Monday, December 31, 2007

இரவுக் கடிகாரம்

கிராமப்புறங்களில் இரவுத் திருவிழா , நாடகம் , கலைவிழா முதலியன இரவு எட்டு ஒன்பது மணியளவில் நாடகம் பார்க்கப் புறப்பட்டபோது. ‘’கட்டி டோர்ச் லைட்டையும் கொண்டு போங்க. பின்னிருட்டு. லைட்டைக் கொண்டு போனால் திரும்பி வாறதுக்கு சுகமாயிருக்கும்’’ என்றார் அப்பா. வானத்தில் நிலவு இருந்ததால் வெளிச்சம் தேவை யில்லை என்ற எண்ணத்துடன் சென்றுவிட்டேன்.

நாடகம் முடிந்து அதிகாலை மூன்று மணியளவில் இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டை வந்தடைந்தபோது அப்பா ஏசுவார் என எதிர்பார்த்தேன். அவர் இன்னுமோர் விடயத்தைச் சொல்லித் தந்தார்.

“ இரவுக் காலம் பன்னிரெண்டு மணித்தியாலம் கொண்ட பகுதி முழு இருட்டான அமாவாசை நாளிலிருந்து பதினைந்து நாளில் பூரண நிலவு தோன்றும். பின்னர் பதினைந்து நாளில் நிலவு தேய்ந்து தேய்ந்து அமாவாசை தோன்றும். மழையில்லாவிட்டால் அமாவாசையின் பின் தோன்றும் நிலவு ஒவ்வொரு நாளும் 45நிமிடம் என வானில் தோன்றும் நேரத்தை அதிகத்துச் சென்று பதினைந்து நாளில் முழு வளர்ச்சி பெற்று மழுநிலவாக பூரணைச் சந்திரனாக பறுவத்தன்று பவனி வரும். பின்னர் ஒவ்வொரு நாளும் இருள்காலம் 45நிமிடங்களால் அதிகரித்துச் செல்லும். மாலையானதும் ஆரம்பமாகும் இருட்டு ‘முன்னிருட்டு’ எனவும் அதிகாலைக்கு முன்பு காணப்படும் இருட்டு ‘பின்னிருட்டு’ எனவும் ஆஙைக்கப்படுகின்றது..

வெளிச்ச வசதி இல்லாத காலத்தில் கிராம மக்கள் போக்குவரத்துச் செய்யும் போது ‘முன்னிருட்டு, ‘பின்னிருட்டு, வேளைகளைக் கவனத்தில் கொண்டு காரியமாற்றினார்கள்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: