Wednesday, September 26, 2007

ok.....ok...


சாதாரண மனிதனான எனக்கும் பலவீனங்களுக்கு மத்தியில் சிறிது பலமும் இருக்கிறது.ஓரளவுக்கு எனது பலவீனங்கள் எனக்குத்தெரிந்தாலும்- எனது பலவீனங்கள் என்னவென்று மற்றவர்களுக்குத்தான் நன்கு தெரியும். பலம்…படிப்பேன் - படிப்பேன்--மற்றவர்களைப்படித்துக் கொண்டேயிருப்பேன்.

பள்ளிகூட வாழ்வில் படித்ததால் பரீட்சையில் சித்தி. வேலை கிடைத்தது. வேலை கிடைத்தபின் கிடைத்த வேளைகளில் படித்தேன். உயர்வை அடைய முடிந்தது. கடமையைச் சரியாகப்படித்ததால் வெற்றியின் உச்சத்தைத் தொட முடிந்தது. ஆட்களைப் படிப்பதும் ஒரு பாடம். தொடரும் அந்தப்படிப்பைத் இடைவிடாது தொடர்வதால் தொடர்ந்தும் வேலையில் நிலைக்க முடிகிறது. தொல்லைகளில் தப்ப முடிகிறது.

அப்போது அரசஅலுவலகமொன்றில் கடன் வழங்கும் விடயங்களுக்குப் பொறுப்பான எழுதுவினைஞன் நான். எனது மேலாளாரான பிரதம எழுதுனர் தினமும் காலையில் வந்தவுடன் சிலரது கடன் விண்ணப்பங்களை என்னிடம் தந்து எப்படியாவது எல்லாவற்றையும் சரியாக்கி மதிய உணவுக்கு முன்பாகத்தரும்படி வற்புறுத்துவார். கடன் விண்ணப்பதாரியினை உறவினர் அல்லது நண்பர் என்று சொல்லுவார். நானும் எனது மேலாளர் என்பதால் விடயத்தை முடித்துக்கொடுப்பேன். உண்மையென்ன வென்றால் கடன் விடயத்தை நான் முடித்துக்கொடுக்க விண்ணப்பம் காவிவரும் மேலாளருக்கு சமிபாட்டு ஊக்கியும் மதிய உணவும் கிடைக்கும். ஒருநாள் காலை “ அண்ணனுக்கு கொஞ்சம் அவசரம.; இதை உடனடியாகச் செய்து தா “ என்றார். “அண்ணாவுக்கா அவசரம் அல்லது உங்களுக்கா அவசரம் “ –என மனதுக்குள் கேட்டபடி கடன் விண்ணப்பத்தை மற்றக்கடிதங்களுடன் கலந்து விட்டேன். நேரம் விரைவாக நகர்ந்து மத்தியானமாகிவிட்டது.

மேலாளர் சினத்துடன உரத்துக்கதைக்க- நானும் குரலை உயர்த்த முழுக்கந்தோரும் எங்களைச்சுற்றிக்கொண்டது.

“சரி- உங்கடை அண்ணாவின்ர பெயரைச் சொல்லுங்கோ. உடனை செய்து தாறன்” என்றதும் மேலாளர் தடுமாறினார்.

சந்தர்பத்தை பயன் படுத்தி ‘அண்ணாவின் பெயரைச் சொல்லச்சொல்லி’ வற்புறுத்தினேன்.

“மறந்து போனன்-வரட்டும் கேட்டுச்சொல்லுறன் “ என்றார்.

‘உவருக்கு கடன் எடுக்கிறவன் தின்னக்குடிக்க வாங்கிக்குடுக்கிறவன் எல்லாரும் சொந்தக்காரர். எல்லாருடைய பேரும் என்னெண்டு நினைவிலை வைச்சிருக்கிறது’-தமையனின்ரை பேரையும் மறந்து போனான் போலை..’ இது மற்றவர்களின் அவதானம். அவர் பிறகு தொந்தரவு தரயில்லை.

இரண்டு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் சக கலைஞர்களுடன் சகஜமாகப் பழகுவார்கள். ஒருவர் நேரடியாகவே விடயத்துக்கு வருவார்- ‘ஒரு பத்து ரூபா தா’—காசில்லை எனப்பதில் சொன்னால்-‘காசில்லையா…அப்ப ஒரு ஐந்து ரூபா தா’


-2-


மற்றவர் ஒரு இரகசியம் என்றபடி காதுக்கு கிட்ட வருவார்-‘ஒரு பகிடி சொல்லுறன்-சிரிக்கக் கூடாது. ஒருதருக்கும் சொல்லக் கூடாது. வவுச்சர் எடுத்து பத்து ரூபா தா’ என்பார். ஏப்படிச்சிரிக்க முடியும்.

ஒருநாள் இந்த தயாரிப்பாளர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த போது சற்று தொலைவில் வானொலிநிலையத்தலைவர் வருவதை அவதானித்து விரைந்து அவரருகே சென்று தொடர்பில்லாமல் இரண்டொரு கதைகளைச்சொல்லிவிட்டு மீண்டும் தயாரிப்பாளர் பக்கம் வந்தேன். “ அவருக்கு முந்தியே என்னைத்தெரியும். இப்ப பழைய கதைகளை நினைப்பூட்டிப்போட்டு வாறன் “ என்றேன். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் காசு கேட்பதில்லை. காதுக்குள் இரகசியம் சொல்வதில்லை.

மன்னாரில் கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய போது சங்குப்பிட்டியிலிருந்து கேரதீவு செல்லும் பஸ்ஸில் நிறைய பிரையாணிகள். ஆசனத்தில் அமர்ந்திருந்த என்னருகே நின்றவர் சிரித்துக்கொண்டே என்னிடம் கதை கொடுத்தார்.


அவர்- ‘நீங்கள் கச்சேரியிலையோ வேலை’
நான்- ‘இல்லை-கூட்டுறவு கந்தோரிலை’
அவர்-‘ ஆர் கூட்டுறவு ஆணையாளர்’
நான்-‘தில்லைநடராசா’
அவர்-‘அ.அவரா. அவரை நல்லாகத்தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வார்’
நான்-‘அவரை என்னெண்டு உங்களுக்குத்தெரியும்”
அவர்-‘நாங்கள் ஒண்டாகப்படிச்சனாங்கள்’
நான்-‘நான் தான் கூட்டுறவு உதவி ஆணையாளர் தில்லைநடராசா. நான் உங்களோடை படிக்கயில்லை’
என்னோடு படித்ததாக எனக்கு கதை சொல்லும் ஒருவர்;
நான் படித்தது—“பஸ்ஸிலை சீற் பிடிக்க எப்பிடியெல்லாம் கதை விடுறாங்கள்’

1989ல் வடகிழக்கு மாகாணசபையில் நானும் ஒரு திணைக்களத்தலைவர். இன்னொரு திணைக்களத்தலைவராக எல்லா இடமும் ஓடித்தோற்றுப்போனவர் ஒருவர் என்னைத் தனது நண்பனாக்கிக்கொண்டார். தனக்கு மட்டுமே திறமையும் தகுதியும் இருப்பதாகவும் மற்றவர்கள் பந்தம் பிடித்து பதவிகள் பெற்றதாகவும் குறைகள் சொல்லித்தரிவார். அவரிடம் எச்சரிக்கையாக பழக எண்ணி எனது தகுதிகளையும் குறைத்தே அவரிடம் தெரிவித்தேன். இருந்தாலும் அவர் எல்லோரிலும் குறைகண்டு அவற்றைப்பற்றியே சொல்லிக்கொண்டு திரிவார்.


திடீரென என்னை பதில் செயலாளராக ஆளுநர் நியமனம் செய்தபின் எல்லோரிடமும் குறைகாணும் பேர்வழி என்னை அணுகி தனது பதவி உயர்வுக்கு நான் உதவ வேண்டினார். நாளாக நாளாக வேண்டுகோள் வற்புறுத்தலாகி உபத்திரவமாக வளர்ந்தது பின்னர் தினம் என்னைத்திட்டும் மொட்டைக்கடிதங்களாக ஆளுநரின் அஞ்சல் பெட்டியை நிறைத்தன. ஆளுநர் நட்புரிமையுடன் என்னையழைத்து மொட்டைக்கடிதங்களைக்காட்டினார்.சூத்திரதாரியைக்காண்பதில் எனக்கு சிரமமிருக்கவில்லை.


இனி இப்படியான கடிதங்கள் வராது என ஆளுநரிடம் தெரிவித்த பின் நான் ஊகித்த மொட்டைக்கடித தயாரிப்பாளருடன் வேறு இருவரையும் அழைத்து- ‘நல்ல முறையில் சாத்தியக்கூற்றறிக்கை தயாரிக்கும் ஒருவரை ஆளுநர் திணைக்களத்தலைவராக நியமிக்க விரும்புறார். ஒரு கிழமைக்குள் தயாரித்து ஆளுநர் ஏற்றுக்கொண்டால் அவர் திணைக்களத் தலைவர்’ என்றேன். மொட்டைக்கடிதங்கள் நிறுத்தப்பட்ட இரகசியத்தை ஆளுநர் அறிந்து அவரை எச்சரித்ததாக தகவல்.

கொழும்பில் எனது கடமைக்கு பெற்றோலில் இயங்கும் கார். கந்தோரில் கடமையாற்றும் மற்றவர்கள் நீண்ட தூரம் ஓடித்திரிய டீசலில் ஓடும் ஜீப். டீசல் வாகனம் சொகுசு குறைந்தாலும் செலவு குறைவு. ஜீப் சாரதி கதாநாயக நடிகர் மாதிரி வடிவு-வயது குறைவு.கார் சாரதி வில்லன் மாதிரி- பயங்கர உருவம்.

எனக்குக் கட்டளையிடும் பெண்அதிகாரியிடமும் ஒரு கார். இருந்தாலும் வாரஇறுதியில் எனது டீசல் ஜீப்பில் உல்லாசம் செல்வது பெற்றோல் செலவைக் குறைப்பதற்காக என நம்பினேன்.

ஒருவருக்கும் சொல்லாமல் சாரதிகளின் வாகனங்களை மாற்றியபின் சனிக்கிழமை காலை பெண்அதிகாரியை ஏற்றிச்செல்லச்சென்ற வாகனச்சாரதியின் வில்லன் தோற்றத்தால் என் தொலைபேசி ஏசியது. ‘ என்ன தில்லை. ரௌடி மாதிரி ஒரு ட்ரைவரை அனுப்பியிருக்கிறியள். நான் பெம்பிளை. அதுவும் தூரப்பயணம்’

நான் அமைதியாகச்சொன்னது- ‘மடம் டீசல் வாகனம் எண்டால் இவர் தான் ட்ரைவர். மற்ற ட்ரைவர் தான் வேணுமெண்டால் பெற்றோல் காரைத்தாறன்.’

அதற்குபின்னர் வாகன வேண்டுகோளுமில்லை-சாரதிக்கு கட்டளையுமில்லை.

இவரை உங்களுகுத் தெரியும்- என்னிடமில்லாத கைத்தொலைபேசி நம்பரைத் தரச் சொல்லி ஒரே கரைச்சல். சிலநேரம் வீட்டிலுள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு நான் கைத்தொலைபேசி நம்பர் கொடுத்ததாகவும்- அது தொலைந்து போனதால் திரும்ப சொல்லச் சொல்லியும் கேட்பார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சந்தித்த போது நம்பரைச் சொன்னால்தான் போகவிடுவன் என வழியை மறித்தார்.

ஒருவாறாகச்சமாளித்து நானும் ஒரு கைத்தொலைபேசி இலக்கம் சொல்ல இவர் எழுதிக்கொண்டார். சில நாட்களுக்குப்பின் மீண்டும் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்த போது-


‘என்னை ஏமாத்திப் போட்டியள். நீங்கள் தந்த நம்பர் எப்ப எடுத்தாலும் பிஸி பிஸி எண்டு சொல்லுது’ என்றார். நான் சிரித்தேன்-‘இப்ப ஒருக்கால் எடுங்கோவன்”

அவர் நம்பரை அழுத்திய பின் ’இப்பவும’ பிஸி’ என்றார்.

அவருடைய கைத்தொலைபேசி இலக்கத்தையே எனது இலக்கம் என நான் சொன்னது அவருக்குத்தெரியாது.

இவர் ஒரு vvip (வி வி ஐ பி). உயர்நிலையில் இருப்பதால் மற்றவர்களை மட்டம் தட்டுவார். கண்டபடி திட்டுவார். திட்டும் போது நாலுகால் உள்ளவற்றில் கதிரை மேசை தவிர மற்றச்சொற்களைத் தாராளமாகப்பயன்படுத்துவார். – மாடு-கழுதை-நாய்-பன்றி-

ஒரு தடவை நானும் மாட்டுப்பட்டனான்தான். பின்னர் அவரை நான் படித்தேன். அந்த முக்கிய புள்ளிக்கு ஆங்கிலம் சரியாகத்தெரியாது. தப்பித்தவறி என்னை பார்த்தால் எனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் விளாசுவேன். அவரும் ஆங்கிலம் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொள்வார். ஓகே. ஓகே.

ஒரு தடவை ஆங்கிலத்தில் அவரது குறைகளைச்சொன்னேன். அப்போதும் அவர்

சொன்னது—


ஓகே. ஓகே.

3 comments:

கானா பிரபா said...

முழு மூச்சாய் வாசித்தேன், ரசித்தேன் ;)

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//கானா பிரபா said...
முழு மூச்சாய் வாசித்தேன், ரசித்தேன் ;)//

வாசித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கானா பிரபா. இது இறுதியாய் வந்திருந்த 'இருக்கிறம்" இதழில் வந்திருந்தது. அதில் சுருக்கமாய் இருக்கிறது. இதில் சற்று விரிவாய் இருக்கின்றது.

Paheerathan said...

நானும் படித்தேன் ரசித்தேன். நன்றாயிருக்கிறது. எப்பிடியெல்லாம் எஸ்கேப் ஆகிறாய்ங்கப்பா ஒக்காந்து யோசிப்பாய்ங்களொ ஹி..ஹி...ஹி Ok..OK