Monday, December 31, 2007

முரண்பாடுகள் சொல்லும் உண்மைகள்

தீபாவளி வருஷசம் என பெருநாட்கள் வரும் போது கடையிலுள்ள தொழிலாளிகள் சட்டை, சாரம், வேட்டை போன்ற புது உடுப்புகள் வாங்குவார்கள். வாங்கிய புது உடுப்புகளை இரவு கடை பூட்டியதும் மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வார்கள்.

அந்த இளம் தொழிலாளி அதிகம் படிக்காத போதும் அழகான ஆடைகளுக்காக அதிகம் செலவழித்ததேர்டு தன்னைப் படித்தவன் என்று மற்றோருக்கு காட்டுவதற்காக இரண்டொரு சஞ்சிகைகளையும் கையில் வைத்திருப்பான். சில படங்களைப் பார்ப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஆங்கில சஞ்சிககையையும் வைத்திருப்பான். அவன் புதிதாக வாங்கி வந்த ‘சேட்’ மிக நன்றாக இருந்தது.

“சேட் பிரமாதம்” என அப்பாவும் ஒரு பாராட்டு கொடுத்தார்.

பாராட்டுகளினால் மனம் நிறைந்த தொழிலாளி சொன்னான். “இது நல்ல திறமான துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. தையலும் அறாது”

“அப்படியா?” வேறு சில தொழிலாளர்களின் ஆச்சரியம்.

அவன் தொடர்ந்தான். “துணி கிழிந்தாலும் சாயம் போகாது, நிறம் மாறாது”

மீண்டும் சில தொழிலாளர் ஆச்சரியப்பட்டனர். “அப்படியா?”

அவனின் அசட்டுச் சிரிப்பு, “இது ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. நிறம் மாறினாலும் சேட் கிழியாது. சேட் கிழிஞ்சாலும் நிறம் மாறாது. எனக்காக புடவைக்கடை முதலாளி விலை குறைச்சுத் தந்தவர்!”

அப்போதுதான் அப்பா பெரிதாகச் சிரித்தார். “என்னய்யா சொன்னே! நிறம் மாறினாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. அதையும் முதலாளி விலை கொறைச்சுக் கொடுத்தார். இது வழக்கமாக எல்லா முதலாளிமாரும் சொல்லுறது. செய்யிறது. நாம ஏமாறக் கூடாது”

அப்பா சொல்லிய பின்தான் முன்னுக்குப் பின் முரணாக தொழிலாளி சொல்லியதும், சேட் விற்பனை செய்பவரால் அவன் ஏமாற்றப்பட்டதையும் உணர முடிந்தது.

இன்றும் கூட, ஊடங்கள் சிலவற்றின் ஊடாக காதில் விழுபவை. கண்ணில் படுபவை. முன்னுக்குப் பின் முரணாக அடுத்தடுத்த வரிகளில் விளம்பரங்களை தரும் போது நினைவுக்கு வருவது ‘நல்ல துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. தரமான துணி”


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: