Monday, December 24, 2007

யார் யார் சிவம்..?

கோவில்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். கோவிலுக்கு போகாதோரைக் காண்பதரிது. வழிபடச் செல்வோர் - பொருள் வாங்கச் செல்வோர் - பொழுது போக்கச் செல்வோர் - புதினம் பார்க்கச் செல்வோர் - என ஏதோ ஒரு வகையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகையிலோ பலரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிக தூரம் நடக்க வலுவற்ற சிறுவனாக இருந்த என்னை அப்பா தோளில் தூக்கி வைக்க நான் அவர் தலையை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு குதிக்காலால் அவர் நெஞ்சில் தாளமிட்டுக் கொண்டே சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள செல்வச் சந்நிதி ஆலயத்துக்குச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பின் கோவிலுக்குச் சென்றதைக் காணாததால் காரணம் கேட்டேன்.

“அடுப்படிதான் எனக்கு கோவில். செய்யிற தொழில் தெய்வம் - நெருப்பு என்ர தெய்வம். காலமை வேலை தொடங்கிறதுக்கு முதலும் வேலை முடிஞ்சதுமு; நெருப்பை மனதாலை கும்பிடுறன். பகல் பொழுதெல்லாம் கோயிலிலேயே இருக்கிறன். போதாதா?” சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் 20 வது முடிவதற்கு முன்பாகவே பொலிஸ் தலைமைக் காரிலயத்தில் எழுதுவினைஞன் வேலை கிடைத்த போது ஆசீர்வதித்தார்.

“நீ வேலை செய்யப் போற இடம்தான் உனக்குத் கோயில். வசதிப்படுற நேரமெல்லாம் கோவிலுக்குப் போக வேணும். மேசையும் கதிரையும் பேனையும் தான் உனக்குத் தெய்வங்கள். கதிரையை நீ காப்பற்றினா கதிரை உன்னைக் காப்பாற்றும். முடிஞ்ச வரைக்கும் பேனையை நல்ல விஷயத்திற்கு மட்டும் பாவிக்க வேணும்”

எனக்கு நன்றாகத் தெரியும் - காலையும் மாலையும் நான் மேசையைத் தொட்டுக் கும்பிடும் போது ஒட்டி நின்று பார்த்து தங்களுக்குள் சிரித்து மகிழும் ஊழியர்களைப் பற்றி. அவர்களின் சிரிப்புக்கஞ்சி என் வழிபாட்டை நிறுத்தத் தயாரில்லை. என்னைப் பொறுத்தளவில் எனது மேலதிகாரிகளின் பேனா இதுவரை எனக்குக் கெடுதல் செய்ததில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: