Monday, December 17, 2007

ஒரே ஒரு நாட்காட்டி

நத்தாருக்கும் புது வருடத்துக்கும் இடையில் கடை கடையாக ஏறி இறங்குவோருடன் நானும் இணைந்து கொள்வேன். எல்லாம் புதுக் கலண்டர் சேகரிப்புக்காகத்தான். ‘ஒரு கலண்டர் போதும்’ என்பது அப்பாவின் தீர்மானம். எத்தனை கலண்டர் கிடைத்தாலும் திருப்தி தருவாகக் காணோம். இரண்டு பெரிய காட்போட் பெட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கலண்டர்களின் பாரம் கழுத்தை நெரித்து துன்பம் தரவும் சாதனை நிலை நாட்டுபவன் என்ற நினைப்புடன் யாழ்ப்பாண நகரிலிருந்து கிராமமான உடுப்பிட்டிக்குச் சென்றேன். ஒவ்வொரு கலண்டருக்கும் நூல் கோர்த்துக் கட்டி சுவரிலும் ஆணிகள் உள்ள இடங்களிலும் மாட்டிப் பார்த்த அழகு அதிக நாள் நிலைக்கவில்லை.

ஊரவர் உறவினர் என ஒவ்வொருவரும் அம்மாவுக்கு ஒவ்வொரு தடவையும் வேண்டுகோள் விடுக்க ஒவ்வொரு கலண்டராகக் குறைந்து சென்றது.

பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரேயொரு கலண்டரைக் காப்பாற்ற முடிந்தது. ‘கட்டி நல்லதாக வீட்டுக்கு ஒரு கலண்டர் இருந்தால் போதும். கடை கடையாக ஏறிச் கெஞ்ச வேணுமா?” இது மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அடுத்த வருடம் முதல் யாரிடமும் கலண்டருக்காக அலைவதில்லை.

கலண்டர் தானாக வராவிட்டால் பணம் கொடுத்து ஒரு பெரிய கலண்டர் வாங்கி முன் பக்கச் சுவரில் மாட்டி விடுவேன். எந்தக் கலண்டரைப் பார்த்தாலும் அன்றைய திகதியை அறிவதில் தான் ஆர்வம் காட்டுகின்றோம். எல்லாக் கலண்டரும் ஒரே திகதியைத் தான் காட்டுகின்றது.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: