Tuesday, December 25, 2007

நிறை , குறை சொல்ல ஒரு முறை

அப்பாவின் சுவையான தயாரிப்புக்களில் அல்வாவும் ஒன்று. இந்தியாவில் மதுரை மல்லிகை, மணப்பாறை முறுக்கு திருநெல்வேலி அல்வா என ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு பொருளுக்குச் சிறந்ததாக விளங்குகின்றது. திருநெல்வேலி அல்வாவே சிறந்தது எனச் சொல்வோர் அப்பாவின் தயாரிப்பை திருநெல்வேலித் தயாரிப்புக்கு ஒப்பிடுவார்கள். திங்கட்கிழமை கொழும்பில் திருமணப் பந்தலில் அமர வேண்டிய நண்பனுக்கு வெள்ளிக்கிழமை திடீரென ஓர் ஆசை. ‘திருமணக் கேக்குப் பதிலாக அப்பா தயாரிக்கும் அல்வாவை கண்ணாடிப் பேப்பரில் சுற்றி சிறு அட்டைப்பெட்டியில் வைத்து வழங்க வேண்டும்’ உடனடியாக அல்வாவைத் தயாரித்து வெட்டித் தருவதற்கு மட்டும் அப்பா உடன்பட்டார். அந்நாட்களில் பொலீத்தின் என்ற சொல்லைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் மிகச் சிலரே. பல இடம் தேடிய பின் வாங்க முடிந்த கண்ணாடிப் பேப்பர் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. சனிக்கிழமை மாலையாகி விட்டதால் பிரபல அச்சகங்கள் மூடப்பட்டு விட்டன. மானிப்பாய் வீதியில் அப்பாவால் அடையாளம் காட்டப்பட்ட சிறு ஒழுங்கையில் ஒருவர் அச்சு வேலைகளைப் பொறுப்பேற்றார். அச்செழுத்துக்களைக் கோர்ப்பது அவருக்கு கைவந்த கலை. அதன் பின்னர் கோர்வைகளைக் கொண்டு சென்று பெரிய அச்சகங்களில் மிகுதி வேலைகளைப் பூர்த்தி செய்வார். கையால் இயக்கும் சிறு அச்சியந்திரம் இருந்தாலும் எனது வேலை சிறிதென்பதாலும் பொறுப்பெடுத்துக் கொண்டு மறுநாள் மத்தியானத்துக்கு முதல் அட்டைப் பெட்டிகளை அப்பாவிடம் கொடுப்பதாகச் சொன்னார்.

ஞாயிறு மாலை மணி இரண்டாகியும் அச்சகத்திலிருந்து பெட்டி வராததால் மானிப்பாய் வீதிக்கு சென்றேன். என்னிடம் வேலையைப் பொறுப்பெடுத்தவர் இருக்கவில்லை. அவரது மனைவியையும் மகளையும் ஆத்திரம் தீரும் வரை வாயக்கு வந்தபடி ஏசினேன். வேலைகளை முடித்துக் கொண்டு இரவு ஆறு மணி ரெயினில் கொழும்புக்கு புறப்பட வேண்டுமே! தில்லைப்பிள்ளை கிளப்புக்கு பக்கத்தில் அமைந்திருந்த காந்தா அச்சகத்தின் உரிமையாளர் திரு. கணபதிப்பிள்ளைக்கு பள்ளி மாணவனான என்னை அபபா அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துடன் ஐந்தாறு நாட்கள் அச்சுக் கோர்க்கும் பகுதியில் தலை கீழாகக் கிடந்த ஈய எழுத்துக்களிடையே எனது பெயர் விலாசத்துக்குரிய எழுத்துக்களைத் தேடியெடுத்து சிறு பெட்டியில் கோர்த்து எழுத்துகளில் மட்டுமன்றி கை முகமெல்லாம் அச்சு மையைப் பூசிக் கொண்டு அப்பாவிடம் ஏச்சு வாங்கினதும் ஓர் அனுபவம். அந்த அரைகுறை அனுபவத்தை வைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்;களை அச்சுறுத்தி அச்செழுத்துக்களை ஒவ்வொன்றாக தேடினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த அப்பா நொடிப் பொழுதில் நடந்ததறிந்து என் சார்பில் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். “கட்டி! வேலையை ஒரு ஆளிடம் கொடுத்துவிட்டு இன்னொரு ஆளிடம் குறை சொல்லக் கூடாது. அதுவும் பெம்பிளைகளைக் குறைசொல்ற போது ரொம்பக் கவனமாக இருக்க வேணும். ஒரு ஆளைப் புகழ் வேணும் பாராட்ட வேணும் எண்டால் ஆரிடமும் சொல்லலாம். ஏச வேணும் குறை சொல்ல வேணுமெண்டால் அந்தாளிடம் மட்டும் சொல்ல வேணும்” மிக நெருங்கிய நண்பர்களின் திடீர் மரண வீட்டுக்குச் சென்று திரும்பியவர் எனது வேலைகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுவதற்காக கையால் இயக்கும் இயந்திரத்தை அவசரம் அவசரமாக இயக்க ஆரம்பித்தார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: