Thursday, August 23, 2007

கன்னத்தில்

(1)
காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை வழியனுப்பி வைக்க வந்த பாலன் சொன்னான். “மச்சான் கொழும்புக்குப் போன உடனே தபால் போடு.....முடியுமெண்டால் நான் சொன்ன சாமான் என்ன விலையெண்டு கேட்டு எழுது”

“போன உடனே முதல் வேலை இதுதான்” என்று சொல்லிவிட்டு “ எங்கடை செல்வராணி கலியாணம் முடிச்சிட்டாளாம் தெரியுமோ?” எனக் கேட்டான் நடராசன்.

“ஓ, பசறையிலை ஆரையோ மரி பண்ணியிருக்கெண்டு கமலா சொன்னது” பதிலளித்த பாலன் நடராசனையும் ஒரு கேள்வி கேட்டாள்.

“இந்திராணியும் யாழ்ப்பாணத்திலைதான் எங்கையோ கலியாணம் முடிச்சிருக்காளாம், தெரியுமோ?”

மற்றவன் சிரிக்கின்றான். “பாலா, இந்திராணியைப் பற்றி ஒவ்வொரு நியூசும் தெரியும். அவளுக்குப் போன மாதம் ஓர் ஆம்பிளைப்பிள்ளை கூடப் பிறந்திட்டுது. இந்திராணி மட்டுமல்ல-என்னோடை படிச்ச எல்லாப் பெட்டையளும் இப்ப என்ன செய்து கொண்டிருக்கினம் எண்டு தெரியும். பெரிய ஈஸ்வரி வாசிற்றிலை படிக்கிறாள். சின்ன ஈஸ்வரி வீட்டிலை இருக்கிறாள். ராஜேஸ்வரி பீப் பிளஸ் ரீச்சருக்கு அப்பிளை பண்ணியிருக்கிறா. சாந்தி தையல் படிக்கிறா. ரஞ்சி வேம்படியிலை நளினி லண்டனிலை...தேவி லவ் மரிஜ் பண்ணிக் கொண்டு கொழும்பிலை...” கட கட வென்று சொல்லிக் கொண்டு போன போது...

“போதும் மச்சான், நீ மன்னன், உன்னோடை கதைக்கேலாது. தெரியாமல் வாய் திறந்திட்டன். மன்னிச்சிடு” என்று இடை நிறுத்தினான் பாலன்.

இரண்டு வாலிபர்கள் சேர்ந்து கதைக்க ஆரம்பித்தால் பெண்களைப் பற்றிய கதைக்கா பஞ்சம்? பின்னரும் சில நிமிடங்கள் வரை நடராசனும் பாலனும் பல பெண்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் நடராசன் இருந்த பெட்டியில் ஓரளவிற்க ஆட்கள் வந்து விட்டனர். அவனுக்கு முன்னாலுள்ள சீற்றிலும் இருவர் வந்து இருந்து விட்டனர்.

ஸ்டேசன் மாஸ்டர் விசில் ஊதியதும் - புகையிரதம் மெதுவாக நகரத் தொடங்கியது. சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க கிழவன் ஒருவனும் இளம் பெண் ஒருத்தியும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

ஓடிவந்த பெண் நடராசன் இருந்த பெட்டியில் தொற்றிக் கொண்டாள். கிழவன் யன்னலூடாக ஒரு பெரிய சூட்கேசைத் தள்ளிவிட்டுப் “போய் தபால் போடு தங்கச்சி என்றார்”

நகரும் புகையிரதத்துடன் சிறிது தூரம் நடந்து வந்த பாலன் ‘செரியோ....ஆளொண்டு உன்னோடை வருது ஏதோ பார்த்து செய்...செரியோ” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.

நடராசன் பாலனுக்கு செரியோ சொன்னான். அந்தப் பெண் கிழவனக்கு செரியோ சொன்னாள்.

“ஆளொண்டு உன்னோடை வருகுது. ஏதோ பார்த்துச் செய்” ரயில் புறப்படும் போது ஏறிக் கொண்ட பெண்ணைக் குறித்து பாலன் சொன்னது நடராசனுக்கு சிரிப்பையும் ஒரு புதுவிதமான உற்சாகத்தையும் கொடுத்தது.

புதிதாக வந்தவள் சூட்கேசை மேலே வைக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் மெல்லிய கை நடராசனின் கைகளின் மேல் பட்டுவிட்டது. அவள் முகத்தை நளினமாக நெளித்துக் கொண்டே “சொறி” சொல்லி முடிப்பதற்குள், அவன் “பரவாயில்லை” என்றான்.

ரயில் யாழ்ப்பாணத்தில் வந்து நின்ற போது நடராசனுக்குத் தெரிந்த சில நணபர்கள் மேடையில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தனர். அவனையும் பக்கத்திலிருந்த பெண்ணையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே “ஆ போயிட்டு வாங்கோ” என்று பன்மையில் சொல்லி வழியனுப்பி வைத்தனர்.

மேடை வழியாக நடந்து வந்த எவளோ ஒருத்தி ஜன்னலூடாகத் தலையை நுழைத்து “ஹலோ, சரஸ் என்ன கொழும்புக்கோ?” எனக் கேட்டாள் நடராசனுக்குப் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து.

பக்கத்திலிருந்தவள் “ ஓம் மண்டே போயிருப்பன். மதருக்கு கொஞ்சம் சுகமில்லை. அதனால் ரூ டேய்ஸ் சிக் அடிச்சனான்” என்றாள் ஆங்கிலமும் தமிழும் கலந்து.

ஓரளவுக்குப் படித்த பெண்களில் பெரும்பாலானோர் இப்படித்தான். ஒழுங்காக ஆங்கிலம் பேசத்தெரியாது. தமிழிலும் கதைக்க வராது. இரண்டு மொழிகளையும் கலந்துதான் மணிப்பிரவாள நடையில் உரையாடுவார்;கள்.

இரண்டு பெண்களும் தொடர்ந்தும் மொழியைக் கொலை செய்யக்கூடாது என எண்ணியதாலோ என்னவோ புகையிரதம் இருவரையும் பிரித்து வைத்தது.

(2)
“சா கொஞ்ச நேரம் இரண்டு பேருங் கதைத்திருந்தால் எவ்வளவு வி~யம் அறிஞ்சிருக்கலாம். இப்பவும் என்ன, இரண்டு சங்கதி வந்திட்டு. ஒண்டு இவ கொழும்புக்குத்தான் போறா. மற்றது இவவின்ர பேர் சரஸ்” என அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த நடராசனை முன்னாலிருந்தவரின் கேள்வி விழிப்படையச் செய்தது.

“தம்பி கொழும்புக்கோ?” என்று கேட்டதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு ஓம் எனப் பதிலளித்தான்.

“நாங்கள் பளையில் இறங்கிவிடுவம். நீங்க நல்ல வடிவாகப் போகலாம்” என்று சொல்லி விட்டு அவனையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்.

நடராசன் கடைக் கண்ணால் அவளைப் பார்;த்தான். ‘கல்கி’ பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனைக் கவனிக்கவில்லை. தனது சூட்கேசைத் திறந்து “பொம்மை” எனும் சினிமாப் பத்திரிகையை எடுத்து விரித்தான் நடராசன். உள்ளமெல்லாம் பக்கத்திலிருந்த பெண்ணைப் பற்றி எண்ணத்தில் இன்பம் கண்டு கொண்டிருக்கும்போது எப்படிப் படிக்க முடியும். திறந்த பொம்மை அப்படியே இருந்தது. அவள் மட்டும் ஒன்றையும் கவனிக்காமல் வாசித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்களிடம் காணப்படும் அடக்கமின்மையால் தான் அவர்கள் பல காரியங்களைச் சாதிக்க முடியாமல் போய் விடுகின்றனர். பெண்கள் உள்ளத்தில் எவ்வளவு ஆசையை வைத்திருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருக்கும் ஆற்றல் அவர்களிடம் இருக்கின்றது. அந்தச் சாமர்த்தியத்தினால் தான் அவர்கள் பல கடினமான காரியங்களையெல்லாம் எளிதிற் சாதித்துக் கொள்கின்றார்கள். நடராசன் பல பெண்களுடன் படித்தவன். ஒரு கலைஞனாகவும் இருப்பதால் கலை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பெண்களுடன் கலந்து கொண்டவன். ஒவ்வொரு பெண்ணைக் காணும் போதும் அவளோடு கதைக்கவேண்டும் நன்றாக பழக வேண்டும், முடிந்தால் அவளையே காதலிக்க வேண்டுமென்ற உணர்வுகள் தான் அவனுள்ளத்தில் துள்ளி எழும்.

அந்த உணர்வுகளுடன் பல பெண்களோடு பழகியிருக்கிறான். அவன் விரித்த ஆசை வலையில் பலர் விழுந்தனர். எப்படியோ சிலர் காதல் வலையில் இருந்து தாங்களாகவே தப்பிக் கொண்டார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலை முதலியவற்றால் சிலரை அவனாகவே வெறுத்துக் கொண்டான்.

நடராசனைப் போல விளையாட்டுத் துறையிலும் கலைத்துறையிலும் பிரபலமான சில இப்படித்தான் நடந்து கொள்கின்றார்கள். இதற்கு அவர்;களைச் சொல்லிக் குற்றமில்லை. படைத்தவன் மேல்தான் பழியைச் சுமத்தவேண்டும்.

பெண்களால் ஏமாற்றப்பட்டதோடு, பெண்களையும் ஏமாற்றியிருக்கும் நடராசனுக்கு பக்கத்தில் இருந்த பெண் மேல் மோகம் ஏற்பட்டது. இந்தளவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருத்தியும், கொழும்பில் இன்னொருத்தியும் இவனது அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் சந்தித்த பெண்ணை ‘விட்டுவிட’ மனம் வரவில்லை.

இப்படித்தான் வீட்டில் சாப்பாடு காத்துக்கொண்டிருக்கும் போது, சிலர் வழியிலுள்ள கடையில் சாப்பிடடு விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்கள். அவர்களுக்கிருப்பதைப் போன்ற மனம் நடராசனுக்கும் இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ”எப்போ பளை வரும்” என்ற எண்ணத்துடன் இருந்தான்.

(3)

பளையை விட்டு ரயில் நகர ஆரம்பித்ததும் பக்கத்திலிருந்தவள் அந்த இடத்தை விட்டு முன்னாலுள்ள சீற்றில் வந்து அமர்ந்தாள். அதுவரை அரைகுறையாகப் பார்த்து ரசிதத அவளுடைய முகத்தை முன்னுக்கு வந்து இருந்தபோது முழுமையாகப் பார்க்க முடிந்தது.

முன்னுக்கு வந்து இருந்தவளை நிமிர்ந்து பார்த்ததும் அவள் புன்சிரிப்பொன்றைப் பரிசாகத் தந்தாள். பதிலுக்கு அவனும் மெல்லிய சிரிப்பைப் பரிசாகக் கொடுத்தான்.

அவள்தான் முதலில் கதைக்க ஆரம்பித்தான். “நீங்க கொழும்புக்கா போறீங்க?”

“ஓம்” பதிலைச் சொல்லிவிட்டு அவள் கேட்ட அதே கேள்வியைத் திருப்பி அவளிடம் அவன் கேட்டான்.

“ஓம் நானும் கொழும்புக்குத்தான் போறன்” அவள் மறுமொழி தந்தாள்.

சில நிமிடங்கள் வரையில் நிலவிய மௌனத்தை மெதுவாகக் கலைத்தான் நடராசன். “உதைக் கொஞ்சம் தர்றீங்களா?”

‘கல்கி’யும் ‘பொம்மை’ யும் கைமாறியது. புத்தகங்களை மாத்திரமல்ல...

“உங்கடை பெயர் சரஸ்வதியா?”

அவன் சிரித்துக்கொண்டே கேட்டான். “உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“யாழ்ப்பாணம் ஸ்டேசனிலை ஒரு பெட்டை வந்து சரஸ் என்று கூப்பிட்டு உங்களோடை கதைச்......” சொல்லி முடிப்பதற்குள்....

“உங்கடை பெயரென்ன?” என்றாள் சரஸ்வதி.

“நடராசன்! ப்ரண்ட்ஸ்மார் எல்லாம் ‘நடா’ என்றுதான் கூப்பிடுறவை” சரஸ்வதியும் தன்னை ‘நடா’ என்று அழைக்க வேண்டுமென்பது அவன் ஆசை.

“எங்கே நீங்கள் வேலை செய்றீங்க?” அவள் கேட்டாள்.

“டிப்பார்ட்மெண்டிலை கிளார்க்” விடையளித்துவிட்டு அவளை வினாவினான்.

“நீங்கள்...”

“நான் மினிஸ்ரியிலை டைப்பிஸ்ட்..” சரஸ்வதியும் தான் வேலை செய்யும் காரியலயத்தை சொன்;னாள்.

“எப்படி சிங்களம் எல்லாம் பாஸ் பண்ணியிட்டீங்களோ?” இது நடராசன்.

“இல்லை. சோதனை எடுத்தனான், பெயில்..”

கேலியாகச் சிரித்தான் நடராசன். “ஐயோ....நான் வந்து இரண்டு வரிசத்திலை எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணினனான். அதுகும் ஒழுங்காகப் படிக்கயில்லை. படங்கள் அப்படி இப்படியென்று முஸ்பாத்தியா திரிஞ்சிட்டு...”

பெண்களை சிறர் கேலி செய்யும்போது எதையாவது சொல்லி, அவர்களுக்கு இயல்பாகவே எழும் வெட்கத்தை மறைத்து விடுவார்கள். சரஸ்வதியும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. “எங்களுக்குச் சிங்களம் தேவையில்லை. சும்மா எழுதினது தானே!”

“இல்லை சரஸ்......உங்கடை ரான்ஸ்வர், புறமோ~ன் அதுகளுக்கு சிங்களம் பாஸ் பண்ணியிருந்தால் நல்லதுதானே!” என்றான்.

“மிஸ்டர் நடா!” சரஸ்வதிதான் அவனை அழைத்தாள். அந்த அழைப்பு ஏற்படுத்திய இன்ப உணர்ச்சியை நடராசன் அனுபவிக்கும் போது....

“நீங்கள் சாப்பிட்டீங்களா?” அவள் கேட்டபோதுதான் சாப்பாட்டைப் பற்றி யோசித்தான்.

“இல்லை ஆறுதலாகச் சாப்பிடுவம்” சொல்லிவிட்டு “நீங்கள்?” என்றிழுத்தான். அவளின் நிலையை அறிவதற்காக.

சரஸ்வதியின் தாழ்மையான வேண்டுகோள், “அந்த சூட்கேஸை எழுத்துத் தாங்கோ”

மேலே வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ்கள் கீழே இறங்கின. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவன் தன்னுடைய சூட்கேசிலிருந்து இடியப்பப் பார்சலை எடுத்தான். அவளும் தனது சூட்கேசை மேலே வைக்கும் படி பணித்தாள்.


நடராசனின் கைகள் பார்சலை அவிழ்த்தன. “என்னுடைய பார்சலைப் பார்த்து பயப்பிடாதையுங்கோ. நான் கொஞ்சம் கனக்கத்தான் சாப்பிடுறது. என்ன இருந்தாலும் வயித்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாது தானே! அம்மா இருபத்தைஞ்சு இடியப்பமும் இரண்டு முட்டையும் பொரித்துக் கட்டித் தந்தவ!”

“இருபத்தைஞ்சோ?” கேலியாகக் கேட்டுக்கொண்டே அவளும் தனது பார்சலை அவிழ்த்தாள்.

“என்னப்பா நீங்களும் இடியப்பமா கொண்டு வந்தனீங்கள்?” என்பதற்குள்...

“ஓ...உங்களுக்கு இருபத்தைஞ்சு இடியப்பமும் போதாவிட்டால் சொல்லுங்கோ. இதையும் தாறன்” என்றாள் சரஸ்வதி.

“நான் சாப்பிட்டிட்டுப் போதாவிட்டால் கேட்கிறன். உதென்ன ஏழெட்டு இடியப்பம் தானே! ஒரு வாய்க்குப் பத்தாது. ஏன் தெரியுமா பொம்பிள்ளையள் கொஞ்சமாக சாப்பிடுறது?” அவளைக் கேட்டாள்.

சரஸ்வதி “தெரியாது சொல்லுங்கோ”

“பொம்பிளையள் தானே சமைக்கிறது. அவை சமைக்கிற சாப்பாடு ருசியில்லை, நல்லாயில்லை என்று அவைக்கே தெரியும். ஆனபடியால்தான் கொஞ்சமாகச் சாப்பிடுறவை” நடராசனின் கேலியைப் பொறுக்க முடியாததால்...

“அ..காணும்.....காணும்” என்றாள்.

இருவரும் கைகழுவிக்கொண்டு வந்து இருப்பதற்கும் ரயில் அநுராதபுரத்தை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

“அப்பாடி! அநுராதபுரம் வந்திட்டு. இன்னும் அரைவாசித்தூரம்!” சரஸ்வதியின் பெருமூச்சு. அரைப்பங்கு தூரம்தானே இருக்கிறது என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் மலர்ந்தது. ஆனால் அவனுக்கோ....

“ஐயோ அநுராதபுரம் வந்திட்டுதே! இன்னும் அரைவாசித் தூரம் தானே இருக்கு. அதுக்கிடையில என்னத்தை செய்யிறது? என்னத்தைக் கதைக்கிறது. அதுவும் ஆக்கள் ஆரும் இந்தச் சீற்றுக்கு வராமல் இருக்க வேணும்!”உள்ளததில் எழுந்த ஏக்கம் அவன் முகத்தில் பிரபலித்தது.

சாதாரணமாகப் பிரயாணம் செய்யும் போது ரயில் பறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சீற்றுக்கடியில் படுத்துவிடுவான் நடராசன். அழகுப் பெண் ஒருத்தி அருகில் இருக்கும்போது கண்ணில் உறக்கம் எப்படி வரும். அவளுக்கும் தூக்கம் வரவில்லை!

“சரஸ், உங்களுக்கு நித்திரை வரவில்லையா?” உரிமையுள்ளவன் போலக் கேட்டான்.

அவளது பதில்! “ நான் றவல் பண்ணுகிறபோது நித்திரை கொள்கிறதில்லை.”

“எனக்கெண்டால் கெதியாக வந்திடும். இண்டைக்கென்னவோ நித்திரையைக் காணன்” அவன் சொன்னதன் அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டதாக் காட்டிக்கொள்ளவில்லை.

“ஆ..அந்த இது...” தொடர்ந்து சொல்ல முடியாமல் நடராசன் தவித்த போது சரஸ்வதி தன் கண்களாலே “எந்த எது?” எனக் கேட்டாள்.

“இந்த தமிழ் ரைப்பிங் எப்பிடி சுகமா? எனக்குப் பெரிய கரைச்சலாய்க் கிடக்கு. சிங்களம் பாஸ் பண்ணியிட்டன். ரைப்பிங்கும் பாஸ் பண்ணினால் தான் வேலையிலை ‘கொன்போம்’ பண்ணுவாங்களாம்” அவன் தொடர் கதைக்கு வித்திட்ட போது அவளும் சேர்ந்து கொண்டாள்.

“நடா தமிழ் ரைப்பிங் அவ்வளவு கரைச்சலில்லை. கொஞ்சம் பழக வேணும். இரண்டும் மூன்று மாதத்திற்கு அடிச்சுப் பழகிக்கொண்டுவரச் சரியாகப் போயிடும்.”

“நீங்க சொல்கிறது சரிதான் சரஸ், இங்கிலீசெண்டால் கண்ணை மூடிக்கொண்டு அடிக்கலாம். கப்பிற்றல் எழுத்து வாறபோது மட்டும் உயர்த்தி அடிச்சால் காணும். தமிழ் ரைப்றைடரிலை இந்த மூலையில விசிறி இருக்கும். அந்த மூலையில குற்று இருக்கும். ஒவ்வொன்றையம் தேடிபிடிச்சு அடிக்கிறதென்றால்....”

“நடா நீங்கள் “கீ” போர்ட்டைப் பாராமல் அடிச்சுப் பழகினால் கெதியாய் பிக்- அப் பண்ணலாம்.

“ஓ நீங்க ரைப்பிஸ்ட் தானே! அதுதான் இப்படிச் சொல்றீங்கள்.கீ போர்ட்டைப் பார்த்தே அடிக்க முடியாமல் கிடக்கு. பாராமல் அடிச்சன் என்றால் நல்லாயிருக்கும்.”

சரஸ்வதி சிரித்தாள். “அப்படியென்றால் நான் சொல்கிற சிஸ்டத்தை போலோ பண்ணினால் சுகமாகப் பழகலாம். முதல் உயிரெழுத்து இருக்குது தானே! ஆனா..ஆவன்னா அதுகள் இருக்கிற இடத்தைப் பார்த்து வைக்க வேணும். பிறகு மெய்யெழுத்து. பிறகு சின்ன சின்ன சொல்லுகள்...இப்ப உதாரணமாக அப்பா, அம்மா ஆடு மாடு அதுகளை அடிக்கப் பழகினால் சுகம்”

“சரி பார்ப்பம்” நடராசனின் சிந்தனை எங்கோ செல்கிறது.

வேலைகள் சம்பந்தப்பட்ட கதை, சினிமாப் படங்கள் பற்றிய கதை, கல்லூரிக்கதை, இருக்குமு; இடங்கள்- இப்படி எவ்வளவோ விடயங்களை நடராசனும் சரஸ்வதியும் பரிமாறிக் கொண்டார்கள்

(3)

எத்தனையோ பெண்களுடன் பழகியிருக்கிறேன். முதல் முதலில் பழகும் போது, என்னுடன் தனியாக இருந்து கதைக்கும் போதும் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதை அவதானித்திருக்கிறேன். ஆனால் சரஸ்வதியோ எதற்கும் துணிந்தவள் போலப் பழகுகின்றாள். எனக்கிருக்கும் ஆசை அவளுக்கும் இருக்கலாம்” என எண்ணியது நடராசனின் மனம்.

அவளின் எண்ணத்தை அறிவதற்காக ரயிலின் ஆட்டத்திற்கேற்ப நித்திரையில் இருப்பன் மாதிரி இரண்டு மூன்று தடவைகள் அவள் மீது கையைப் போட்டான். கை பட்டவுடன் என்ன சொல்வாளோ? என்ற பயமும் இருந்ததால் ‘சொறி’ சொல்லிக்கொள்ளவும் தவறவில்லை.

‘பரவாயில்லை’ சிரித்தவாறே சொன்னவள். இதைக் கேட்டாள். “நடா ஒரு ஹெல்ப் செய்யவேணும்”

“ஓ...தாராளமாக” நடராசன் ஆயத்தமானான்.

“ஒரு சோடா. நெக்டோ அல்லது ~ரோனா”

“ஓ....வேண்டிவாறன்”....உதடுகளை அசைத்து உள்ளம் அவனைச் சீற்றிலிருந்து எழுப்பியது.

சரஸ்வதி தனது சின்ன மணிபேர்ஸைத் திறந்தாள். “இந்தாங்கோ காசு”

“வேண்டாம் என்னிடம் காசிருக்கு” சொல்ல எடுத்த வாயை மூடிக்கொண்டு, அவளின் உள்ளங்கையிலிருந்த ஒரு ரூபா நாணயத்தை எடுக்கும் போது நைஸாகக் கிள்ளினான். பூவிலும் மெல்லிய கைகளில் கிள்ளியதைக் கூட அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சோடா வாங்கப் போனபோது பல பெட்டிகளைக் கடந்துகொண்டு பல பிரயாணிகளைச் சந்தித்துக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. தூக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களும் அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களும் அவன் கவனத்தைக் கவரவில்லை.

ஆணும் பெண்ணும் அருகருகாக இருந்த இடங்களில்தான் கவனம் சென்றது. ஒரு சீற்றில் ஆணின் மடியில் பெண் ஒருத்தி தலையை வைத்துப் படுத்திருந்தாள். இது போன்ற காட்சிகளை ஒவ்வொரு பெட்டியிலும் பார்த்தான்.

அவர்கள் கணவன். மனைவியாக அல்லது காதலர்களாக இருக்கலாம். அதற்காகப் பல பேர் பிரயாணம் செய்யும் புகையிரதத்தில் நெருக்கமாக நடந்து கொள்வது நல்லாயிருக்குமா? ரயிலில் மட்டுமல்ல பஸ் முதலியவற்றிலும் மக்கள் நடமாடும் பொது இடங்களிலும் இப்படி நடந்து கொள்தல் கூடாது. அவற்றைப் பார்ப்பவர்கள் தாங்களும் அப்படிச் செய்ய ஆசைப்படுகிறார்கள். மற்றவர்கள் செய்வதைப்போலத் தாங்களும் செய்ய நினைக்கும்போது பல விபரீதங்கள் விளைந்துவிடுகின்றன.

சரஸ்வதி குடித்துவிட்டுக் கொடுத்த சோடாப் போத்தலைத் திருப்பிக் கொடுத்து விட்டு வரும்போது, ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் காட்சிகள், அவை நடராசனின் உள்ளத்தின் அடித்தளத்தில் உறங்கிக் கிடந்த உணர்ச்சிகளை – ஆசைகளை மெல்லத் தட்டியெழுப்பின. எப்படியாவது சரஸ்வதியைத் தனது உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவளை நெருங்கினான்.

அப்போது கூட ஒன்றுமே தெரியாத புன்சிரிப்புத் தான்!

துணிந்த பின் எண்ணுவதற்கு இடமேது? அவன் தனது கரங்களுக்கிடையில் உடலை அணைத்துவிட்டான். “இனியென்ன?” என்ற அலட்சியத்துடன்...அவள் கன்னத்தை நெருங்கும் வேளை...

அடுத்த கணம்...

நடராசனின் கன்னத்தில் சரஸ்வதியின் கைவிரல்கள் பதிந்தன.

பலமான ஒரு அடி. ஒரு நாளுமு கலங்காதவனின் கண்கள் கலங்கி விட்டன. மலர் போன்ற மெல்லிய கைகளுக்கு எங்கிருந்துதான் அந்த வலிமை வந்ததோ தெரியவில்லை.

உலகிலேயே பெண்மைதான் மிக மிக மென்மையான தன்மை. அது கூடச் சில சமயம் வன்மையாக மாறிவிடும் என்பதைச் சரஸ்வதியின் கைகள் கன்னத்தில் காயத்தை உண்டாக்கியபோதுதான் அவனால் உணர முடிந்தது.

அவளை அணைக்கத் துடித்த அதே கைகள் தான் வலியெடுக்கும் அவனது கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டிருந்தன. அவன் அழுதான். குரல் தழ தழத்தது. “சரஸ், என்னை மன்னிச்சிடுங்கோ....”

சரஸ்வதியும் அழுதாள். வன்மையைப் பெற்றுவிட்ட மெல்லிய கரங்கள் சேலைத் தலைப்பை எடுத்து, கண்களில் பெருகிய நீர் முத்துக்களைத் துடைத்தன. “நீங்களும் என்னை மன்னிச்சிடுங்கோ. திடீரென உணர்ச்சி வசப்பட்டு அடிச்சிட்டன்”

மன்னிப்புக் கேட்டவள் தொடர்ந்தாள்: “உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் சிரித்துக் கதைச்சது எனது பிழைதான்” தன் தவறை உணர்ந்த பின்பு அவன் செய்த பெரிய குற்றத்தையும் குத்திக் காட்டினாள்... “என்;ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கக்கூடாது.”

(5)

ரயில் மீரிகமத்துக்குக் கிட்ட வந்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த கரித்தூள் நடராசனின் கண்களுக்குள் புகுந்து கொண்டது. அப்போது அவன் அடைந்த வேதனை, கண்களைத் திறக்க முடியாததால் புழுவாகத் துடித்தான். கண்களைக் கைளால் கசக்கிக் கொண்டு இடையிடையே முழித்துப்பார்க்க முயன்ற போது சரஸ்வதி அவனுக்காகப் பதறிக்கொண்டு இருந்தாள்.

சரஸ்வதியின் வருத்தம் நிறைந்த திகைப்பு – “என்ன துடிக்கிறீர்கள்? கண்ணெல்லாம் சிவந்த போச்சு!”

“கண்ணிலை ஏதோ விழுந்திட்டுது. கண் தெரியவில்லை”

“கண்ணைக் கசக்காதையுங்கோ...நான் ஊதி விடுகிறன்” சரஸ்வதி தனது கைகளால் அவனது இமைகளைத் திறந்து கொண்டு வாயால் ஊதினாள். நடராசனுக்கு அடித்தபோத வன்மையாக மாறிய கரங்கள் மீண்டும் மென்மையாகிப் பூவிதழ்களின் நிலைக்குச் சென்றுவிட்டன.

“விடுங்கோ சரஸ். கண்ணைக் கழுவும்”

“நீங்கள் கண்ணைக் கசக்கியிட்டீங்கள். அது கரித்துண்டு கண்ணெல்லாம் கீறியிட்டுது..” சரஸ்வதி சொல்லும்போதே, கண்களில் வேதனையால் மயக்கமாகி விட்டான்.

மயக்கம் தெளிந்தபோது நடராசன், தனது வாடகை அறையில் படுத்து இருப்பதையும், மேசையில் ‘ஒப்ரெக்ஸ்’ (கண் கழுவும் மருந்து) போத்தல் இருப்பதையும் கண்டான்.

“நடா...உன்னுடைய சரக்காதான் உன்னைக் காலமை ரக்ஸியிலை கூட்டிக்கொண்டு வந்து விட்டவ. இந்த ஒப்ரெக்ஸாலை கண்ணைக் கழுவாட்டாம். வசதி யானால் தானே பிறகு வந்து சந்திக்கிறதாம்” பக்கத்து அறையில் இருக்கும் பத்மநாதன் சொல்லிக் கொண்டே கண்களில் மருந்தை ஊற்றினார். நடராசன் சிந்தனையுலகில்....

“பெண்மை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தன்மையுடையதாக இருந்தாலும், அவையெல்லாம் மேன்மையான தன்மைகளே! பெண்மையின் தன்மைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துத் தான் அறிய வேண்டும்” கண்களை மூடிய நிலையிலும் நடராசனின் எண்ணம் விரிவடைந்து கொண்டே போகின்றது.

ஈழநாடு 1972

6 comments:

மாயா said...

ஐயா தொடர்ந்தும் அந்தக்காலத்து கதைகளைத்தரவேற்றுங்கள் அப்பதான் என்போன்ற சிறியோருக்கு ந்தக்காலத்து கதைகளை வாசிக்கலாம்

வந்தியத்தேவன் said...

வணக்கம் ஐயா
நான் உங்களின் ரசிகன் கரவெட்டியைச் சேர்ந்தவன். உங்களை வலையுலகில் காண்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. உங்கள் ஆக்கங்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

மாயா நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

வணக்கம் வந்யதித்தேவன். கரவெட்டியா? நல்லது தொடர்ந்து எழுதுங்கள்

maruthamooran said...

வணக்கம் தில்லை மாமா,

தங்களின் சிறுகதை படித்தேன், அனுபவித்தேன்…….
நீங்கள் குறிப்பிட்ட, பி.பி.சி. பெட்டகத்தினை பதிவுசெய்யவும், ஆவலாக உள்ளேன்…

ஈழத்திலிருந்து(பருத்தித்துறை)….
மருதமூரான்.
(இலத்திரணியல் ஊடகத்துறையாளர்)

Anonymous said...

வாசிக்க இனிமையாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள். உங்களைப்போன்ற ஒரு (ஓரளவு) மூத்த தலைமுறை எழுத்தாளரை இணையத்தில் தரிசிக்க முடிவது இளைய தலைமுறையை ஊக்குவிக்கும். வாழ்துககள்...!
நன்றி.
யாழ் வானம்பாடி
www.vaanampaadi.blogspot.com