Friday, October 26, 2007

பேனாவை மட்டும் பிடித்தால் போதுமா?


அப்பா சாப்பாட்டுக் கடையில் சமையல் வேலை செய்தாலும் எனக்கு அத்தொழிலை பழக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்தார். வீட்டுக்கு வரும் நாளிளும் சும்மா இருக்கமாட்டார். மண்வெட்டி, கோடரி, கத்தி அலவாக்கு என்று ஏதாவது ஒரு ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பார்.

வேலைக்குச் சேர்ந்த பின் விடுதலையில் சொல்லும் நான் வீட்டு வேலைகள் செய்யப் பின்வாங்கி வாசிப்பு, எழுத்து என்று பொழுது போக்கும் போது சொல்வார்- “பேனவை மட்டும் பிடித்தால் போதாது. மண்வெட்டி, கோடாரியும் பிடித்துப் பழக வேண்டும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய ப் பழகினால் வருத்தம் வராது. வீட்டு வேலைகளை நாங்களே செய்ய வேண்டும்” என்று சொல்வார்.

‘கொத்தும் போதும் வெட்டும் போதும் சிந்திக்கலாம். பிறகு அந்தச் சிந்தனையை எழுதலாம் என்பார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போட்டி. அம்மா இறப்பதற்க்கு முன்பாக தான் இறக்க வேண்டும் என்பார் அப்பா. அப்பா இறப்பதற்க்கு முன்பாக தான் மஞ்சள் குங்குமத்துடன் போக வேண்டும் என்பார் அம்மா. அம்மா இறந்தபோது அப்பாவால் எப்படி அந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமே!

இறுதிக் கிரியைகள்- பல வேலைகள்- அந்தியேட்டிக்கான ஆயுத்தங்கள். எனக்கு பெருமளவில் நண்பர்கள். எனவே சமையலுக்கு விறகுக்காக லொறியில் பெரிய மரங்களைக் கொண்டு வந்தேன்.

‘கூலி ஆட்களைக் கொண்டு வந்து கொத்த கூடாது’ அப்பாவின் உத்தரவு.

தானே கொத்த தொடங்கினார். எனக்கு மனம் கேட்கவில்லை.

“ பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக கூலி ஆட்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கை. பிள்ளைகளாகிய நீங்கள் பணத்தைச் செலவழிப்பீர்கள். என்னிடம் உடல் வலு இருக்கின்றது. மனம் சோர்வடையவில்லை. அம்மாக்கும் எனக்கும் நடந்த போட்டிகளில்லெல்லாம நானே வெற்றி பெற்றிருக்கிக்கின்றேன். முதலில் யார் போவார்கள் என்ற போட்டியில் நான் தோத்து போய்ட்டேன். ஆனபடியினால் அம்மாவின் நினைவுக் சமையலுக்கு நானே விறகு கொத்துவேன்.”

அப்பாவை யாராலும் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் பேனா பிடிக்கும் எனக்கு மண்வெட்டியோ கோடரியோ பிடிக்கத் தெரியாது.

4 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

வணக்கம் ஐயா.
பதிவுகளைப் பார்த்தேன். தற்செயலாக இணையத்தில் உலாவருகையில் ஈழத்துப்பதிவுகளில் தங்களது வலைப்பக்கத்தைப் பார்த்தேன். பெரியவர்கள் சொல்லும் நற்கருத்துக்கள் பலவற்றை அப்போது நாம் சுவைத்துப்பார்ப்பதில்லை. சுவைத்துப்பார்க்க முற்படும்போது காலம் கடந்திருக்கும். மேலும் தகவல்களைப் பரிமாறுங்கள்.
நன்றி

வந்தியத்தேவன் said...

வணக்கம் ஐயா
உங்களது அப்பா நாவல் என்னிடம் இருக்கின்றது. மிகவும் ரசித்துப் படித்தேன். உங்கள் தந்தையாரின் திறமைகளை மிகவும் அழகாகவும் ரசனையாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஒழிவு மறைவின்றி எழுதியது தான் மிகவும் ஆச்சரியம்.
பெரும்பாலானோர் அம்மாக்களைத்தான் போற்றுவார்கள் ஆனால் நீங்கள் அப்பாவைப் போற்றி எழுதியவற்றை மல்லிகையில் தொடராக வரும்பொழுதும் பின்னர் புத்தகமாகவும் படித்தேன்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

(நற்கருத்துக்கள் பலவற்றை அப்போது நாம் சுவைத்துப்பார்ப்பதில்லை. சுவைத்துப்பார்க்க முற்படும்போது காலம் கடந்திருக்கும்.)

நிர்ஷன் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//ஒழிவு மறைவின்றி எழுதியது தான் மிகவும் ஆச்சரியம்.//

நன்றி வந்தியத்தேவன் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.