Thursday, September 20, 2007

சில்லறைக்காசு (அப்பா தொடர் -9)


ஐம்பதுகளில் ஒரு சதம் இரண்டு சதம் போன்ற சில்லறைக் காசுகளுக்கும் பெறுமதி இருந்தது. ஒரு தடவை அப்பா பத்து ரூபா பெறுமதியான ஒரு சதம் இரண்டு சதம் அடங்கிய நாணயங்களை ஒரு சிறு அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். ஏதாவது உண்டியல் உடைத்தீங்களா? என்று உறவினர் கேலி செய்த போது பள்ளிக் கூட மாணவனாக இருந்த எனக்கும் ஏதோ போலத் தெரிந்தது. ஒரு பத்து ரூபா தாள் கொண்டு வந்திருந்தால் அம்மாவும் சந்தோசப்பட்டிருப்பா போலத் தோன்றியது. ஆனால் அப்பாவோ இதன் உண்மையையான பெறுமதி பத்து ரூபாவை விடப் பல மடங்கு. பெறுமதி என்பதை விடச் சில்லறையால் வரும் திருப்திக்கு அளவில்லை என்றார்.

அடுத்த நாள் தந்தையுடன் யாழ்ப்பாணத்திற்கு பஸ்சில் புறப்பட்டேன். தந்தையார் தந்த ஒரு ரூபாவை பஸ் கொண்டக்ரரிடம் கொடுத்து ஒன்றரை டிக்கட் வாங்கினேன். முழு டிக்கட் 55சதம் - அரை டிக்கட் 28 சதம். மிச்சக் காசு மிச்சக் காசு என்று பல முறை கத்தி அழாக்குறையாகக் கெஞ்சி 10 சதம் தான் கொண்டக்ரரிடமிருந்து வாங்க முடிந்தத. ஏழு சதம் கிடைக்கவேயில்லை. எனக்கோ சரியான கவலை.


‘கட்டி! மூன்று சதம் சில்லறையிருந்திருந்தால் ஏழு சதத்தை இழக்க வேண்டியிருக்காது. இதைதான் சில்லறையின் பெறுமதி அதிகம் என்றேன். சிறு இழப்புக் கூட இல்லாவிட்டால் அது திருப்திதானே என்றார். உண்மைதான் . இதனால் இப்போது கூட எப்போதும் வீட்டில் சில்லறைக் காசு வைத்திருப்பேன்.


அதனால் காலையில் பத்திரிகை. பாண் வாங்கும்போது கூட பிரச்சினையில்லை. சில்லறையில்லையென்று விற்பனையாளரிடம் பணத்தை இழக்கும் நெருக்கடியும் இல்லை.

அப்பா வருவார்........

No comments: