Monday, December 24, 2007

பணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'

தங்கை சற்று வளர்ந்த பின் தையல் கலையை முழுமையாகப் பயின்றதால் அவள் தனக்கென ஒரு தையல் இயந்திரத்தை உரிமையாக்க விரும்புவது சரியென கொள்கையளவில் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். சில நாள் கழிய புதிய இயந்திரம் வாங்கிக் கொடுக்க தந்தை இணக்கம் தெரிவித்தார். இந்தச் சங்கதி இடைத் தரகர் ஒருவருக்குத் தெரிந்து விட அவர் கடைக்கு மாவிடிக்க வரும் பெண்ணொருத்தி மூலம் அம்மாவின் மனதில் ஆசையை மூட்டி சற்று குறைவான விலைக்கு ஒருவரிடம் பாவித்த இயந்திரத்தை வாங்கினார். தரகர் ,மாவிடிக்கும் பெண், அம்மா எல்லோரும் சேர்ந்து ‘அதிகம் பாவிக்காத மெசின். விலையும் மலிவு’ என்று சொல்லி அப்பாவின் அரைகுறைச் சம்மதத்தை வாங்கிவிட்டனர். கொடுப்பனவு பூர்த்தியாக கொள்வனவு செய்த இயந்திரம் வீட்டுக்கு வந்தது.

தையல் இயந்திரம் வீட்டுக்கு வந்த மூன்றாவது நாள் திடுதிப்பென்று கடைக்குள் நுழைந்த பொலிஸார் அப்பாவிடம் அடுக்கடுக்காகப் பல கேள்விகள், விசாரணைகள், விளக்கங்கள். பின்புதான் விடயம் விளங்கியது. இல்லத்தலைவி உழைத்து வாங்கிய தையல் இயந்திரத்தை குடிகாரக் கணவன் தரகர் மூலமாக எங்கள் தலையில் கட்டி பொலிஸ் நிலையம் வரை அலைய வைத்தான். விற்பனை நிலையததிலிருந்து வழங்கிய சிட்டை இல்லாமல் இன்னொருவருக்குச் சொந்தமான பொருளை முறையான சாட்சிகள் கூட இல்லாமல் வாங்கியது திட்டுப் பொருளை வீட்டில் வைத்திருப்பதாகக் கருதப்படும் என்றனர் பொலிஸார்.

முறையான விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்காவிட்டால் சில ஒழுங்குகளைக் கடைபிடித்துத்தான் பொருட்களை வாங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன் சம்மதமின்றி மனைவியிடமோ மனைவியின் சம்மதமின்றி கணவனிடமோ வாங்கும் பொருள் கூட பிரச்சனைகளை உருவாக்கும் எனற் பாடத்தை பணம் கொடுத்துத்தான் படிக்க நேரிட்டது என அம்மா சொல்லுவார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: