Monday, September 2, 2013

உறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத்தில் வெளியானது

உறவாடுதல் நல்லது...

உடுவை எஸ்.தில்லைநடராசா








சுழலும் உலகில் சுற்றிகொண்டிருக்கிறோம்; எம்மைச்சுற்றி சில உறவினர்கள், நண்பர்கள்.நம்மில் பலர் அவர்களுடன் உறவுகளை தொடர்புகளை பேணிக்கொள்வது குறைவாகத்தான் உள்ளது.ஏதாவது தேவை என்றால் இல்லாத உறவுகளையோ அல்லது தூரத்துச்சொந்தங்களையோ கொண்டாடுவதும் ஒன்றுமே தேவைப்படாதபோது ஒதுங்கிப் போவதும் வழக்கம்.

அரச ஊழியர்கள் பொதுவாக பொதுமக்களுடன் நல்லுறவை உருவாக்கி, வளர்த்து நிலையானதாக்கிக் கொண்டால் கடமைகளைச் சிறப்பாகச் செய்யலாமென்பதுடன், சேவையில் நீடிக்கஉதவியாகவும் அமையும். தனிய அது ஒரு காரணம் மட்டுமல்ல; ஆனாலும் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

ஒருவர் என்னைப்பார்ப்பது போல நான் உணர்ந்தால் மெல்லியதாகச்சிரிப்பேன். அவரும் மெதுவாகச் சிரித்தால் காலப்போக்கில் அது கதை பேசி கருத்துக்களை பரிமாறும் அளவுக்கு வளர்ந்துவிடும். அந்த நட்புறவு ஆபத்துவேளைகளில் உடனிருந்து உதவும் அளவுக்கு உயர்ந்ததுமுண்டு.

1970 களில் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றிய திருப்பரங்கிரி எனது நெருங்கிய நண்பரானார். 1980 களில் கொழும்பில் அவரைக் கண்டபோது அவர் என்னை ஒரு நாளும் காணாததுபோல நடந்துகொண்டபோது, ‘என்ன திருப்பரங்கிரி என்னோடு கோபமா ?’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, தான் திருப்பரங்கிரியின் சகோதரன் அருணகிரி எனவும் தாங்கள் இரட்டையர்கள் (Twins )என்றார்.

சில நாட்களுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் அருணகிரி என்னை நோக்கியபோது,’ஹலோ அருணகிரி’ என்றதும், தான் திருப்பரங்கிரி என்று சொல்லி வவுனியா நினைவுகளை மீட்டுக்கொண்டார். திருப்பரங்கிரி, அருணகிரி இரட்டையர் என்னைச்சற்று தடுமாற வைத்தாலும் இரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.

இது போல- வீரகேசரி புலோலி நிருபர் தில்லைநாதன் எழுபதுகளில் எனது நண்பரானார். எண்பதுகளில் மன்னாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது செய்தியாளர் தில்லைநாதன் செய்திகள் சேகரித்துக்கொண்திருந்தாரேயொழிய என்னைத் தெரிந்தது போலக்காட்டிக்கொள்ளவில்லை. ‘தில்லைநாதா நான் தில்லைநடரஜா’ என்றதும் சிரித்துக்கொண்டே, தான் தில்லைநாதனின் அண்ணா தர்மகுலசிங்கம்-தினபதி நிருபர் என்றார். தில்லைநாதனும் தர்மகுலசிங்கமும் இரட்டையர்கள். ஒருவர் யாழ் வீரகேசரி நிருபர்; மற்றவர் மன்னார் தினபதி நிருபர். ஒருவரின் நட்புறவால் மற்றவர் நட்புறவு தானாக வளர்ந்தது.

1971 இல் பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுநராக நான் கடமையாற்றினேன். எனது சிரேஷ்ட எழுதுனரக புஹாரி..சில நேரங்களில் காரணமில்லாமல் எரிந்து விழுவார். நான் பொருட்படுத்துவதேயில்லை. 1972 கிளாஸ் ரூ பரீட்சை முடிவுகள் வெளியானதும் நிலைமை மாறி புஹாரி எனக்குக்கீழ் வேலை செய்ய வேண்டியவரானார். நான் வேறுபாடு காட்டாவிட்டாலும் அவர் மனம் குறுகுறுத்ததை உணரமுடிந்தது. பின்னர், 1979 இல் நிர்வாகசேவை பதவி உயர்வுடன் மட்டக்களப்புக்கு கூட்டுறவு உதவி ஆணையாளராக சென்றபோது என்னை மனதார வாழ்த்தி வரவேற்ற காதர், புஹாரியின் அண்ணன் என தன்னை அறிமுகப்படுத்தி வேண்டிய உதவிகளை செய்தார்.

1975 இல் வவுனியாவில் எழுதுவினைஞனான என்னை சனிக்கிழமை வேலைக்குச் செல்ல மறுத்ததற்காக எனது மேலதிகாரியாக இருந்தவர்  என்னை கொழும்புக்கு இடமாற்றி விட்டார். சிரித்துக்கொண்டே நன்றி சொல்லி விட்டு வந்தேன். இன்று அந்த மேலதிகாரியும் நானும் ஒன்றாக ஒரே தரத்தில் ஒரே வேதனத்தில் வேலை செய்கின்றோம்.அவர் மட்டுமல்ல- முன்னர் எனது மேலதிகாரிகளாக இருந்த இன்னும் இருவர் என்னோடு வேலை செய்கின்றார்கள். எல்லோரும் சமதரத்தினராக கடமையாற்றுகின்றோம்.

1983 இல் வவுனியா கூட்டுறவு அலுவலகத்தில் திருமதி சீலன் எனது தட்டெழுத்தாளர். பின் அவசர புனர்வாழ்வு புனரமைப்பு திட்ட அலுவலகம் சென்றபோது பிரதம எழுதுனராக திரு. சீலன். 1998 இல் கலாசாரபணிப்பாளராக நியமனம் பெற்றபோது கலாசார உத்தியோகத்தராக சீலனின் தங்கை திருமதி பியசீலி தேவேந்திரன். 1999 இல் கல்வி அமைச்சு மேலதிக செயலாளாரானாபோது வவுனியா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக பியசீலியின் கணவன் தேவேந்திரன். நாலு வெவ்வேறு அலுவலகங்களில் அண்ணா- தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததும் பின்னர் அவர்களின் வாழ்க்கைத்துணையாக இணைந்த உறவுகள் என நான்கு பேருடன் கடமையாற்றினேன்.

இன்னும் சொல்லப்போனால் 1967 இல் களுத்துறை பொலீஸ் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிட்டேன். 2010 இல் அரச விமானப்படை பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுவதற்கிடையில் திருகோணமலை கடற்படைத்தளம் உட்பட பல்வேறு பயிற்சி முகாம்களையும் தளங்களையும் பார்வையிட்டுளேன். எல்லாம் உறவாடியதால் கிடைத்தவை. ஓய்வு நிலையிலும் இன்றும் கடமைகளுக்கு குறைவில்லை.

(வீரகேசரி பத்திரிகை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் ” சமகாலம்” சஞ்சிகையில் (2013 ஆகஸ்ட் 01-15) இதழில் கடைசிப் பக்கம் ஒதுக்கீடு செய்து தந்த ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் ஆகியோருக்கு நன்றி)

No comments: