Tuesday, August 28, 2007

ஆனந்தமும் நிம்மதியும்

பிறந்த மண் உடுப்பிட்டி – யாழ்ப்பாண மாவட்டத்தின் பல கிராமங்களில் இதுவும் ஒன்று. அக் கிராமத்தில் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆங்கில அறிவுள்ளவர்களே குறைவாக இருந்தபோது சிங்களம் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவாகவே இருந்திருக்க முடியும்.

‘மணிய மாமா’ என்றழைக்கப்படும் சுப்பிரமணியமும், ‘கொழும்பு மாமா’ என்றழைக்கப்படும் ‘நவரத்தினம்’ மாமா அல்லது நவரத்தின’வும் எனது மாமன்மார்

‘’மணிய மாமா’ ஊரிலே செல்வாக்குள்ள ஆசிரியர் அரசியல்வாதிகளுக்கு வேண்டப்படுபவர். பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் முழக்கம் செய்வார். என்னில் நல்ல அன்பு. அவரது துவிச்சக்கர வண்டியில் ஏறி கோவில், கூட்டம், விழாக்கள் எல்லாம் பார்த்திருக்கின்றேன். பலவிதமான சாப்பாடுகளைச் சுவைத்திருக்கின்றேன். அவர் ‘’நாங்கள் சிங்களம் படிக்கக்கூடாது’’ என்ற பிடிவாதத்தையும் என்னில் திணித்தார்.

1963 என்று நினைவு கொழும்பில் ஒரு பொருட்காட்சி. அப்பொருட்காட்சியை பார்ப்பது நல்லது என்று மாமாவின் கடிதம் அப்பாவுக்கு கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக ‘’நவரத்தினம்’’ என்ற கொழும்பு மாமாவின் கொழும்பிலுள்ள வீட்டுக்குச் சென்றேன். அவர் நன்றாக சிங்களத்தில் கதைப்பதால் சிங்கள நண்பர்களின் ‘’நவரத்தின’’வாகத் திகழ்ந்ததை அவருடன் பொருட்காட்சிக்குச் சென்ற போதும் ஏனைய இடங்களில் அவரைத் தொடர்த்த போதும் அறிய முடித்தது. திடீரென்று ஒரு பெரிய வானில் ஐந்து வெளிநாட்டவர் பெரிய பைகளுடன் கொழும்பு மாமாவின் வீட்டுக்கு வந்தனர். மாமா சொல்லித் தெரிந்து கொண்டேன் ‘’ரெனிஸ்’’ விளையாட யப்பான் நாட்டிலிருந்து வந்தவர்கள். விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களில் மாமாவும் ஒருவர். அவரது வீடு பெரிதாகவும் வசதியுள்ளதாகவும் இருந்தால் அங்கேயே பத்து நாட்கள் தங்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மாலையில் பொருட் காட்சியை பார்க்கப் புறப்படுவதற்காக ஆடை மாற்ற ஆரம்பித்தேன். உடுப்பை எடுப்பதற்காக சூட்கேஸ்சை திறந்தேன். என்னால் திறக்க முடியவில்லை சூட்கேஸ்சை திறந்து தரும்படி மாமியைக் கெஞ்சியும் அவரது முயற்ச்சியும் பயனளிக்கவில்லை. எங்களை ஏசியபடி மாமாவால் மேற் கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனங்களும் பலனனிக்கவில்லை. இவற்றைக் கவனித்த ஐப்பான் மாமாவின் முதல் முயற்சியிலேயே சூட்கேஸ் பணிந்து திறந்து கொண்டது. நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது. ‘இல்லை – நாம் மற்றவருக்கு உதவ வேண்டும் என்றார். மாமி தயாரித்த தேநீரை அவருக்கு பரிமாறிய போது தடுமாற்றத்தால் தேநீர் சிறிது அவரது சேட்டிலும் தரையிலும் சிந்திவிட்டது. உடனடியாக மேசையில் இருந்த ‘நப்கின்’ எடுத்து தேநீர் சிந்திய இடங்களை துப்பரவாக்கினார். நான் அவருக்கு உதவ முயன்றபோது அவர் தடுத்தார். முடியுமான வரை மற்றவர்களிடமிருத்து உதவிகள் பெறுவதைக் குறைக்க வேணடும்.

அந்த யப்பானியரும் கொழும்பு மாமாவும் ஆங்கிலத்தில் கதைத்தபோது நன்றாக இருந்தது. சில வேளை மாமா ஏதாவது சொன்னால் அவர்கள் பெரிதாகச் சிரிப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேடடு மாமாவும் சிரிப்பார் அவர்கள் ஏன் சிரிகின்றார்கள் என்று தெரியாமல் முழித்ததுண்டு. அந்த யப்பானியரில் இருவர் என்னுடன் ஆங்கிலத்தில் கதைத்தார்கள். பெயர், ஊர், படிக்கின்ற பாடசாலை பெயர் எல்லாம் ஆங்கிலத்தில் தான் சொன்னேன். அதற்கு பிறகு ஆங்கிலம் வர மறுத்துவிட்டது.

நான் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்களில் யப்பானியர் தமிழில் மட்டுமல்ல கொழும்பு மாமாவுக்கு ஒரு சிங்கள நண்பர் ‘’சிறில்’’ சிறிலின் ஆங்கில அறிவு என்னைவிடப் பரவாயில்லை அவருடன் யப்பானியர் சிங்களத்தில் கதைத்ததையும் கண்டிருக்கிறேன் ஆக...

அவர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் கதைத்தார்கள். சிங்களமும் தமிழும் கதைத்தார்கள். எனக்கு சிறிதேனும் தெரியாத இன்னொரு மொழியும் கதைத்தார்கள். யப்பான் மொழியாக இருக்க வேண்டும்

இந்தப் பன்மொழிப் புலமை பற்றி ஆச்சரியப்பட்ட போது கொழும்பு மாமா சொன்னார்.

யப்பானியர் கையில் ஒரு சிறிய புத்தகம் இருக்கிறது. அதில் நாளாந்தம் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தும் சொற்களும் அவற்றின் சிங்கள தமிழ் கருத்தும் உச்சரிப்பும் இருக்கின்றன். அடிக்கடி அந்தப் புத்தகத்தைத் பார்ப்பார்கள், படிப்பார்கள். இலங்கையில் ஆங்கிலம் தெரியாதவர்களுடன் தமிழிலும் சிங்களத்திலும் கதைப்பார்கள்.

வியப்பு மேலிட மாமாவின் உதவிடன் யப்பானியரிடமிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்.

யப்பான் சொல் ஒன்று- அதற்குப் பக்கத்தில் தண்ணீர். வத்துற என மொழிபெயர்ப்பு- அடுத்து

யப்பான் சொல்- வலது கை- சோத்துக்கை என மொழிபெயர்ப்பு

எனது சந்தேகத்தை யப்பானியரிடமே கேட்டேன் ‘’நீங்கள் பத்து நாட்கள்தான் இலங்கையில் இருப்பீர்கள், ஏன் இப்படிப் படிக்க வேண்டும்?

கிடைத்த பதில்

‘’பத்து நாட்களுக்குள் முடிந்தளவுக்கு இலங்கையிலுள்ள மொழிகளைப் படிக்க முயற்சிக்கின்றோம். ஆனால் உங்களைப் புரிந்து கொள்ளலாம். எங்களுக்கும் உங்களுக்கும் சிரமம் ஏற்படுவதைக் குறைக்கலாம். உதாரணமாக நான் யப்பான் மொழியில் தண்ணீர் கேட்டால் உஙகளுக்குக் தெரியாது.

எனவே தண்ணீர் அல்லது வத்துற என்றால் எவ்வளவு சுகம்? – யப்பானியரின் பேச்சு தொடர்கிறது.

நான் சிரித்தேன் பத்து நாட்களுக்குள் எங்கள் மொழி மூலம் எங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கையில். இந்த நாட்டில் பிறந்து இங்கே வாழும்- வாழபோகும் நாங்கள் இன்னொரு மொழியைப் படித்தால்....’’

எனக்குத் தெரியும் நான் பேசும் சிங்களத்தில் உச்சரிப்புப் பிழை, எழுதும் சிங்களத்தில் இலக்கணப்பிழை – ஆனாலும் என் சிந்தனையை சிங்களவர் புரிந்து கொள்கின்கின்றனார்.

ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் போது எவ்வளவு ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.

4 comments:

Anonymous said...

/இந்த நாட்டில் பிறந்து இங்கே வாழும்- வாழபோகும் நாங்கள் இன்னொரு மொழியைப் படித்தால்....’’

எனக்குத் தெரியும் நான் பேசும் சிங்களத்தில் உச்சரிப்புப் பிழை, எழுதும் சிங்களத்தில் இலக்கணப்பிழை – ஆனாலும் என் சிந்தனையை சிங்களவர் புரிந்து. கொள்கின்றேன்./

இதை நோக்கினை அரசாங்க அதிபராக இருந்த நீங்கள் சிங்கள மக்களிடத்திலும் எதிர்பார்க்கிறீர்களா?

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//இதை நோக்கினை அரசாங்க அதிபராக இருந்த நீங்கள் சிங்கள மக்களிடத்திலும் எதிர்பார்க்கிறீர்களா? //

நிச்சயமாக அனானி..இதே கதை சிங்கள மொழியில் தமிழ் மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கருத்தோடு இரு தடவை வெளிவந்து இருக்கின்றது. அது சரி..ஏன் நீங்கள் அனானியாக வந்து இதை கேட்கவேண்டும்..? உங்கள் பெயரிலேயே கேட்டுவிடுவதினால் தவறொன்றும் இல்லையே..

வெற்றி said...

/* இந்த நாட்டில் பிறந்து இங்கே வாழும்- வாழபோகும் நாங்கள் இன்னொரு மொழியைப் படித்தால்....’’ */

ஐயா, உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழ்மக்கள் ஒரு காலத்தில் சிங்களைத்தை விரும்பிப் படித்தனர். ஆனால் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இனவெறிச் சட்டங்களலை தான் தமிழ்மக்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை.

விரும்பிக் கற்றுக் கொள்வது என்பது வேறு. அது எமது தேவைக்கேற்ற படி நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் எமது தாய்மொழியைப் புறந்தள்ளி நாம் சிங்கள மொழியை மட்டும்தான் கற்க வேணும் என எங்களைத் திணிக்கக் கூடாது. சிங்கள இனவெறியர் இதை எம் மீது திணிக்க முற்பட்டனர்.

இதை சிங்களவரான ஜெகன் பெரரா அவர்களே சொல்கிறார்:

"For instance, in the heartland of the Tamil north, in Jaffna, Buddhist monks had been welcomed as teachers of the Sinhala language, which Tamil children were then willing to learn without any coercion. Today, those laws that caused havoc to national integration and discriminated against minorities...."
[Jehan Perera, Concerns About Judicial Activism, 1996]

நீங்கள் இலங்கையின் பழைய வரலாறுகளை எவ்வளவு தூரம் அறிந்துள்ளீர்கள் என எனக்குத் தெரியாது.

ஆனால் 1930 களில் 'சுய பாசை'[தாய்மொழி] இயக்கம் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழிலும் சிங்களத்திலுமே அரச கருமங்கள் ஆற்றப்பட வேணும் என்றும் பள்ளிகளில் தாய் மொழிகளிலேயே கற்பிக்கப் பட வேணும் என முழங்கிய போது, யாழ்ப்பாணத்தில் இந்து சபையால் நடாத்தப்பட்ட அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் போதிக்கப்பட்டது.

ஆனால் சிங்களப் பாடசாலைகளில் தமிழ் போதிக்கப்படவில்லை. தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள காட்டிய ஆர்வத்தை சிங்களவர்கள் தமிழ் மொழி கற்பதில் காட்டவில்லை என இலங்கையின் வரலாற்று ஆசிரியரான K.M. de Silva அவர்கள் எழுதியிருந்தார்கள்.

ஆக சிங்கள இனவெறி அரசுகளும், சிங்கள வெறியர்களும் தான் மக்கள் நாட்டின் மற்றைய மொழியைக் கற்றுக் கொள்ள முடியாதவாறு செய்தனர்.

ஏன் இன்று கூட சிங்களப் பகுதிகளில் வாழும் பல தமிழர்கள் சிங்கள மொழியைத் தேவை கருதிக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்களவர்கள் ஏன் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் இல்லை.

நான் 2005ல் யாழ்ப்பாணம் சென்ற போது இவற்றை நேரில் பார்த்தேன்.

ஆக குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல பிரிட்டிசார் இனவெறி பிடித்த சிங்ளவர்களிடம் நாட்டை ஒப்படைத்துச் சென்றனர். பல்லின , பல் கலாச்சார நாடாக நாட்டைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.

காரூரன் said...

மொழி கருத்து பரிமாற்றத்திற்கான ஊடகம், எம் மீது சிங்களம் திணிக்கப்படுவதால் சிங்களம் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதை ஒரு கருத்தாக கொள்ள முடியாது. போராடுபவர்களுக்கே தற்பாதுகாப்புக்காக அல்லது கருத்து பரிமாற்றத்திற்காக தேவைப்படுகின்றது. நாம் எம் எதிர்ப்பை காட்டுவதாக இருந்தால் அதற்கு சரியான அணுகுமுறை இருக்கவேண்டும். ஆட்சி எங்கள் கையில் இல்லாததே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதே தவிர சிங்கள மொழி பேசப்படுவதால் அல்ல. தமிழ் மொழி எழுத்துருவம் கணணியில் ஆங்கிலேய அமெரிக்கரான ஜோர்ஜ் கார்ட் என்பவரலாயே முதலில் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (தமிழ் மொழி பீடாதிபதியால்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு தான் தமிழ் பேசும் மக்களால் பாவனைக்கு வந்தது.

My 2 cents.