Saturday, September 8, 2007

முன் ஆயத்தம் - (அப்பா 02 )

(அப்பா நூலின் தொடர்)

கல்லூரி நாட்களில் தந்தையாருடன் கடையில் தங்கியிருந்திருக்கிறேன். காலை ஐந்து மணிக்கு முன்பாகக் கடமைகளை ஆரம்பித்து விடுவார். சாதாரணமாக இரவு பத்து மணிவரை கடையில் வியாபாரம் நடைபெறும். அதன்பின் தந்தையார் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பார். யாராவது “பகல் பொழுது முழுவதும் வேலை செய்வதால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கக் கூடாதோ?” என்று கேட்டால் - ‘பகல் முழுவதும் வேலை செய்கிறேன். வாசிப்புத்தான் எனக்கு ஓய்வு’ என்பார். சாதாரணமாக அவர் வேலை செய்யும் வேளைகளில் கடையில் வேலை செய்வோர் மட்டுமல்ல – வேறு பல முதலாளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல தரத்தவர் அவருடன் உரையாடி நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்வார்கள். தந்தையாரும் மற்றவர்களும் உரையாடும் போது தெரிந்து கொண்டவை பொது அறிவையும் விவேகத்தையும் என்னுள் உருவாக்கியது.

கல்யாணக் காலங்களில் விசேட பலகாரங்களை தயாரிக்கும் பொறுப்புத் தந்தையாருக்குக் கொடுக்கப்படும். வழமையான வேலைக்குப் பின்பே அதாவது இரவு பத்து மணிக்கு பின் விசேட வேலைகள் ஆரம்பமாகும். இடையில் மின்சாரம் தடைப்பட்டாலும் கடமை தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதற்காக ‘பெற்றோல் மக்ஸ்’ – ‘அரிக்கன் லாம்பு’ என்பவை மட்டுமல்ல – பற்றறியுடன் கூடிய மின்விளக்கும் தயாராக வைத்திருப்பார். உணவுகளைத் தயாரிக்கும் போது எந்த இடையூறுகளாலும் சுவையும் தரமும் கெட்டுவிடக் கூடாது என்பார். அவரிடம் கற்ற பாடம்தான் கடமைகளைச் செய்யும் போது எந்தெந்த இடையூறுகள் தடைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மாற்று ஒழுங்குகள் பலவற்றை தயார் செய்தால் ஒன்றில்லா விட்டால் இன்னொன்று மூலம் நோக்கங்களை அடையக் கூடியதாயிருக்கும்.

குறிப்பாக வன்னியில் கிளிநொச்சி நகரில் போர் மேகங்கள் சூழ்ந்த போது பாதுகாப்பான பகுதிகளுக்கு அலுவலகங்களைக் கொண்டு சென்றதும் பெறுமதியான கோவைகள், கடிதங்கள், சாதனங்கள் சேதமின்றித் தக்க வைத்திருப்பதற்கும் முன்கூட்டியே மாற்று ஒழுங்குகளைத் தீர்மானித்துச் செயற்டுத்தியதுதான் காரணம்.

திடீரென இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையே முல்லைத்தீவில் ‘போர்’ பெரிதாக வெடித்த போது முக்கியமான சாதனங்களை கூட எடுக்க முடியாமற் போய் விட்டதாகத் தெரிந்து கொண்ட செய்தி என் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது.

1995 இல் கிளிநொச்சி அரச அதிபர் பதவியை ஏற்ற நாள் தொடக்கம் ஏற்படலாமென எதிர்பார்த்த எந்தவித அசம்பாவிதங்களுக்கும் முகம் கொடுக்க கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களைத் தயார்படுத்தி வைத்திருந்தேன். 1996 நடுப்பகுதியில் கிளிநொச்சி நகரில் போரினால் அவலங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மாற்று ஒழுங்குகளின் பிரகாரம் அரசாங்க அலுவலகங்கள் யாவும் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டன. அதற்கு முன்பான கடிதங்கள் கோவைகள் சாதனங்கள் ஆகியவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் பாதுகாப்பாக எடுத்துச் சென்றதால் எந்தவொரு சாதனமும் தொலையவில்லை- சேதப்படுத்தப்படவில்லை.
அப்பா வருவார்...

முன்னைய இடுகைகள் 'அப்பா' என்னும் வகைப்படுத்தலிலுள்..

4 comments:

மாயா said...

வீரகேசரியில் குடையைக்கண்டநீங்களோ ? என்ற ஆக்கம் கண்டேன் ஐயா

Link : http://www.virakesari.lk/epaper/ArticleImage.aspx?article=09_09_2007_030_004&mode=1

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//வீரகேசரியில் குடையைக்கண்டநீங்களோ ? என்ற ஆக்கம் கண்டேன் ஐயா//


குடையை கண்ட கண்களுக்கு நன்றி, பதிலளித்த உள்ளத்திற்கு நன்றி

ramachandranusha(உஷா) said...

தலைப்பு இப்பொழுது சரி :-)

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//ramachandranusha(உஷா) said...
தலைப்பு இப்பொழுது சரி :-) //

நன்றி உஷா