Wednesday, August 15, 2007

ஒரு பரபரப்பான பிபிசி பேட்டி – கேட்கத் தயாராகுங்கள்.

நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றெனக் கருதக் கூடிய யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்த போது, யாழ்ப்பாணத்திற்கு அடுத்த மாவட்டமான கிளிநொச்சியின் அரசாங்க அதிபராக நான் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். குறுகிய காலத்தில் ஏறத்தாள ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தது குறித்தும் அங்கு நான் கண்ட மனித பேரவலங்கள் குறித்தும் பிபிசியின் தமிழோசைக்கு 1995 நவம்பர் 7 திகதி நான் பேட்டியாக கொடுத்த போது ஏற்பட்ட எதிர்வினைகள் அதிகம். மறுநாள் அனேக பத்திரிகை அதை முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது என்பதும் , நான் எதிர்கொண்ட நபர்களும் அதற்கு சாட்சி. அவ்வாறான எதிர்வினைகள் சிலவற்றை பட்டியலிட்ட பின்னர் அந்த பிபிசி பேட்டியை ஒலி வடிவில் தரலாம் என நினைக்கின்றேன்.

01. எனது பிபிசி பேட்டியை ஹொங்கொங் ஜேர்னல் பத்திரிகை வெளியிட்டு அதை அங்கிருந்து எனக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

02. அப்போது இந்த பிபிசி தமிழோசைக்கு பொறுப்பாக இருந்தவரும், என்னை பேட்டி கண்டவருமான ஆனந்தி 1997 இல் இலங்கை வந்திருந்த போது , வவுனியாவில் இருந்த என்னை பார்ப்பதற்கு கொழும்பில் இருந்து வந்து, தனது பேட்டி கண்டவற்றில் மேலதிகாரிகளின் பாராட்டை பெற்ற இரண்டு பேட்டிகளில் இது ஒன்றெனவும் தெரிவித்து இருந்தார்.

03. 1999 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் உத்தியோக பூர்வ விடயமாக சீனா சென்றிருந்த போது, சாங்காய் தொலைக்காட்சி கோபுரத்தை பார்க்க சென்றபோது, அங்கு தமிழ்ப் பெண்கள் போல உடையணிந்து இருந்தவர்களை காட்டிய அப்போதைய இலங்கை கல்வியமைச்சர் றிச்சட் பத்திரண “தில்லை, உங்கட ஆட்கள் போல தான் இருக்கு கதைச்சு பாருங்கோ” என்ற போது நான் அவர்களுடன் கதைத்தேன். நீங்கள் இலங்கையில் இருந்த வந்திருக்கின்றீர்களா? எனக் கேட்டேன். அவர்கள் இல்லையெனவும் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் சீனாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும் சொன்ன பின்னர், நீங்கள் இலங்கையில் இருந்தா வந்து இருக்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டனர். நான் ஓம் எண்டதன் பின்னர் என்னிடம் கேட்டனர் உங்களுக்கு தில்லைநடராஜாவை தெரியுமா என்று. நான் என்னை சுதாகரித்துக் கொண்டே கேட்டேன். “எந்த தில்லைநடராஜாவை கேட்கிறீயள், அங்க கன தில்லைநடராஜாக்கள் இருக்கினம்” என்றதும் அவசரமாக இடைமறித்து “இல்லை இல்லை கலெக்டர் தில்லைநடராஜா பேட்டியெல்லாம் கொடுப்பார்” என்றனார். அது நான் தான் என்றதும் அந்த பிபிசி பேட்டியை கேட்டு தாங்கள் அன்றிரவு முழுக்க அழுததாகவும், சொல்லி ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டும், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சென்றனர்.

04. 2006 இல் சிட்னி பல்கலைகழகத்தை சேர்ந்த நண்பர் காந்தராஜா இலங்கை வந்திருந்த போது புத்தகங்கள் வாங்குவதற்கான பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு அவரை அழைத்து சென்றேன். புத்தகங்கள் வாங்கி முடிய அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தோம். தேனீர் அருந்தி முடிந்ததும் காசை கொடுக்க , கடைக்காரர் ஆயிரம் ரூபா மாற்றி தரமுடியாது என்று சொன்னார். இதை கேட்ட கந்தராஜா “இவர் யார் தெரியுமா இவர் தான் தில்லைநடராஜா” என்ற போது “ஓ பேட்டி கொடுத்த சேரா” எனக் கேட்டபடியே..தனது வீட்டுக்கு போன் செய்து தனது மனைவியிடம் “நீ அன்னைக்கு பிபிசி பேட்டி அழுதபடி இருந்தியே, அந்த பேட்டி கொடுத்த சேர் நம்மட கடைக்கு வந்திருக்கார்” என்று சொன்னதோடு, ஆயிரம் ரூபா காசையும் மாற்றி தந்தார்.
(இது 1995-11-08 ஈழநாதத்தில் வந்த செய்தி)

Photo Sharing and Video Hosting at Photobucket

இதை தொடர்ந்து பேட்டி அளிக்கப்பட்ட நாள் குறித்தும், அதற்கு முந்திய சில நாட்கள் குறித்தும் பதிவிட்ட பின்னர் எனது அந்த பிபிசி பேட்டியை ஒலிவடிவில் தரலாம் என நினைக்கின்றேன்.

4 comments:

வெற்றி said...

மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Anonymous said...

நல்லது எதிர்பார்த்து இருக்கிறம். உங்கள் அப்பா என்ற நூல் மிக்க நன்று.
அன்புடன்
தாசன்

மாயா said...

மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அந்தக்கொடுமையை நானும் அனுபவித்திருக்கிறேன் ஐயா மறக்க முடியாத அனுபவங்கள் (இடப்பெயர்வு நடைபெறும் போது நான் 6ம் ஆண்டு படித்துக்கோண்டிருந்தேன்)

santha said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்.