Wednesday, October 24, 2007

எண்ணிக்கை ஒரு நம்பிக்கை

சித்திரை வருடப் பிறப்பன்று இரவு சாமி கும்பிடும் அறையில் குத்து விளக்கை ஏற்றிவைத்து அப்பா அம்மாவுக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் கைவிசேடம் தருவார். வெற்றிலையில் நெல்மணி, மஞ்சள், தாள்காசு, சில்லறைக் காசு வைத்துத் தருவார். அம்மா மட்டும் காசோடு நெல்லு, மஞ்சள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்ப்பார். எண்ணும் போது உருப்படிகளின் எண்ணிக்கை ஒற்றை எண் உடையதாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பு.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா கைவிசேடம் வாங்கி உருப்படிகளை எண்ணி இருபத்தியெட்டு என்று சொல்லிக்கொண்டே என்னையும் எண்ணிப் பார்க்க சொன்னார். நானும் எண்ணியபோது இருபத்தியெட்டுதான் இருந்தது. ஆனால் அவற்றை அப்பா வாங்கி எண்ணும் போது இருபத்தியொன்பது இருந்தது.

எனக்கு திருமணமாகிய பின்னரும் சிலகாலம் அப்பாவிடம் கைவிசேடம் வாங்கினேன். அப்போது ஒரு நாள் அம்மா உருப்படிகளை எண்ணியபோது இருபத்தியெட்டு. நானும் எண்ணினேன் - இருபத்தியெட்டு. ஆனால் அப்பா அவற்றை வாங்கி எண்ணும் போது இருபத்தொன்பது. அப்பா வெகுஇலாவகமாக விரல்களிடையே மறைத்து வைததிருந்த ஒரு நெல் மணியையும் சேர்த்து இருபத்தொன்பதாக்கியதைக் கண்டு விட்டேன்.

“என்ன செய்வது, ஒற்றை விழத்தக்கதாக இருந்தால் அதிஸ்ரம் என்பது அம்மாவின் எதிர்பார்ப்பு. அவரை திருப்திப்படுத்த வேண்டும். இந்த விசயங்களில் மட்டும் அம்மாவை ஏமாற்றியிருக்கிறேன்” என்றார்.

“ஏன்! ஒரு நெல்லை சுகமாக மறைத்து விடலாம் தானே” என்றேன். இந்த விடயத்தில் ஒரு உருப்படி குறைந்தாலும் அம்மாவின் யோசனை கூடும். கூடினால் சந்தோசமாயிருப்பார். அதற்காக ஒரு நெல்லை விரல்களிடையே தந்திரமாக வைத்திருப்பேன்” என்றார்.

No comments: