Monday, December 24, 2007

கடி வாய் மருந்து

க.பொ.த உயர்தர வகுப்புக்கு வந்த பின்பு கட்டைக் காற்சட்டையுடன் நான் கல்லூரி செல்வதை விரும்பாததால் நீளக்காற்சட்டையும் சாப்பாத்தும் கிடைத்தது. புதுக்காற்சட்டையும் சேட்டும் என்னோடு அளவாக அழகாக உறவாடின. சப்பாத்துக்கு மாத்திரம் என் மீது சரியான கோபம். காலிரண்டையும் வெட்டியும் கடித்தும் படாதபாடு படுத்தின. சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறைக் கதிரையுடன் ஒட்டிக் கொண்டேன். நடந்து திரிந்து ஏன் புதுச் சப்பாத்திடம் கடியும் வெட்டும் வாங்குவான்? ஏறக்குறைய எல்லோரும் போன பின் காலணிகளைக் கையில் காவிக் கொண்டு வீடு வாசல் வரை சென்று காலில் மாட்டிக் கொண்டு சென்ற போது பாதங்களைப் பார்த்த அப்பா சொன்னார்.

“முகத்திற்குப் போடுற பவுடரைக் கொஞ்சம் எடுத்து குதிக்காலுக்கு மேலையும் சப்பாத்து நல்லாகக் கடிக்கிற சின்ன விரல் பெரு விரல் மாதிரியான இடங்களிலை தடவிப் போட்டு சப்பாத்து போட்டால் சப்பாத்து கடிக்காது”

இப்போதும் சப்பாத்து செருப்பு புதிதாக வாங்கியதும் போடுவதற்கு முன்பாக முகப்பவுடரை கால் விரல்கள் , குதிக்காலில் போடும் போது நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. செய்து விட்டு போகட்டுமே! கிண்டல் தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம். சப்பாத்து செருப்படி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமம்..


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: