Thursday, January 3, 2008

யாராவது வந்தார்களா ? ஏதாவது தந்தார்களா ?

சாதாரண மனிதர்கள் சில தேவைகளை நிறைவேற்ற சில உத்தியோகத்தர்களை நாடும் வேளைகளில் அவர்களைத் திருப்திப்படுத்தா விட்டால் மாறி மாறி அலைவது ஒருபுறம். தமக்குத தேவையானவற்றை எளிதாக பெற்றுக்கொள்ள சில்லறைகளை செலவிடத்தயங்கினால் - தாமதித்தால் பெருந்தொகை செலவாவதுடன் பெருஞ்சிரமங்களுக்கும் முகம் கொடுக்கவும் நேரிடுகிறது. இப்படியாகத் திருப்திப்படுத்தல் ‘இலஞ்சம்’ கொடுத்தல் என பொதுவாக சொல்லப்படுகின்ற போதும் ‘கையூட்டு’ ‘சந்தோஷம்’ ‘அன்பளிப்பு’ ‘SOME THING’ என வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இவ்விடயம் பணம் கொடுத்தலாக- பொருள் வழங்கலாக இடம் பெறுகிறது. வேறு வகையாகவும் திருப்திப்படுத்தல் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது அலுவலகம் ஒன்றில் இடம் பெற்ற சம்பவம்- அந்த அலுவல கத்தில் பிரதம எழுதுநர் பல அதிகாரங்களையும் கொண்டவர். அலுவலகத் தில் கடமையாற்றும் மற்றவர்கள் விடுதலைக்கான அனுமதி சில வகையான கொடுப்பனவு அனுமதி ஆகியவற்றுக்கு பிரதம எழுதுநரின் தயவில் தான் தங்கியிருக்க வேண்டும். அடிக்கடி ஒரு சிகரெட் என ஊதித் தள்ளினால் தான் பிரதம எழுதுநர் இயங்குவார். ஒரு நாளாவது பணம் கொடுத்து சிகரெட் வாங்க மாட்டார். “தம்பி ஒரு சிகரெட் கடனாக- பிறகு வாங்கிப்போட்டுத் தாறன்” என்ற வார்த்தைக்கு சிகரெட்டை இழப்பது அவரு க்கு முன்னால் அமர்திருக்கும் இளைஞன் தான். தினமும் சிகரெட் கடனாகப் பெறுவாரே தவிர திருப்பிக் கொடுப்பதில்லை. தினமும் ஏமாந்து கொண்டிரு ந்த இளைஞன் மனதில் ஒரு புதிய சிந்தனை. சிகரெட்டுக்குப்பதிலாக ஒரு சுக்கானும் அதனுள் போட்டுப் புகைக்க புகையிலைத்தூளும் வாங்கினான்.

இரண்டு நாள் பிரதம எழுதுநரின் முன்னால் அலட்சியத்துடன் ஆனந்தமாக சுக்கானைப்புகைத்தான். அவனது; ஆனந்தம் நீடிக்கவில்லை. பிரதம எழுதுநரும் யாரிடமிருந்தோ அன்பளிப்பாக ஒரு சுக்கானைப்பெற்று விட்டார். அடிக்கடி பிரதம எழுதுநரின் உபத்திரவம்: “ தம்பி கொஞ்சம் தூள்”.
சிகரெட்டை இழந்த இளைஞன் புகையிலைத்தூளையும் பிரதம எழுதுநரிடம் இழந்தான்.

அந்தக் கந்தோருக்கு அவர் பெரியவர். காலையில் வழமையைவிட தாமதமாக வந்தவர் மலசலகூடத்தை பார்வையிட்ட பின் பொருட்கொள்வனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரைக் கூப்பிட்டு மலசலகூடத்தில் வாளியில்லை என கடிந்து கொண்டார். சில நிமிடங்களில் புதிய வாளி வந்து சேர்ந்தது. காலையில் கந்தோருக்குப் பிந்தி வந்த பெரியவர் மாலையில் பிந்திப்புறப்பட்ட போது புதிய வாளியும் அவருடன் சேர்ந்து புறப்பட்டது.
முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் வடபகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடைத்து வளர்ந்திருந்த பூவரசமரத்தின் கீழ் நின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பக்கத்தில் மாட்டு வண்டிலொன்று வந்து நின்றது. வண்டியை ஓட்டி வந்தவன் கான்ஸ்டபிளைக் கேள்விக்குறியோடு பார்த்தான்- “ ஐயா ! குழை விக்கிறதா ?”
–கான்ஸ்டபிள் வண்டிக்காரனிடமிருந்து பொலிஸ் நிலைய குழைக்கு விலையாக பணத்தையும் பெற்றுக்கொள்ள வண்டிக்காரன் மரங்களில் ஏறி குழைமுழுவதையும் வெட்டி கட்டி வண்டியில் ஏற்றும் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்குப் பயப்படாமல் வண்டிக்காரன் சொன்ன பதில்: “ பெரிய ஐயாவோடை கதைச்சு காசு குடுத்துத்தான் குழை வெட்டினனான்”. தன்னை விட யார் பெரிய அதிகாரி அந்தப்பொலிஸ் நிலையத்தில் என இன்ஸ்பெக்டர் தடுமாற அவ்விடத்துக்கு வந்த கான்ஸ்டபிளின் சிரிப்பு: “ மரம் முழுக்க மயிர் க்கொட்டிப்புழு. நான் தான் வெட்டச்சொன்னனான்”. பின்பு கூலி கொடுத்து குழை வெட்டி இடம் துப்பரவாக்கியதாகவும் பணம் பெற்றுக்கொண்டதாகவும் ஒரு செய்தி.

பல ஆண்டுகளுக்கு முன் உயரதிகாரிகள் கந்தோர் வேலைகளோடு மட்டும் இருக்கக்கூடாது. விவசாயம் வீட்டுத்தோட்டம் முதலியவற்றிலும் ஈடுபட்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப் பட்டது மலையகத்தில் கடமையாற்றிய அதிகாரிக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. அலுவலகமருகே அவரது உத்தியோக வதிவிடம் அமைந்தது இன்னும் வாய்ப்பாகப் போய்விட்டது. கந்தோர் கணக்கில் விதை பொருள் பசளை கருவிகள் வாங்கப்பட்டன. ஊழியர்கள் கடமை நேரத்திலும் தோட்ட வேலைகளில் ஈடுபட்டனர். நல்ல விளைச்சல். விளைந்தவற்றை என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்தல் வராததால் அதிகாரி அவற்றை உள்ளுர் விளை பொருள் வாங்கி கொழும்புக்கு அனுப்பும் கமிஷன் ஏஜண்டிடம் கொடுத்தார். அதிகாரி என்பதால் விலையோ எடையோ குறைக்க முடியாது என கவலைப்பட்ட கமிஷன் ஏஜண்டுக்கு இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டது. பீற்றூட் கரட் உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து வரும் மண்ணையும் சேர்த்து நிறுத்து அந்தந்த கிழங்கு வகைகளுக்குரிய விலை போட்டு மண்ணையும் கொள்வனவு செய்ய வேண்டுமென்ற கவலைதான்.

வருட ஆரம்பத்தில் இடமாற்றம் பெற்று வந்த அதிகாரியை அவ்வூர் பிரமுகர்கள் வரவேற்றார்கள். நன்றி தெரிவித்த அதிகாரி முன்பிருந்த அதிகாரிக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் போல தனக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அன்று மாலை ஒரு பிரமுகர் அதிகாரியின் அறைக்குள் நுழைந்து அதிகாரியின் மேசை லாச்சியை மெதுவாகத் திறந்தார். பின் தொடர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் லாச்சிக்குள் ஒவ்வொரு பார்சலை வைத்துவிட்டுச் சென்றனர். பார்சல் ஒவ்வொன்றும் பணக்கட்டு என்பது வெளி வராத செய்தி.

பதவி நிலை உத்தியோகத்தரின் பாரியாருக்கு நகையாசை வர அவர் கணவர் அதை முதலாளிக்கு மொழி பெயர்க்க முதலாளி தொகை எழுதி ஒரு காசோலையைக்கிழித்தார். காசோலை கை மாறியபின் தான் எதிர்பார்த்த தொகைக்கும் எழுதப்பட்ட தொகைக்கும் இடையேயுள்ள இடைவெளி தெரிந் தது. சொறி சொல்லி முதலாளி நீட்டிய காசோலைப்புத்தக புதுத்தாளில் எழுதப்பட்ட தொகை ரொம்ப அதிகமானாலும் தொகைக்கு கீழே முதலாளி யின் கையொப்பம் பதிந்தது. அது சந்தோஷக் கையொப்பம்

காவல் நிலையம் கொண்டு வரப்பட்டவனின் சட்டைப்பையை சோதனையிட்ட அதிகாரி நல்லவர். பையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் அடங்கிய பெட்டியை எடுத்து இன்னொருவரிடம் கொடுத்து பக்கத்திலுள்ள கடைக்கு அனுப்பினார். சென்றவர் திரும்பிய போது அதிகாரி அவரிடமிருந்து விலை குறைந்த உள்ளுர் சிகரெட்டையும் மிகுதிக்காசையும் பெற்று தனது பையில் பக்குவப்படுத்திக்கொண்டார்.

அவர் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறவருபவரிடம் வாகன ஓட்டத்தை பரீட்சிக்கும் போதே சந்தோஷத்தை வாங்கி விடுவார். திணைக்கள அதிகாரிகள் பல முறை முயன்றும் கையும் மெய்யுமாகப்பிடிக்க முடியவில்லை. கடைசி முயற்சியாக திணைக்கள உயரதிகாரி ஒருவர் வேறு பெயருடன் மாறு வேடத்தில் வித்தியாசமான விலாசத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரியாக பரீட்சகருடன் காரில் ஏறி காரைச் செலுத்திய வண்ணம் சட்டைப் பையிலிருந்து எடுத்த என்வலப்பை நீட்டினார். என்வலப்பில் அவரை மாட்டுவதற்காக கையெழுத்து வைக்கப்பட்ட பெருந்தொகைக்குரிய பணத்தாள் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

‘சடின் பிரேக்’ என பரீட்சகர் கத்த- மாறு வேடத்தில் சென்றவர் காரை நிறுத்த-‘கெட்டிக்காரன்’ என்று சொல்லிக்கொண்டே பரீட்சகர் என்வலப்பை வாங்காமல் காரை மீண்டும் இயக்கச்சொல்லி இன்னுமொரு இடத்துக்கு வழி காட்டி அழைத்துச்சென்றார். அந்த இடம் எரிபொருள் நிரப்பு நிலையம்.

கட்டளை பிறப்பிக்க காருக்கு பெற்றோல் இரண்டு லீட்டர் நிரப்பப் ;பட்டது. பரீட்சைக்குச் சென்றவர் என்வலப்பிலிருந்த பணத்தை எரிபொருள் நிரப்பியவரிடம் கொடுக்க மிகுதிப்பணத்தை எரிபொருள் நிரப்பியவரிடம் பெற்றுக் கொண்ட பரீட்சகர் மீண்டும் ‘கெட்டிக்காரன்’ என்ற வண்ணம் காரை செலுத்துமாறு கட்டளையிட்டார்.

முன்பு அபிவிருத்தி அடையாத பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படாததால் அந்தப்பிரதேசங்களுக்கு பொறுப்பாக இருந்த உதவி அரசாங்க அதிபர்கள் பொலிஸ் கடமைகளையும் செய்தனர். உதவி அரச அதிபர் பணிமனையில் ஆட்களை அடைத்து வைப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் கம்பிக்கதவுடனும் கூடிய அறையொன்றும் அமைக்கப்பட்டி ருக்கும். குழப்பம் விளைவிப்போர் உதவி அரச அதிபரால் உள்ளே தள்ளப் பட்டு கம்பி எண்ணிய காலமும் இருந்தது. பொலிஸ் கடமைகளை செய்தவர் லஞ்சம் வாங்குவதிலும் வல்லவர் என்ற செய்தி அந்தப்பக்கத்தில் பரவியது. எப்படியும் அவரை மாட்டிவிடவேண்டும் என ஒருவர் ஓடித்திரிந்த சங்கதியும் உதவி அரச அதிபர் காதில் விழுந்து விட்டது.

ஒரு புதன்கிழமை பொது மக்கள் கூடும் நாளில் மாட்டிவிட நினைத்தவர் கையில் பெரிய கோவையுடன் காத்திருந்தார். கோவையினுள் இலஞ்ச திணைக்கள உத்தியோகத்தர்கள் கையொப்பமிட்ட காசு மறைத்து வைக்கப் பட்டிருந்தது. மக்களோடு மக்களாக இலஞ்ச திணைக்கள உத்தியோகத்தர் இருவர் வேட்டைக்கு ஆயத்தமாக இருந்தனர். உதவி அரச அதிபர் ஒவ்வொருவராக உள்ளே அழைக்க வரிசை நகர்ந்தது. அவரைக் காசு கொடுத்து பிடித்துக்கொடுக்க திட்டமிட்டவரும்-கையும் மெய்யுமாக பிடிக்க எண்ணி கொழும்பிலிருந்து வந்தவர்களும் அவரது அறையை நோக்கி மெதுவாக நகர்ந்தனர். புதுமுகங்களைக்கண்டு சந்தேகம் கொண்ட ஒரு உள்ளுர்வாசி ஒரு துண்டில் செய்தியை எழுதி சிற்றூழியர் மூலம் விரைவாக உள்ளே அனுப்பினார். உதவி அரச அதிபர் அச்செய்தியை வாசிக்கவும் பிடித்துக் கொடுக்க திட்டமிட்டவர் உள்ளே நுழைந்து காசை நீட்டவும் சரியாக இருந்தது.

கதிரையை இழுத்துக்கொண்டே எழும்பிய உதவி அரச அதிபர் தட தடவென வந்தவர் கன்னத்தில் அறைந்தார்: “ என்னடா காசு தந்து இலஞ்சம் கொடுத்து அலுவல் பார்க்கலாம் எண்டு நினைச்சாயோ. உன்னை என்ன செய்யிறன் பார்” என்று கத்திக்கொண்டே கம்பிக்கதவுக்கு பின்னால் தள்ளி அறையைப் பூட்டி விட்டார். மாலை ஆறு மணிக்கு ஆட்கள் வெளியேற- ஊழியர்களும் வெளியேற கையும் மெய்யுமாக பிடிக்க வந்தவர்களும் வெளி யேற- உதவி அரசாங்க அதிபர் கம்பிக்கதவைத் திறந்து கோவையையும் காசையும் பறித்தார்: “என்னைப் பிடிச்சுக் குடுக்கவோ பாக்கிறாய். ஓடு. ஓடித்தப்பு.”

சில கடைகளுக்கு முன்னால் ஒரு பலகையில் ‘விலைப்பட்டியல்’ என எழுதி பொருட்களின் பெயரும் விலைகளும் குறிக்கப்பட்டிருக்கும். குறித்த விலையைவிட கூடிய விலைக்கு விற்றால் அல்லது நிறை குறைத்து விற்றால் அல்லது தரக்குறைவான பொருளை விற்றால் நடவடிக்கை எடுக்க சில பரிசோதகர்கள் இருப்பார்கள். அவர்களை கடைகாரர் ஒழுங்காக கவனித்தால் வியாபாரம் லாபமாக இருக்கும் என பலர் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்பரிசோதகர்கள் சிலர் பணம் கொடுக்காமல் தமக்கு தேவையானவற்றை கடைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் ஒரு பரிசோதகர் பல பொருட்களை வாங்கி பணமும் கொடுத்தார். மிகுதிப்பணத்தைக் கொடுத்த முதலாளி பின்னர் தெரிவித்த தகவல்: ‘இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வாங்கி ஐந்நூறு ரூபா பணம் கொடுத்ததாகவும்-தான் BALANCE என்று சொல்லி நாலாயிரம் ரூபா கொடுத்ததாகவும் சொன்னார்’- சரியான கணக்கு தான்.

வெளிநாடுகளிலும் நான் கண்ட காட்சி. லைசென்ஸ்-பெர்மிட் போன்ற அனுமதிப்பத்திரங்களை அல்லது பிரதிகளை தாமதமின்றிப்பெற வேண்டுமானால் விசேட கொடுப்பனவு செய்ய வேண்டும். அக்கொடுப்பனவு SPEED MONEY என அறவிடப்படுகிறது. சில இடங்களில் அந்த அறவீடுகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படுகிறது. சில உத்தியோகத்தர்கள் பெறும் விரைவுக்கட்டணம் SPEED MONEY அவர்களின் பைகளை நிரப்பும் வேளை சில சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டு அடையாள அட்டை போன்றவற்றை அதே நாளில் SAME DAY SERVICE பெறுவதற்காக பகிரங்கமாகவும் பணம் அறவிடப்படுகிறது.

இந்திய தலயாத்திரையின் போது ஸ்பீட்மணிக்கு இன்னோர் அர்த்தமும் அறிந்து கொண்டேன். சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தால் சில தரகர்கள் விரைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு + வரிசையை முறித்துக்கொண்டு தங்கள் தைரியத்தாலும் செல்வாக்காலும் மூலஸ்தானத்துக்கே அழைத்துச் சென்று தெய்வவிக்கிரகமருகே நின்று தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்தித்தருவார்கள்.

மக்களுக்கும் அநேகமான அலுவலகங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயற்படும் உத்தியோகத்தர்கள் தற்போதைய பதவிப்பெயர் ‘கிராம சேவை உத்தியோகத்தர்’. முன்னைய காலத்தில் இவர்கள் ‘விதானையார்’ என அழைக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் விதானையார் குட்டி ராஜாக்கள் தான். அரிசிக்கூப்பன் வழங்குதல்-வாக்காளர் பட்டியல் பதிவு-வதிவிடத்தை உறுதி செய்தல்-சான்றிதழ் வழங்கல்- டீ.ஆர்.ஓ என அழைக்கப்பட்ட பெரும் பாக இறைவரி உத்தியோகத்தருக்கு சிபார்சுக்கடிதம் கொடுத்தல் உட்பட கிராமத்துச் சண்டை சச்சரவுகளையும் தீர்த்து வைப்பவர் ‘விதானையார்’.

பல ஆண்டுகளுக்கு முன் இடையிடையே என் நண்பரைத் தேடி அவர் வீட்டுக்கு செல்வேன். நண்பரின் தந்தையாரும் ஒரு விதானையார். எனவே அவர் வீட்டில் இல்லாத நேரங்களிலும் அவரைத்தேடி பலர் வருவார்கள். சில கடிதங்கள் விண்ணப்பங்களுடன் பணம் உட்பட பலவிதமான பொருட்களும் வந்து சேரும். ‘லஞ்சம்’ வாங்கக்கூடாது எனச் சொல்லும் விதானையார் அன்பளிப்பு வாங்கலாம்- சந்தோ~மாக தருவதை வாங்கலாம் என்பார். விதானையார் சந்தோ~மாக வாங்கும் பொருட்களில் சாராயமும் அடங்கும். கல்லோயாவில் கரும்பிலிருந்து பெறப்படுவது ‘கல்’ எனவும் களுத்துறையில் தென்னங்கள்ளிலிருந்து பெறப்படுவது ‘பொல்’ எனவும் அழைக்கப்படும். அவை அடையாளம் காணப்படுவதற்காக வேறு வேறு கலர் மூடிகள் போத்தலின் மேல் பொருத்தப்பட்டிருக்கும். விதானையாருக்கு மிக விருப்பமானது- தென்னஞ்சாராயம். அப்போத்தலின் மேல் மூடி பச்சை நிறமாதலால் விதானையாரும் பொது மக்களும் பயன்படுத்தும் குறியீடு- ‘பச்சை மூடி’ ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை பச்சை மூடி தேவையென விதானையார் தெரிவிப்பார். சிலர் தாமாகவே கொடுக்க எண்ணியுள்ள பச்சை மூடிகளின் எண்ணிக்கையையும் முன்கூட்டியே தெரிவிப்பார்கள்.

வெளியே சென்று வீட்டுக்கு வந்ததும் விதானையாரின் முதலாவது கேள்வி: “ யாராவது வந்தார்களா? ஏதாவது தந்தார்களா?”

ஒரு தடவை “ ஓம். நாலு பச்சை மூடி தந்தார்கள்” என என் நண்பர் விதானையாரான அவர் தந்தையிடம் கையளித்த சிறு என்வலப்பில் தென்னஞ்சாராயப் போத்தலுக்கு மேல் மூடப்பட்டு வரும் தகர மூடிகள் மட்டும் நான்கு வைக்கப்பட்டிருந்தது. சாராயப்போத்தல்கள் இல்லை.

அந்த சம்பவத்தின் பின் அவர் கேட்பதேயில்லையாம்- “யாராவது வந்தார்களா? ஏதாவது தந்தார்களா?”

No comments: