Friday, August 31, 2007

ஒரு சோக நாடகம் தொடர்கிறது


அன்று நடந்தது-
எனக்கு அது புது அனுபவம். அவளுக்கும் அப்படித்தான்.
இழகக்கூடாததொன்றை இழந்த சோகம். சோர்ந்து போய்ப் படுக்கும் அவள் முகத்தில் தெரிகிறது. மெதுவாக இந்த இடத்தை விட்டு நழுவுகின்றேன். “ஸ் மணி ஏழாகுது. நான் போயிட்டு வாறன். இங்கே நடந்த தொண்டையும் ஒருவரும் சொல்ல வேண்டாம்.

விமலாவின் உறவு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற மனப்பயம் என்னை கொழும்புக்கு இழுத்து வந்தது. எழுதுவினைஞன் வேலை கிடைத்ததும் “கிளப் டான்ஸ் - பொப் இசை என்று அலைந்து கொண்டிருந்த எனக்கு ஜெசிந்தாவின் சினேகம் கிடைக்கிறது. அவளும் ஒரு பாடகிதான்.

ஜெசிந்தா என் வாடகை அறைக்கு வருவதும், வத்தளையில் இருக்கும் அவள் வீட்டுக்கு நான் செல்வதும் வழக்கம். தானும் மகிழ்ந்து என்னையும் மகிழ்வித்த ஜெசிந்தாவிடமிருந்தும் விடுதலை பெற விரும்பி நுவரெலியாவுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டேன்.

“மிஸ்டர் ஆனந்தன் உங்களுக்கு நுவரெலியா ட்ரான்ஸ்பர் கிடைக்சிருக்காம். உண்மையா” ஜெசிந்தா கேட்கின்றாள்.
“ஓம் நான் போக மாட்டன் எண்டுதான் சொன்னனான். கொழும்பை விட்டு இடமாற்றம் செய்ய வேணும் எண்டு சீவ் எக்கவுண்டன்ற் ஒரே பிடியாக நிற்கிறபடியால் ஒண்டும் செய்ய முடியாமலிருக்கு” பாடமாக்கிய வசனங்கள் ஒப்புவிக்கப்படுகின்றன.

அவளின் அடுத்த கேள்வி – “நீங்கள் நுவரெலியாவுக்குப் போகத்தான் வேண்டுமா?
“ஓ....இல்லையெண்டால் வேலையை விட்டு விட்டு வேறை ஏதும்தான் செய்யவேணும். நுவரெலியாவிலை ஆகக்கூடினால் இரண்டு வருடம் தான் வைத்து இருக்கலாம். ஜெசி நுவரெலியாவுக்குப் போனாலும் அடிக்கடி கொழும்புக்கு வருவன். சிங்களச் சோதனை பாஸ் பண்ணினதும் முதல் வேலை எங்கடை கலியாணம்தான் !”
ஜெசிந்தாவின் விரல்கள் என் கரங்களில் படர்ந்திருந்த ரோமங்களை வளையங்களாகச் சுருட்டி விளையாடுகின்றன. அவள் உடலை என் உடல் தீண்டுகிறது. இந்த இன்ப வேதனையால் அவள் சோர்ந்து விடுகிறாள். நான் சோர்வைப் பொருட்படுத்தாமல் என் பெட்டி படுக்கைகளைக் கட்டுகின்றேன்.

என் சதித்திட்டம் தெரியாத ஜெசிந்தா மெதுவாக எழுந்திருந்து குலைந்திருந்த கூந்தலை வாரி, சீப்பாலும் எடுக்க முடியாத சிக்கலை, சிறு விரல்களை கூந்தலுக்குள் நுழைத்து இழுத்த பின் அறுத்த மயிர்களையும் ஆள் காட்டி விரலில் உதிர்ந்த மயிர்களையும் சுற்றி பின் அதை ஒரு சிறு பந்தாக உருட்டி “துப்துப்” என்று துப்பி ஜன்னலூடாக எறிகின்றாள்.

இன்று நடப்பது.
“தாத்தா தாத்தா” – ஒரு குழந்தையின் குரல்.
அகத் திரையில் படமாக ஓடிய பழைய காட்சிகள் - கடந்த கால நினைவுகள் திடீரென்று அறுந்தன.
“தாத்தா உங்களைத் தேடிக்கொண்டு ஆரோ ஒரு தாத்தா வந்திருக்கிறார்” என்று என் பேத்தி மனோகரி சொன்னதும் வெளியே எழுந்து சென்றேன். மனோகரி “ஆரோ தாத்தா” எனக் குறிப்பிட்டது எனது நண்பன் நவரத்தினராசாவைத்தான்.
நவரத்தினமும் நானும் விறாந்தையிலிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். நெடு நாட்களுக்குப் பின் சந்தித்ததால் குடும்பங்களைப் பற்றிய கதைகள் நிறைய வந்தன. ஒரு கட்டத்தில்-
“தவா, நீ சொல்லுறது உண்மைதான். மற்ற ஆக்களோடை எவ்வளவுக்குச் சிரிச்சுக் கதைச்சாலும் எனக்குக் கொஞ்சமும் நிம்மதியில்லை. அந்த வயதிலை ஆடின ஆட்டமெல்லாம் அடங்க வேணுமெண்டதுக்காகத் தான் எனக்கொரு கலியாணத்தைக் கட்டி வைச்சினம். அவள் இரண்டு பெட்டையளைப் பெத்துத் தந்திட்டுச் செத்துப் போயிட்டாள். ஒரு மாதிரி மூத்த மகள் விஜயாவுக்கு கலியாணத்தை முடிச்சன். கொஞ்சம் நிம்மதி எண்டு இருக்கிறபோது அவன் அவளை விட்டிட்டு ஓடிவிட்டான். இப்ப விஜயாவையும் பிள்ளை மனோகரியையும் நான் தான் வைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு. இரண்டாவது ஜெயராணிக்கு மாப்பிள்ளை தேடுறதுக்கிடையிலை உயிர் போயிடும் போலிருக்கு. என்ன செய்யிறது? எல்லாம் தலைவிதி” என் குரல் கம்மியது.
நவரத்தினம் தலையை ஆட்டினான். தலைவிதி எண்டு சொல்லுறதை எல்லாம் நாங்களாகவே தேடிக்கொள்ளுகிற விதி. அந்த நேரம் கண் மண் தெரியாமல் ஆடின ஆட்டத்துக்கெல்லாம் இப்ப அனுபவிக்க வேணுமெண்டு பலன்”
“இந்தப் பெட்டையள் இரண்டுமில்லாட்டி எனக்கொரு பயமுமில்லை. கிடைச்சதைச் சாப்பிட்டிட்டு நினைச்ச இடத்துக்குப் போய் வரலாம்:” என்றேன்.
“நீ நினைச்ச இடத்துக்குப் போய் வரக்கூடாது எண்டதுக்காகத் தான் கடவுள் இரண்டு பெட்டையளைத் தந்து உன்னைச் சோதிக்கிறார். படிக்கிற போதும் கொழும்பிலை வேலை செய்யிற போதும் எத்தினை பெட்டையளை ஏமாத்தினாய்? அந்தப் பாவங்கள் தான் உன்னைப் போட்டு இப்பிடி அலைக்கழிக்கிறது” – நண்பன் என்னைப் பார்த்தான்.
மௌனம் சாதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். தொடர்ந்தும் அவனே பேசினான்.

“ஒருவருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணைக் கெடுக்கிறதுதான் பெரிய பாவம். எப்படியான பாவத்தையும் செய்துவிட்டு தப்பிவிடலாம். ஆனால் ஒரு பெண்ணைத் தொட்டுப் போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவம் சாகிற வரைக்கும் தொடர்ந்தும் வரும். சரி உன்னையும் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கு. ஜெயராணிக்கு ஆராவது நல்ல பெடியன் சந்திச்சால் வந்து சொல்லுறன்.”
நவரத்தினராசாவை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தபோது பூவரச மர நிழலில் மாவிடித்துக் கொண்டிருக்கும் விஜயாவையும், இடித்த மாவை அரித்துக் கொண்டிருந்த ஜெயராணியையும் கண்கள் கண்டன.

யாழ்ப்பாணத்தில் படிக்கும்போது விமலா என்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு “எப்படியும் உன்னையே கல்யாணம் முடிப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்து அவளை ஏமாற்றினேன். அவளை அனுபவித்த பின்பு அவள் வீட்டுப் பக்கமே செல்லவில்லை. பின்பு அவளைப் பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை.
“எனது மூத்த மகள் விஜயாவைப் பார்க்கும் போதெல்லாம் விமலாவின் முகம்தான் தெரிகிறது. நான் விமலாவை ஏமாற்றியது போலத்தான் விஜயாவையும் அவளோடு படித்த மாணவன் ஏமாற்றி, ஒரு குழந்தைக்கும் தாயாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டான். பெற்ற குற்றத்துக்காக விஜயாவையும் அவள் குழந்தை மனோகரியையும் வைத்துச் சாப்பாடு போடுகிறேன்.”

கொழும்பில் வேலை பார்த்த போது என் வாழ்க்கையில் குறுக்கிட்டவள் தான் ஜெசிந்தா என்ற பாடகி. அவளை விட்டுப் பிரிய வேண்டுமென்பதற்காக நுவரெலியாவுக்கு மாற்றலாகிச் சென்றேன். நுவரெலியாவுக்குச் சென்றம் அங்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு. அதை அறிந்த பெற்றோர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் செய்து வைத்தனர். பின்பு ஜெசிந்தாவைச் சந்திக்கவில்லை. அவள் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதவுமில்லை.
ஜெசிந்தாவின் நினைவாக எனது இரண்டாவது மகளுக்கு ஜெயராணி என்று பெயர் வைத்தேன். சிறு வயது முதல் ஆடல் பாடல் முதலியவற்றில் வல்லவளாக விளங்கியவளுக்கு ஆண் சிநேகிதர்கள் பலர் கிடைத்தார்கள். பல சிநேகிதர்கள் கிடைத்தென்ன? எல்லேர்ரும் அவளோடு சேர்ந்து ஆடவும் பாடவும் விரும்பினார்களேயொழிய அவளோடு வாழ்க்கை நடாத்த ஒருவரும் விரும்பவில்லை.
மணமாகாமலே வாழ்விழந்து நிற்கும் விஜயாவும் மணவாழ்க்கையைக்காண முடியாமல் தவிக்கும் ஜெயராணியும் எனக்குப் பாரமாக இருக்கின்றார்கள். அன்று பெண்களால் இன்பம் கண்டவனுக்கு இன்று பெண்களால் தான் அளவிறந்த கவலையும் துன்பமும். நண்பன் நவரத்தினராசா சொன்னது அடிக்கடி என் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“ஒருத்தருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணைக் கெடுக்கிறது தான் பெரிய பாவம். எப்படியான பாவத்தையும் செய்திட்டுத் தப்பியிடலாம். ஆனால் ஒரு பெண்ணைத் தொட்டுப்போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவம் சாகிற வரைக்கும் தொடர்ந்து வரும்”
உண்மைதான்.
ஒரு பெண்ணைத் தொட்டுப் போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவத்திலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது. விமலாவிடமிருந்தும் ஜெசிந்தாவிடமிருந்தும் தப்பிவிட்ட எனக்கு விஜயாவிடமிருந்தும் ஜெயராணியிடமிருந்தும் தப்ப முடியவில்லை.
விமலா – ஜெசிந்தாவின் நினைவுகள் இதயத்தை அரிந்தெடுக்கின்றன. யாரோடு திருட்டுத்தனமாக இணைந்திருந்து இன்பம் கண்டேனோ அவர்களே என்னை வருத்துகின்றார்கள். அன்று எந்த செயல்கள் இன்பமாகத் தோன்றினவோ அவற்றின் விளைவுகள் துன்பச் சுமையாகி என் இதயத்தை அழுத்துகின்றன. நல்லதோ கெட்டதோ ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் உண்டு. அந்த விளைவுகளில் இருந்து ஒருவரும் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது.

‘மனித வாழ்க்கையே ஒரு நாடகம்’ என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. நானும் ஒரு நடிகன்தான். எனது வாழ்க்கை ஒரு சோகமான நாடகம். அந்த நாடகத்தில் என்னேர்டு விமலா- ஜெசிந்தா ஆகியோர் ஆரம்பக் காட்சிகளில் நடித்தார்கள். விஜயா- ஜெயராணி ஆகியோரோடு இப்போது நான் நடிக்கின்றேன். சோகமான நாடகம் தொடர்கிறது......

‘மாணிக்கம் - 1975’

No comments: