Friday, December 28, 2007

தொழில் விசுவாசம்

பொதுவாக யாழ்ப்பாணத்தில் பொருட்களை உடமையாக்கும் போது பொருட்களின் விளம்பரத்திலும் அழகிலும் மயங்காமல் நீடித்த காலம் பயன்படக் கூடிய பொருட்களைத் தேடி வாங்கிய காலம் ஒன்றிருந்தது. ஏ போர்டி கார், றலி சைக்கிள், சிங்கர் தையல் மெஷின் வரிசையில் பிக் பென் மணிக்கூடும் சேர்த்துக் கொள்ளப்படும். எங்கள் வீட்டில் பிக்பென் மணிக்கூடு பிழையில்லாமல் நீண்ட காலம் உழைத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது.

அந்தக்காலத்தில் பிரபலமான மணிக்கூடு திருத்;தும் கடையொன்றிருந்தது. அக்கடையில் இரண்டு மூன்று நாட்களில் ஐந்து ரூபா கட்டணத்தில் மணிக்கூடு ‘சேர்விஸ்’ செய்து தருவார்கள். அந்தக் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டிருப்பதால் அங்கோ வேலை செய்பவர் தனிப்பட்ட வகையில் சில இடங்களுக்குச் சென்று திருத்த வேலைகளைச் செய்வார். அவர் அப்பா வேலை செய்யும் கடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். இரண்டு ரூபாவும் ஒரு போத்தல் மண்ணெண்ணை (அப்போது சுமார் இருபத்தைந்து சதம்) யும் கொடுத்தால் சிறிது நேரத்திற்குள் மணிக்கூட்டை சேர்விஸ் செய்யப்படுவதால் களவு வேலைகளுக்கிடமிருக்காது எனப் பலர் நம்பினார்கள். காலத்துக்கு காலம் அவரால் எங்கள் மணிக்கூடும் சேர்விஸ் செய்யப்பட்டதால் மணிக்கூடும் சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏதாவது உதிரிப்பாகங்கள் மாற்ற வேண்டியிருந்தால் அவர் குறிப்பிடும் உதிரிப்பாகங்களை வாங்கி வந்தால் எங்கள் முன்னிலையில் மாற்றி பழைய பாகங்களை மணிக்கூட்டு உரிமையாளரிடம் கொடுத்து விடுவார். உதிரிப் பாகங்கள் பொருத்துவதற்கென வேறு கட்டணம் வாங்க மாட்டார். இதனால் யாழ் நகரமெங்கும் அவருக்குப பல வாடிக்கையாளர்கள். நல்ல வருமானம் . கடையில் மாதச்சம்பளம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை கடையில் சில மணிக்கூடுகள் சேர்விஸ் செய்ய ஆரம்பித்த போது நானும் அவருக்குதவியாக நட்டுகளைக் கழற்றி சில பாகங்களை மண்ணெண்னையில் கழுவி உதவி செய்தேன். அவரும் மணிக்கூடு திருத்தும் முறைகள் சிலவற்றைச் சொல்லித் தந்தார். அவரது மாதச்சம்பளம் ஞாயிற்றுக்கிழமை வருமானம் இவற்றை மனதில் கூட்டிப்பார்த்தேன்.

அப்பா சிரித்தார். வேணுமிண்ணா மணிக்கூடு ரிப்பயர் செய்யிற வேலையைப் பழகலாம். ஆனா ஒரு கடையில் வேலை செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை வருமானத்துக்காக வேற இடத்திற்கு போறது சரியில்ல. எப்பவும் நமக்குத் தொழில் தாறவங்க சம்பளம் தாறவங்கட்ட விசுவாசமாயிருக்கணும். அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது”

‘அப்படியெண்டால் அவரிடம் நாங்கள் மணிக்கூடு சேர்விஸ் செய்யச் சொல்லிக் கொடுக்கிறதும் பிழை” என்றேன் நான்.

“பிழைதான். அவர் குடும்பம் பெரிசு. இப்படியப்படி உழைச்சாதான் குடும்பத்த காப்பாத்தலாம். அதுக்கு நாம செய்யிற பங்குதான் இது. இது சரியில்ல. இப்படி நாம உழைக்கக் கூடாது”

இந்த சம்பவம் மனதில் நன்றாகப் பதிந்துள்ளதால் எனது மேலதிகாரிகளுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து வருகின்றேன். அதனால் எனது தொழிலிலும் அலுவலக விடயங்களிலும் யாரும் இதுவரை குற்றம் குறை காண முடியவில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

2 comments:

Unknown said...

தங்களின் தமிழ்ப் பணி சிறக்க.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

தமிழ்ச்சித்தன் தங்களின் பாராட்டுக்கள் உற்சாகமளிக்கிறது. நன்றி