமைபோல ஊசி மருந்தை எடுத்து தனக்குத்தானே ஏற்றிய பின் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து குடும்பத்தினருக்குச் சொன்னதும் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர்தான் நடந்த விஷயம் தெரியவந்தது. நண்பர் மட்டக்களப்பு சென்ற பின் மின்னிணைப்பை நிறுத்தி குளிர்சாதனப் பெட்டியை துப்பரவாக்கிய போதும் சில நாட்களுக்குப் பின்தான் குளிர்சாதனப் பெட்டியை இயங்க வைத்திருக்கின்றனர்.

பழுதான மருந்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தியா சென்றும் ஏற்ற சிகிச்சை பெற முடியாமல் போனதால் மிகவும் திறமையான ஈழத்தமிழ் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை இளவயதில் இழந்து விட்டோம்.



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: