Tuesday, January 1, 2008

நான்கு முழ வேட்டி நாலு (அப்பா நூலின் இறுதி இடுகை)

மகாத்மா காந்தியின் போதனைகளாலும் செய்கைகளாலும் கவரப்பட்ட அவர் நாலு முழு வேட்டிதான் உடுத்துவார். அதுவும் வர்ணக் கரை எதுவுமற்ற கதர் வேட்டி. அறுபது எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் கதர் வேட்டி அருமையான பொருளாகி விட்டது. “சுதந்திரத்துக்குப் பிறகு கதர் வேட்டி வாங்கக் கூடிய சுதந்திரமில்லை” என்று சொல்வார்.

“நான் உழைக்கிறேன். நல்ல வேட்டி சட்டை வாங்கித் தருகின்றேன்” என்று சொன்னால் “உடுப்பு சுத்தமாக இருக்க வேண்டும். வடிவாக இருக்க வேண்டும். பெருமை தர வேண்டும். விலை கூடினதாக அலங்காரமானதாக இருக்கக் கூடாது” என்று சொல்வார்.

அப்பா கடை வேலையிலிருந்து நீங்கிய பின்பு விரும்பிக் கேட்கும் பொருட்கள் இரண்டு.

ஒன்று – ‘வாசிப்பதற்குச் சில பத்திரிகைகள்’

இரண்டாவது ‘நாலு முழ வேட்டி’

1990 ஜனவரி மாதம் அவராகக் கேட்காமல் நான்கு வேட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு மகிழ்ச்சி.

மீண்டும் 1990 பெப்ரவரி மாதம் அவரைப் பார்க்கச் சென்ற போது , ‘தம்பி இரண்டு வேட்டி” என்றார்.

“நான்கு வேட்டிகள் எடுத்துக் கொடுத்து ஒரு மாதமாகவில்லை. பிறகும் வேட்டியா? எனது சிந்தனையைப் புரிந்து கொண்ட தந்தையார்.

“தம்பி அந்த வேட்டியள் இருக்கு. அது அங்காலை போறபோது தேவைப்படும்” என்று சொல்லிய தந்தையாரின் கண்கள் வானத்தை நோக்கின. அவை மீண்டும் கீழிறங்கின.

‘இப்போ கட்டுறதுக்கு இரண்டு வேணும்’ என்றார்.

இரண்டு வேட்டிகள் கொடுத்தேன். அவைதான் தந்தையாருக்கென நான் வாங்கிக் கொடுத்த கடைசி வேட்டிகள்.

1990 மார்ச் மாதம் தந்தையார், அவருக்கு விருப்பமான நாலு முழ சாதாரண வேட்டியுடன் தனது யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டாலும் தினமும் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு பாடத்தைப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

1 comment:

Anonymous said...

I enjoyed reading it.

/இரண்டு வேட்டிகள் கொடுத்தேன். அவைதான் தந்தையாருக்கென நான் வாங்கிக் கொடுத்த கடைசி வேட்டிகள்./ After reading this I feel very sad.

Ravi